டிரைவிங் லைசென்ஸுக்காக ஆர்டிஓ-விடம் அலைய வேண்டாம்.. டிரைவிங் ஸ்கூல்லையே வாங்கிடலாம்! ஜூன்1 முதல் புதிய விதி!
18 வயதான உடன் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கிறாங்களோ இல்லையோ முதலில் ஓடி போய் டிரைவிங் லைசென்ஸுக்கு விண்ணப்பித்த இளைஞர்களே இந்தியாவில் மிக மிக அதிகம். அந்த அளவிற்கு இந்திய இளைஞர்கள் டிரைவிங் லைசென்ஸுக்கு அதிகம் முக்கியத்துவம் வழங்கிக் கொண்டு இருக்கின்றனர்.
ஆனால், இதை உடனே பெற்றுவிட முடியாது. கொஞ்சம் இதற்காக அலைய வேண்டியிருக்கும். வாகனத்தை நன்கு ஓட்ட கற்றிருக்க வேண்டும். சாலை விதிகளை பற்றி முழுமையாக அறிந்திருத்தல் வேண்டும். இதுதவிர, ஆர்டிஓ முன்னிலையில் வாகனத்தை மிக சிறப்பான முறையில் ஓட்டிக் காண்பிக்க வேண்டும். இவை அனைத்தையும் செய்தால் மட்டுமே ஓட்டுநர் உரிமம் நம் கைகளில் வந்து சேரும்.

இதில் சிறிதாக தவறு ஏற்பட்டாலும் ஓட்டுநர் உரிமம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுவிடும். சாலை விதிகள் பற்றி அறியாமல் இருந்தாலோ அல்லது ஆர்டிஓ சொல்லும்படி வாகனத்தை இயக்காமல் போனாலும் உங்களை ஃபெயிலாக்கிவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விடுவார்கள். இவ்வாறு நடக்கும் எனில் மீண்டும் முதலில் இருந்து நாம் பயிற்சி எடுக்க வேண்டியிருக்கும்.
இந்த நிலையிலேயே புதிய விதி ஒன்று இந்த விஷயத்தில் வருகின்ற ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலுக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, டிரைவிங் லைசென்ஸை வாங்க ஆர்டிஓ போக வேண்டாம். அதை டிரைவிங் ஸ்கூல்களையே பெற்றுக் கொள்ள முடியும் எனும் விதியே விரைவில் அமல்படுத்தப்பட இருக்கின்றது.
இப்போது வரை ஓர் நபர் ஓட்டுநர் உரிமத்தைப் பெற வேண்டும் எனில் ஆர்டிஓ அலுவலகம் சென்றே விண்ணப்பிக்க வேண்டும் என்கிற நிலை உள்ளது. ஆனால், புதிய விதி இந்த கட்டாயத்தை தவிர்த்திருக்கின்றது. அரசு தற்போது தனியார் நிறுவனங்களே ஓட்டுநர் விண்ணப்பத்திற்கான சோதனைகளை நடத்த அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது.
எனவே ஆர்டிஓ செய்யும் சோதனைகளை இந்த தனியார் நிறுவனங்களே செய்து ஓட்டுநர் உரிமத்திற்கான விண்ணப்பத்திற்கு ஒப்புதல் வழங்கும். பின்னர் அவர்களே ஓட்டுநர் உரிமத்தையும் வழங்குவார்கள். இந்த புதிய விதியையே அரசு வருகின்ற ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த இருக்கின்றது.
அனைத்து டிரைவிங் ஸ்கூல்களுக்கும் இந்த அங்கீகாரம் வழங்கப்படாது. ஓட்டுநர்களுக்கான சோதனையை மேற்கொள்வதற்கான சாத்தியக் கூறுகளைக் கொண்டிருக்கும் ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படும். குறைந்தபட்சம் 1 ஏக்கர் நிலத்தை அந்த நிறுவனம் கொண்டிருக்க வேண்டும். நான்கு சக்கர வாகனங்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் எனில் அந்த நிறுவனம் வசம் கூடுதலாக 2 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.
இதுதவிர ஓட்டுநர் சோதனைக்கான வசதிகளும் இருத்த வேண்டும். மேலும், மிகப் பெரிய அனுபவமிக்க தகுதியான பயிற்சியாளர்களும் நிறுவனத்தில் இருத்தல் வேண்டும். இவர்கள் உடற் தகுதி மமட்டுமல்ல உயர்நிலை பள்ளி படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பு அல்லது அதற்கு சமமான படிப்பை அவர்கள் பயின்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
மிக முக்கியமாக இந்த துறையில் 5 ஆண்டுகளுக்கும் அதிகமாக முன் அனுபவம் அவர் கொண்டிருக்க வேண்டும். பயிற்சி காலம் இலகு ரக வாகனங்களுக்கு 29 மணி நேரமும், கனரக வாகனங்களுக்கு 38 மணி நேரமும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது. 4 வாரங்களுக்குள் இந்த பயிற்சியை முடிக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலக நாடுகளைக் காட்டிலும் ஓட்டுநர் உரிமம் பெறுவது என்பது மிகவும் சுலபமாக உள்ளது. இதை மேலும் சுலபமாக்கும் பொருட்டே இந்த வேலையை தனியார் வசம் ஒப்படைத்திருக்கின்றது மத்திய அரசாங்கம். அதேவேளையில், ஓட்டுநர் டெஸ்ட்டின்போது கை தேர்ந்த கேமிராக்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் வாயிலாகவே விண்ணப்பதாரர்கள் பரிசோதிக்கப்பட்டு உரிமம் வழங்கும் வேலை மேற்கொள்ளப்பட இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








