தென்னகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு... இதுலேயும் இப்படி ஒரு ஏமாற்றத்தை தந்த மோடி!
டிரெயின்-18 பயன்பாட்டிற்கு வந்தால் முக்கிய நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் வெகுவாக குறையும் என்ற ஆவல் இருந்தது. ஆனால், 2020ம் ஆண்டு வரை டிரெயின்-18 என்பது தென்னகத்துக்கு இல்லை என்பதால், டிரெயின்-18 பய
'வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது'! என்ற அண்ணாவின் கூற்றை மெய்ப்பிக்கும் விதத்தில், மத்திய செயல்பாடுகள் இருந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. டெல்டாவையே புரட்டி போட்ட கஜா புயல் பாதிப்புகளை நேரடியாக பார்வையிட பிரதமர் மோடி வராமல் புறக்கணித்துவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில், அடுத்து மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டு இருக்கும் தகவலும் தென்னகத்தை புறக்கணிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. சென்னையில் தயாரிக்கப்படும் டிரெயின் -18 என்ற அதிவேக ரயில்கள் ஒன்றுகூட அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு தென்னகத்துக்கு இல்லலை என்ற தகவல் கிடைத்துள்ளது.

வரும் டிசம்பர் 25ந் தேதி முதல் டிரெயின்-18 அதிவேக ரயில் பயணிகள் சேவைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது தெரிந்ததே. புல்லட் ரயில் கனவில் இருக்கும் இந்தியர்களின் ஆவலை தணிக்கும் அத்துனை அம்சங்களுடன் இந்த ரயில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் இந்த ரயிலை வெறும் 18 மாதங்களில் சென்னை ஐசிஎஃப் பணியாளர்களும், பொறியாளர்களும் இரவு பகல் பாராமல் சேர்ந்து உருவாக்கி இருக்கின்றனர்.

புறநகர் மின்சார ரயில்களை போலவே, இந்த அதிவேக ரயில் தனி எஞ்சின் இல்லாமல், ரயில் பெட்டிகளிலேயே பொருத்தப்பட்டிருக்கும் மின் மோட்டார்களுடன் உந்துசக்தியில் இந்த ரயில் இயங்கும்.

இதனால், மிக விரைவாக வேகம் எடுக்கும் என்பதுடன், குறைவான தூரத்திலேயே நிறுத்தவும் முடியும். இதனால், அதிக மின்சிக்கனத்தை தரும் என்பதுடன், பயண நேரமும் 15 சதவீதம் அளவுக்கு குறையும்.

இந்த ரயிலில் தானியங்கி கதவுகள், டிவி திரைகள், சொகுசான இருக்கைகள், சிசிடிவி கேமரா ஆகியவை பொருத்தப்பட்டு இருப்பதுடன், சுகாதாரமான கழிவறை உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போது வட இந்தியாவில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 180 கிமீ வேகத்தில் சென்று புதிய சாதனை படைத்தது. சதாப்தி ரயில்களுக்கு மாற்றாக இந்த புதிய ரயில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

அதிவேக சோதனை ஓட்டங்கள் வெற்றி கண்டு வருவதால், மேலும் 4 புதிய டிரெயின் 18 அதிவேக ரயில்களை உற்பத்தி செய்வதற்கு சென்னை ஐசிஎஃப் நிறுவனத்துக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் அதிவேக ரயிலாக பெருமை பெற்றிருப்பது தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாக இருந்தாலும், ரயில்வே துறையிடமிருந்து வெளியான தகவலின்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தயாரிக்கப்படும் டிரெயின் -18 ரயில்களில் ஒன்றுகூட தென்னகத்துக்கு இல்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்துள்ளது.

அதாவது, அனைத்து டிரெயின்-18 ரயில்களுமே டெல்லியிலிருந்து இயக்கப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. வரும் 25ந் தேதி மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தன்று, டெல்லியிலிருந்து போபால் ஹபீப்கஞ்ச் தடத்தில் முதல் ரயில் இயக்கப்பட இருப்பதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அடுத்து தயாரிக்கப்படும் 9 ரயில்களுமே வட இந்தியாவிலேயே பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட இருப்பதாக ரயில்வே வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. அதாவது, மருந்துக்கூட உற்பத்தி செய்யப்படும் தமிழகம் அல்லது தென் மாநிலங்களுக்கு இல்லை.

2020ம் ஆண்டு வரை உற்பத்தி செய்யப்படும் அனைத்து டிரெயின் - 18 அதிவேக ரயில்களுமே, புதுடெல்லி - வாரணாசி, புதுடெல்லி- கல்கா, புதுடெல்லி- டேராடூன், புதுடெல்லி - மும்பை, புதுடெல்லி - மொராதாபாத், புதுடெல்லி - பிரயாக்ராஜ், புதுடெல்லி - அமிர்தசரஸ், புதுடெல்லி - ஹவுரா மற்றும் புதுடெல்லி - ஜான்சி ஆகிய தடங்களில்தான் இயக்கப்பட இருக்கிறது.

அண்மையில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடந்த ரயில்வே வாரிய கூட்டத்தில் இந்த தடங்கள் இறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தென்னகத்தை மத்திய அரசு புறந்தள்ளி இருப்பதாகவே கருதப்படுகிறது.

அதிவேக ரயில்களை இயக்குவதற்கு தண்டவாளங்கள் மற்றும் சிக்னல்களில் மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும். இப்போது அறிவித்தால்தான், ரயிலை இயக்குவதற்கு ஏற்ப தண்டவாளங்களையும், அதற்கான கட்டமைப்புகளையும் ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெறும்.

டிரெயின்-18 பயன்பாட்டிற்கு வந்தால் முக்கிய நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் வெகுவாக குறையும் என்ற ஆவல் இருந்தது. ஆனால், 2020ம் ஆண்டு வரை டிரெயின்-18 என்பது தென்னகத்துக்கு இல்லை என்பதால், டிரெயின்-18 பயணம் என்பது தென்னக மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தரும் விஷயமாகவே இருக்கிறது.

சென்னையில் தயாரிக்கப்பட்ட இந்த அதிவேக சொகுசு ரயிலில் ஒன்றுகூட நமக்கு அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு இல்லை என்பது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. மேலும், 2020க்கு பின்னரும், வட இந்தியாவிற்கே முக்கியத்துவம் தரப்படும் என்றும் கருதப்படுகிறது.

நெய்தவனுக்கே சட்டை இல்லை என்பது போல, இப்போது அதிவேக சொகுசு ரயில் சென்னையில் உற்பத்தி செய்யப்பட்டாலும், தமிழகத்துக்கு இப்போதைக்கு இந்த ரயில் சேவை கிடைக்காதோ என்ற சந்தேகம் நிலவுகிறது. தமிழகத்திலிருந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. எனினும், பரிசீலனைக்கு கூட எடுக்கப்படுமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
Image Courtesy: Financial Express


Click it and Unblock the Notifications