தனியார் பஸ் ஒனர் எல்லாம் தலையில துண்ட போட வேண்டியது தான்! நவீன சொகுசு வசதிகளுடன் களமிறங்கிய 150 SETC பஸ்கள்
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்காக நேற்று 150 பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த பஸ்களை பச்சைக்கொடி அசைத்து துவக்கி வைத்தார். மற்ற அரசு பஸ்களை விட இந்த பஸ்களில் ஏராளமான புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பல்வேறு விதமான அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. தனியார் பஸ்களுக்கு இணையாக மட்டுமல்லாமல் விமானங்களுக்கு இணையான வசதிகள் கொண்ட பஸ்களாக இதை உருவாக்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்காக 150 சொகுசு பஸ்கள் வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது 150 சொகுசு பஸ்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் எல்லாம் சரிபார்க்கப்பட்டு நேற்று பச்சைக்கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் இந்த பஸ்களை எல்லாம் துவக்கி வைத்தார்.

நாம் சாதாரணமாக பயன்படுத்தும் மற்ற அரசு பஸ்களை விட இந்த பஸ்களில் ஏகப்பட்ட வசதிகள் இருக்கிறது. தனியார் பஸ்களுக்கு இணையாக மட்டுமல்லாமல் விமானங்களில் உள்ள வசதிகள் கூட இந்த பஸ்களில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சொகுசாகவும், வசதியாகவும் நீண்ட தூரம் பயணம் செய்ய இந்த பஸ்கள் பயனுள்ளதாக இருக்கும்.
மொத்தம் 200 பஸ்களுக்கான ஆர்டர் வழங்கப்பட்டிருந்த நிலையில், 150 பஸ்கள் முதற்கட்டமாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த பஸ்களில் எல்லாம் 15 படுக்கை வசதிகள் மற்றும் 31 இருக்கை வசதிகள் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாக்கியுள்ள 50 பஸ்கள் 20 படுக்கை வசதி, 21 இருக்கை வசதியுடன் கூடிய பஸ்களாக வடிவமைக்கப்பட்டு அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக பஸ்களில் ஏர் சஸ்பென்ஷன் பின்பக்க வீல் பகுதியில் தான் வழங்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த பஸ்களில் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பஸ்ஸில் லோடு பேலன்ஸிங், ரைடு குவாலிட்டி, அதிக எடையை சுமந்து செல்லும் வசதி எல்லாம் அதிகமாக இருக்கும். இதன் மூலம் பயணிகள், பள்ளமேடு வாகனம் செல்லும் போது பெரிய அளவில் அதிர்வுகளை உணர முடியாமல் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இந்த பஸ் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது தீ விபத்தில் சிக்கினால் தீ உருவாகும் போதே அதை கண்டறிந்து பஸ்ஸில் இருக்கும் பயணிகளோ அல்லது நடத்துனர் ஓட்டுனர் உடனடியாக அந்த தீயை அணைப்பதற்காக தீயணைப்பு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இது சீட்டுக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ளது. இதையடுத்து எப்படி ஆப்ரேட் செய்ய வேண்டும் என்ற வழிமுறையும் அதில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பஸ்ஸில் எந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டாலும் அதை உடனடியாக சென்சார் மூலம் கண்டறிந்து வாகனத்தின் இன்ஜின் உடனடியாக தனது செயல்பாட்டை நிறுத்தி விடும். இதனால் தீ விபத்தின் போது வாகனம் தொடர்ந்து பயணம் செய்யாது. வாகனம் தொடர்ந்து பயணம் செய்தால் அந்த தீ வேகமாக பரவி பஸ் முழுவதும் எரிந்து விட வாய்ப்பு இருப்பதால் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த பஸ்கள் எல்லாம் நீண்ட தூரம் பயணிக்கும் ரக பஸ்கள் என்பதால் பஸ்ஸில் பயணம் செய்யும் பயணிகள் பெரும்பாலும் தூங்கிக் கொண்டே பயணிப்பார்கள். இதனால் அவர்களுக்கு பஸ் எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கிறது என்ற தகவல் தெரியாது. இதையடுத்து பஸ் ஒவ்வொரு ஸ்டாப்பில் நிற்கும் போதும் பஸ்ஸின் டிரைவர் அல்லது நடத்துனர் ஒலிபெருக்கி மூலமாக பஸ்ஸில் இருக்கும் பயணிக்கு எந்த ஸ்டாப் என்ற தகவலை தெரிவிப்பதற்காக வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த பஸ்களில் படுக்கை வசதிகள் இருப்பதால் இந்த படுக்கை வசதியில் கூடுதலாக பயணிகளின் லக்கேஜ்களை வைக்க இட வசதி வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த சீட்டுகளில் தனித்தனி நபர்கள் படுத்திருக்கும் போது அவர்களுக்கு இடையே தடுப்பு அட்டை ஒன்றை வழங்கி உள்ளார்கள். இதனால் வேறு வேறு நபர்கள் ஒரே பெர்த்தில் படுக்க வேண்டும் என்றாலும் தாராளமாக தனிமையாக பிரச்சினை இல்லாமல் படுக்கலாம்.
மேலும் இந்த பஸ்ஸில் ஒவ்வொரு சீட்டுக்கும் தனித்தனியாக மின்விசிறிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பயணிகள் தங்கள் செல்போன் மற்றும் லேப்டாப்பை சார்ஜ் செய்வதற்காக சார்ஜிங் பாயின்ட்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பஸ்ஸில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ள. இந்த ஜிபிஎஸ் கருவிகள் மேம்பட்ட பல்வேறு அம்சங்களை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக பஸ் பயணித்துக் கொண்டிருக்கும் போது பஸ் அடுத்த ஸ்டாப்புக்கு அருகே நெருங்கும்போது உடனடியாக நடத்துனருக்கு ஸ்டாப் குறித்த அலாரத்தை இந்த ஜிபிஎஸ் கருவி வழங்குவதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பஸ்ஸில் அனைத்து பயணிகளும் பார்க்கும் வகையில் டிஜிட்டல் கடிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு பல்வேறு அம்சங்கள் கொண்ட பஸ்ஸாக இந்த பஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இது பலரது கவனத்தை வைத்துள்ளது. பல தனியார் பஸ்களுக்கு போட்டியாக இந்த அரசு பஸ் உருவாக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இதனால் தனியார் பஸ்களை விரும்பும் மக்கள் பலரை இனி அரசு பஸ்களை நோக்கி தங்கள் கவனத்தில் திசை திருப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









