உங்க வீட்டு சின்ன பசங்கள வண்டிய ஓட்ட விடாதீங்க!.. ஜூன் 1 முதல் அதிரடி ஆக்ஷன் எடுக்க போறாங்க..
உங்க வீட்டு சின்ன பையன் அடிக்கடி வண்டிய எடுத்து ஓட்டுவாரா.. அப்போ இந்த பதிவு உங்களுக்குதான். உங்களுக்கு தெரிஞ்சு நடக்குதோ, தெரியாம நடக்குதோ, 18 வயது பூர்த்தியடையாத சிறார் வாகனம் ஓட்டும்போது போலீஸிடம் சிக்கி நேரிட்டால் கதை கந்தல்தான். "அந்த பையன் பக்கத்து தெருவுல அத்தை வீட்டுக்கு போனான், தாத்தா வீட்டுக்கு போனானு என்ன மாதிரியான சாக்கு போக்கு சொல்லி சமாளிச்சாலும் போலீஸ் அதை காது கொடுத்து கேக்க மாட்டாங்க. அதிரடி நடவடிக்கையை எடுத்ததுக்கு அப்புறம்தான் நீங்க என்ன சொல்ல வரீங்கன்றதையே அவங்க கேட்க போறாங்க.
அப்படியான ஓர் கடுமையான விதியையே நாடு முழுவதும் ஜூன் 1 முதல் அரசு அமலுக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதுபோன்று இன்னும் வேறு என்னவெல்லாம் நடவடிக்கை சிறார்கள் வாகனம் ஓட்டினால் எடுக்கப்படும் என்பதையும், ஏன் இந்த திடீர் கெடுபிடி என்பது பற்றிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சமீபத்தில் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஓர் மோசமான கார் விபத்து சம்பவம் அரங்கேறியது. போர்ஷே சூப்பர் காரில் அதி வேகத்தில் மது போதையில் வந்த 17 வயது சிறுவன், சாலையில் சென்றுக் கொண்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தினார். இந்த விபத்தில் ஐடி ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்திற்கு அந்த சிறுவன் மணிக்கு 200 கிமீ வேகத்தில் காரை ஓட்டியதே காரணம். அத்துடன், அவன் தள்ளாடும் அளவிற்கு மதுபோதையில் இருந்திருந்தான். இந்த நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, அந்த சிறுவனக்கு சில மணி நேரங்களிலேயே ஜாமீன் கிடைத்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதைபோல இந்த விபத்து சம்பவம் சார்ந்து அடுத்தடுத்து என பல திடுக்கிடும் சம்பவங்களும் அரங்கேறின. இந்த சிறுவனின் தந்தை மஹாராஷ்டிரா மாநிலத்தில் மிகப் பெரிய செல்வாக்குமிக்கவர் என கூறப்படுகின்றது. புகழ்பெற்ற கட்டுமான நிறுவனம் ஒன்றை அவர் நடத்தி வருகின்றார். இந்த நிலையிலேயே தன்னுடைய செல்வாக்கை வைத்து அவர் அவருடைய மகனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.
குறிப்பாக, சிறுவனை காப்பாற்றுவதற்காக அவர்கள் வீட்டில் பணி புரிந்து வந்த ஓட்டுநரை, தானே இந்த விபத்தை ஏற்படுத்தியதாக பழியை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தி இருக்கின்றனர். அதுதவிர, சமீபத்தில் சிறுவனின் ரத்த மாதிரிகளுக்கு வேறொரு நபரின் ரத்த மாதிரிகளை வழங்கியும் சட்ட விரோத செயலில் ஈடுபட்டனர்.
இவ்வாறு தொடர்ச்சியாக சிறுவனைக் காப்பாற்ற அவரின் தந்தையும், தாத்தாவும் பலவிதமான முறைகேடுகளில் ஈடுபட்டனர். இதன் விளைவாக தற்போது அவர்களும் சிறையில் இருக்கின்றனர். இத்துடன், சிறுவனின் ரத்த மாதிரிகளை மாற்றிய மருத்துவர்கள் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த இன்னும் சிலர் தற்போது போலீஸ் வலையில் சிக்கி இருக்கின்றனர்.
இதுதவிர சிறுவனுக்கு மது பரிமாறிய தனியார் மது கூடத்திற்கும் சீல் வைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த சிறுவன் செய்த செயலின் காரணத்தினாலேயே தற்போது மிகக் கடுமையான விதிகள் நாட்டில் அமல்படுத்தப்பட உள்ளது. அதாவது, 18 வயது பூர்த்தி அடையாத சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால், அவர்கள் ஓட்டி வந்த வாகனத்தின் பதிவு ரத்து செய்யப்படும்.
அத்துடன், பிடிபடும் மைனருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. இதுதவிர, அந்த மைனருக்கு 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாமல் இருக்கும் வகையிலேயே புதிய விதி உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதுவே நாளை மறுநாள் முதல் (ஜூன் 1-ஆம் தேதி) அமல்படுத்தப்பட இருக்கின்றது.
இதுதவிர, அதிக வேகத்தில் பறப்பவர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையிலும் புதிய விதிகள் அமலுக்கு ஜூன்1 முதல் அமல்படுத்தப்பட இருக்கின்றது. இதன்படி, குறிப்பிட்ட வேகத்தைத் தாண்டி அதிக வேகத்தில் வாகனம் இயக்குபவர்களுக்கு ரூ. 1,000 முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குபவர்களால் அரங்கேறும் விபத்துகளும் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதன் விளைவாகவே இந்த விதி அமல்படுத்தப்பட இருக்கின்றது. விபத்துகளையும், உயிரிழப்புகளையும் குறைக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருக்கின்றது. குறிப்பாக, சிறார்கள் வாகனம் ஓட்டும் விஷயத்தில் 3 மாதங்கள் வரை சிறைத் தண்டனை கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அரசு இந்த விதியை மட்டுமல்ல மற்றுமொரு முக்கியமான விதியையும் ஜூன் 1 முதல் நாட்டில் அமலுக்குக் கொண்டு வர இருக்கின்றது. ஓட்டுநர் உரிமம் பெற ஆர்டிஓ செல்ல வேண்டாம். அதை ஓட்டுநர் பயிற்சி பள்ளியிலேயே பெற்றுக் கொள்ளலாம் எனும் விதியே அதுவாகும். இதற்கு புதிதாக லைசென்ஸ் எடுக்க இருப்பவர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








