ஷோரூமில் கட்டிய ரிப்பன் கூட இன்னும் பிரிக்கல!! எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாது!
புத்தம் புதியதாக வாங்கப்பட்ட 2023 டாடா நெக்ஸான் கார் ஒன்று, இன்னும் ரிப்பன் கூட முழுமையாக அகற்றப்படாத நிலையில், சாலையில் தலைக்கீழாக கரப்பான் பூச்சி போல் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகி உள்ளது. இந்த விபத்து தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, பலரது கவனத்தைப் பெற்றுள்ளது.
கார் விபத்துகள் நம் இந்தியாவில் வழக்கமான ஒன்று தான். நிறைய கார்கள் புத்தம் புதியதாக ஷோரூமில் இருந்து வெளியே எடுத்து வருவதற்கு முன்பே, ஷோரூம் வளாகத்திற்குள் மோதலுக்கு உள்ளாகி சேதமடைந்துள்ள சம்பவங்கள் பலவற்றை இதற்குமுன் பார்த்துள்ளோம். அவ்வாறான விபத்துகளில் சில சமயங்களில், ஷோரூம் ஊழியர்கள் காரணமாக இருப்பர், சில சமயங்களில் காரை வாங்கிய ஓனரே காரணமாக இருப்பார்.

இந்த செய்தியில் நாம் பார்க்கப் போகும் விபத்து ஆனது ஷோரூமில் இருந்து சில கிமீ தொலைவிற்கு வந்த பின்பு விபத்தில் சிக்கிய டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றியது ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் நெக்ஸான் காரில் சில மாதங்களுக்கு முன்னர்தான் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் மாடலை அறிமுகப்படுத்தியது. அந்த நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரை வாங்கியவர்களுள் ஒருவர் தான் இங்கு விபத்தில் சிக்கி இருப்பவரும்.
சாலையில் சென்றுக் கொண்டிருந்த இந்த டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் கார் திடீரென கண்ட்ரோலை இழந்து அருகில் இருந்த வயல்வெளியில் பாய்ந்துள்ளது. பின்னர், அங்கிருந்து காரை வெளியே எடுக்க முடியாததால், கிராம மக்கள் காரில் கயிற்றை கட்டி இழுப்பதை கீழே செய்தியின் இறுதியில் வெளியிடப்பட்டு உள்ள வீடியோக்களில் காணலாம்.

சாலையில் இருந்து விலகி அருகில் இருந்த சிறிய சரிவில் பாய்ந்ததினால் கார் தலைக்கீழாக கவிழ்ந்துள்ளது. இதனால், காரின் ஒரு பக்கத்தை மக்கள் சிலர் கயிறை கட்டி இழுக்க, மறு பக்கத்தில் இருந்துக் கொண்டு சிலர் காரை தள்ளியுள்ளனர். இந்த நீண்ட நேர முயற்சிக்கு பின்னர் ஒருவழியாக கார் சாலைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.
ஆனால், அப்போதும் பிரச்சனை தீர்ந்த பாடில்லை. ஏனெனில், சாலைக்கு கொண்டுவரப்பட்ட பின் ஸ்டார்ட் செய்து பார்த்ததில், கார் ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் வேறு வழியின்றி, காரின் முன்பக்கத்தில் மறுபடியும் கயிறை கட்டி, ஊர்வலம் இழுத்து செல்வது போல் இழுத்து சென்றுள்ளனர். ஷோரூமில் கட்டப்பட்ட ரிப்பன்களை கூட இன்னும் முழுமையாக பிரிக்காத நிலையில், இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காரின் A-பில்லர் மற்றும் மேற்கூரை சேதமாகி உள்ளது. மற்றப்படி, இந்த விபத்தில் எவரொருவருக்கும் காயமில்லை. கார் ஒன்றின் கண்ட்ரோலை டிரைவர் இழப்பதால், அது விபத்திற்கு உள்ளாகுவது சாதாரணமான ஒன்றுதான். ஆனால், அதன்பின் கார் தலைக்கீழாக கவிழ்ந்ததற்கு முக்கிய காரணம், இது எஸ்யூவி கார் என்பதினாலேயே.
இதுவே ஹேட்ச்பேக் அல்லது செடான் ரக காராக இருந்திருந்தால், கார் கவிழ்வதற்கு வாய்ப்புகள் குறைவு. எஸ்யூவி ரக கார்களில் உள்ள பிரச்சனைகளுள் ஒன்று அவற்றின் அதிக உயரம் ஆகும். ஆனால், அவைதான் வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன. கம்பீரத்துடன் நன்கு உயரமாக, உள்ளே போதிய இடவசதியை வழங்கக்கூடிய எஸ்யூவி ரக கார்களையே இன்றைய காலத்தில் நிறைய பேர் வாங்க விரும்புகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதியதாக வாங்கிய காரை நிறைய பேர் ஓவர் ஆசையில் ஓட்டி விபத்தில் தள்ளிவிடுகின்றனர். காருக்கு இன்ஸ்சூரன்ஸ் இருக்கும் ஆதலால் பொருட் செலவுகளை சமாளித்துவிடலாம். ஆனால், உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டால், அது நீங்காத வலியை தந்துவிடும். ஆதலால், புதிய காராக இருந்தாலும் சரி, அல்லது பழைய காராக இருந்தாலும் சரி டிரைவ் செய்யும்போது கூடுதல் கவனம் அவசியம்.


Click it and Unblock the Notifications









