இங்கிலாந்து இளவரசி டயானா கார் விபத்து மர்மத்தில் புதிய ட்விஸ்ட்!
டயானா கார் விபத்து மர்மம் குறித்து 20 ஆண்டுகளுக்கு பின்னர் புதிய தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 31ந் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த கார் விபத்தில் இங்கிலாந்து இளவரசி டயானா மரணமடைந்தார். டயானாவின் மரணம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டயானாவின் மரணத்திற்கு பல்வேறு காரணங்கள் அடுக்கப்பட்டன. புகைப்படக்காரர்கள் பின் தொடர்ந்ததால், காரை அதிவேகத்தில் செலுத்தியதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதாக காரணம் கூறப்பட்டது.

கணவர் சார்லசை விட்டுவிட்டு, புதிய காதலரான டோடி பயதுடன் சுற்றுவது பிடிக்காமல், இங்கிலாந்து அரச குடும்பம் சதி செய்து கொன்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டன.

இந்த நிலையில், டயானா கார் விபத்து குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. பாரிஸ் நகரை சேர்ந்த புகைப்பட நிபுணர் ரோஸ்டெயின் என்பவர் ரேடியோவுக்கு ஒன்று அளித்த பேட்டியில் அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்.

அதாவது, டயானா மற்றும் அவரது காதலர் டோடி பயது பயணித்த மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்280 கார் பயன்படுத்துவதற்கு தகுதியற்ற காராக இருந்தது என்று கூறி இருக்கிறார்.

டயானா பயணித்த கார் அவரது காதலர் டோடி பயதின் தந்தை முகம்மது பயதுக்கு சொந்தமான ரிட்ஸ் ஓட்டலில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முகம்மது பயது வாங்கிய அந்த பென்ஸ் காரானது, சிறைக்கைதி ஒருவனால் திருடிச் செல்லப்பட்டு விபத்தில் சிக்கியிருக்கிறது.

அந்த விபத்தில், கார் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. அதனை ஒரு மெக்கானிக் வாங்கி சரிசெய்து முகம்மதுவிடம் விற்பனை செய்துள்ளார்.

இந்த நிலையில், முகம்மது பயது ஓட்டலில் பணிபுரிந்த ஓட்டுனர் கரீம் என்பவர் புகைப்பட நிபுணர் ரோஸ்டெயினின் நண்பர். அவர் டயானா பயணித்த காரை ஒருமுறை ஓட்டிப் பார்த்துவிட்டு, அது மிகவும் மோசமான நிலையில் இருப்பது குறித்து தெரிவித்துள்ளார்.

அதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். இந்த நிலையில்தான் அந்த கார் டயானா மற்றும் டோடி பயது பயணிப்பதற்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த காரை மணிக்கு 60 கிமீ வேகத்திற்கு மேல் ஓட்டினால் நிச்சயம் விபத்தில் சிக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிந்துள்ளது. இந்த நிலையில்தான் அந்த காரை டயானா மற்றும் டோடி பயது பயணித்துள்ளனர்.

அதனை ஓட்டிய ஓட்டுனர் புகைப்பட பத்திரிக்கையாளர்கள் பின்தொடர்வதை கண்டுகொண்டு அதிவேகத்தில் செலுத்தி இருக்கிறார். மணிக்கு 120 கிமீ வேகத்தில் அந்த கார் பயணித்துள்ளது.

அப்போது எதிர்பாராதவிதமாக, கட்டுப்பாட்டை இழந்து சுரங்கப்பாதை தூணில் மோதி விபத்தில் சிக்கியிருக்கிறது. பயன்படுத்த லாயக்கு இல்லாத காரை டயானா பயணிக்க வழங்கியது குறித்து இப்போது புதிய சந்தேகம் கிளம்பி இருக்கிறது.
Picture Credit: Daily Mail


Click it and Unblock the Notifications








