அடிமாட்டு விலையில் டாடா வாங்கிய கார் தொழிற்சாலை - பழைய ஓனரின் கைராசி அப்படி... யார் தெரியுமா?
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்று. மாருதி சுஸுகி, ஹூண்டாய் நிறுவனங்களுக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. குறிப்பாக, கடந்த 10 வருடங்களில் கார்கள் விற்பனையில் டாடா நிறுவனம் அடைந்திருக்கும் உயரம் மிக பெரியது. இதனால், வழக்கத்தை காட்டிலும் கார்களை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய வேண்டிய தேவை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ஏற்படுகிறது. இதன் காரணமாக, இந்தியாவில் புதிய கார்கள் உற்பத்தி தொழிற்சாலையை டாடா வாங்கியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த கார் நிறுவனமான ஃபோர்டு 2021ஆம் ஆண்டில் இந்தியாவை விட்டு சென்றதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். இதன்படி, இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுவந்த ஃபோர்டு கார்களின் விற்பனை இந்தியாவில் நிறுத்திக் கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து, இந்தியாவில் இருந்த அதன் தொழிற்சாலைகளுள் ஒன்றையும் ஃபோர்டு நிறுவனம் விற்பனை செய்யும் திட்டத்தில் இறங்கியது.

அதன்படி, குஜராத்தில் இருந்த தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸுக்கு ஃபோர்டு நிறுவனம் விற்றது. இந்தியாவில் ஃபோர்டு நிறுவனத்துக்கு சொந்தமாக சென்னையில் ஒன்று, குஜராத்தின் சனந்த் பகுதியில் ஒன்று என 2 கார் உற்பத்தி தொழிற்சாலைகள் இருந்தன. துறைமுகம் அருகாமையில் இருப்பதால் இதில் சென்னை தொழிற்சாலையை மட்டும் வைத்துக் கொண்டு, குஜராத் தொழிற்சாலையை ஃபோர்டு விற்றது.
ஃபோர்டின் குஜராத் தொழிற்சாலையை யார் வாங்க போவது என பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் நிறுவனங்களின் பெயர்கள் அதிகமாக அடிப்பட்டன. ஆனால், கடைசியில் டாடா மோட்டார்ஸ் ஃபோர்டின் தொழிற்சாலையை கைப்பற்றியது. இந்த ஆலையை டாடா நிறுவனம் வாங்கியதற்கு முக்கிய காரணம், சனந்த் பகுதியில்தான் டாடா மோட்டார்ஸின் தொழிற்சாலையும் உள்ளது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், டாடா மற்றும் ஃபோர்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகள் எதிரெதிரே அமைந்திருந்தன.

வெறும் ஒரு சாலை மட்டுமே இரு தொழிற்சாலைகளையும் பிரித்து இருந்தது. இதன் காரணமாகவே, இந்த தொழிற்சாலையை வாங்குவதில் டாடா மோட்டார்ஸ் கூடுதல் ஆர்வம் காட்டியது. டாடா வாங்கியுள்ள இந்த புதிய தொழிற்சாலையில் மக்கள் மத்தியில் பிரபலமான டாடா நெக்ஸான் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கட்டிடங்கள் மற்றும் சில மெஷின்கள் உடன் சேர்த்து குஜராத் தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸுக்கு ஃபோர்டு விற்றுள்ளது.
இதற்காக ஃபோர்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட தொகை ரூ.725.7 கோடி ஆகும். இது இல்லாமல், இந்த புதிய தொழிற்சாலைக்காக ரூ.1,300 கோடியை டாடா மோட்டார்ஸ் நிதி ஒதுக்கீடு செய்தது. ஆக மொத்தத்தில் இந்த தொழிற்சாலைக்காக டாடா செலவு செய்துள்ள தொகை ரூ.2,025 கோடிக்கும் அதிகமாகும். 2010ஆம் ஆண்டில் ஃபோர்டு நிறுவனம் இந்த தொழிற்சாலையை கட்டுவதற்காக முதலீடு செய்த தொகை 100 கோடி டாலராகும் (தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.8337.71 கோடி ஆகும்).

2010 சமயத்தில் டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.45 - 47 என்கிற அளவில் இருந்தது. இந்த வகையில் பார்த்தால், குஜராத் தொழிற்சாலையை பாதிக்கு பாதி விலையில் கூட ஃபோர்டு விற்பனை செய்யவில்லை. இன்றைய காலத்தில் இவ்வளவு குறைவான விலையில் தொழிற்சாலை கிடைத்த போதிலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இந்த தொழிற்சாலையில் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டி இருந்தது. அதன் பின்னரே தனது நெக்ஸான் கார்களை உற்பத்தி செய்ய துவங்கியது.
2023 ஜனவரி 10ஆம் தேதி இந்த ஃபோர்டு தொழிற்சாலை டாடா மோட்டார்ஸின் கைக்கு வந்தது. 2024 ஜனவரி 12ஆம் தேதியில் இந்த தொழிற்சாலையில் முதல் காரை முழுவதுமாக உற்பத்தி செய்து அசெம்பிள் லைனுக்கு டாடா மோட்டார்ஸ் அனுப்பியது. அதாவது, அத்தனை மாற்றங்களையும் வெறும் 1 வருடத்தில் டாடா செய்து முடித்தது. இந்த தொழிற்சாலையை முழுவதுமாக தனது எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதற்காக டாடா மோட்டார்ஸ் பயன்படுத்தும் என ஆரம்பத்தில் கூறப்பட்ட போதிலும், இந்த தொழிற்சாலையில் டாடாவின் எரிபொருள் என்ஜின் கார்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போதைக்கு இந்தியாவின் நம்பர் ஒன் எலக்ட்ரிக் கார் பிராண்டாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. அதாவது, எதிர்காலத்திற்கும் சேர்த்து இப்போதே டாடா நிறுவனம் தயாராக ஆரம்பித்துவிட்டது. ஆகையால், இத்தகைய நிறுவனத்துக்கு புது, புது தொழிற்சாலைகள் அவசியமான ஒன்றே. ஆனால், புதிய தொழிற்சாலையை தனது பழைய தொழிற்சாலைக்கு அருகாமையிலேயே, குறைந்த விலையில் வாங்கியிருப்பது டாடா மோட்டார்ஸின் வியாபார யுக்தியை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications









