நெதர்லாந்து மக்களின் மூளையே மூளைதான்... சைக்கிள்களை நிறுத்துவதற்கு ரூ.533 கோடியில் பார்க்கிங் பகுதி!!
மனிதன் நிலத்தை கடந்து நீருக்கு அடியிலும் பல வருடங்களுக்கு முன்பே கட்டிடங்களை கட்ட ஆரம்பித்துவிட்டான். ஆனால் அவை ஆரம்பத்தில் எண்ணெய் கிணறுகள் போன்ற மிகவும் அத்தியாவசிய விஷயங்களாகவே இருந்துவந்த நிலையில், சமீப காலமாக நீருக்கு அடியில் சுரங்கங்கள், சாலைகள், அருங்காட்சியகங்கள் என இந்த விஷயங்களிலும் பரிணாம வளர்ச்சியை அடைய துவங்கிவிட்டான்.
அந்த வகையில் தற்போது புதியதாக நீருக்கு அடியில் சைக்கிள் பார்க்கிங் பகுதி திறக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் இரயில் நிலையங்களுள் ஒன்றான ஆம்ஸ்டர்டாம் இரயில் நிலையத்திற்கு அருகே இந்த ஹண்டர் கிரவுண்ட் பை-சைக்கிள் பார்க்கிங் பகுதி திறக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்டர்டாம் நிலையத்திற்கு பெரும்பாலானோர் தங்களது இருப்பிடத்தில் இருந்து சைக்கிளில் வருவதாகவும், அவர்களது சைக்கிளை நிறுத்தி வைக்க போதிய இடவசதி இந்த நிலையத்திற்கு அருகே இல்லாததாகவும் குற்றச்சாட்டுகள் எழ துவங்கின.

அதனை சரிச்செய்யுவும் விதமாகவே இந்த சைக்கிள் பார்க்கிங் பகுதி இரயில் நிலையத்தில் இருந்து மிக அதிகம் தூரம் இல்லாமல், அருகாமையிலேயே நீருக்கு அடியில் உருவாக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பார்க்கிங் பகுதியில் 6,300 பை-சைக்கிள்களை சவுகரியமாக நிறுத்தி கொள்ள போதுமான இடவசதி உள்ளது. அத்துடன் தனியாக 700 சைக்கிள்களை நிறுத்தி கொள்ளவும் கூடுதல் இடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியானது கட்டணம் முறையில் பகிர்ந்து கொள்ளப்படும் சைக்கிள்களுக்கு மட்டும் தானாம். ஆக மொத்தம் 7,000 சைக்கிள்களை தாராளமாக நிறுத்தி கொள்ளும் அளவிற்கு இந்த பார்க்கிங் பகுதி உள்ளது. வருகிற 2023 பிப்ரவரியில் இந்த பார்க்கிங் பகுதிக்கு அருகாமையில் மேலும் ஒரு பார்க்கிங் பகுதி திறக்கப்பட உள்ளது. அதன்பின் ஏறக்குறைய சுமார் 11,000 சைக்கிள்களை இந்த குறிப்பிட்ட பார்க்கிங் பகுதியில் ஒரே நேரத்தில் நிறுத்தி கொள்ளலாம்.

65 மில்லியன் டாலர்கள் (ரூ.533 கோடி) முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பார்க்கிங் பகுதியை திட்டம் வகுத்து, கட்டி முடிக்க கிட்டத்தட்ட 4 வருடங்கள் ஆகியுள்ளது. நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாம் முந்தைய காலங்களில் வடிவமைக்கப்படும் போது கார்கள் உள்பட வாகனங்களை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுவிட்டது. அதாவது பொது மக்களும் எதிர்காலத்தில் சாலையில் நடமாடக்கூடும் என்ற விஷயத்தையே அவர்கள் மறந்துவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
எதிர்காலத்தில் அனைவரும் கார்களையும், தனியார் டாக்ஸிகளையுமே பயன்படுத்துவர் என அந்த சமயத்தில் ஆம்ஸ்டர்டாம் நகரத்தை வடிவமைத்தவர்கள் நினைத்தனர். ஆனால் இன்று நெதர்லாந்து மக்களின் எண்ண ஓட்டங்களோ வேறு. நெதர்லாந்தில் வீட்டிற்கு குறைந்தது ஒரு பை-சைக்கிளை ஆவது பார்த்துவிடலாம். அந்த அளவிற்கு, கார்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களுக்கு இணையாக சைக்கிள்களை உபயோகப்படுத்தவே நெதர்லாந்து மக்கள் விரும்புகின்றனர்.
குறிப்பாக தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் வாழும் மக்களில் 35 சதவீதத்தினர் தங்களது தினசரி பயன்பாட்டிற்கு சைக்கிளையே சார்ந்துள்ளனர். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், ஆம்ஸ்டர்டம் இரயில் நிலையத்திற்கு தினந்தோறும் சராசரியாக 2 லட்சம் பேர் வருகை தருகின்றனர். இதில் பாதி, அதாவது 1 லட்சம் நபர்களது வாகனம் சைக்கிள் ஆகும். மீதி 1 லட்சம் பேர் இரயில், கப்பல், பேருந்து, டாக்ஸி மற்றும் சுரங்க இரயில்கள் மூலமாக முக்கிய ஆம்ஸ்டர்டம் இரயில் நிலையத்திற்கு வருகின்றனர்.
அதாவது, இவ்வாறு பல வழிகளில் வருபவர்கள் 1 லட்சம் பேர், சைக்கிளில் வருபவர்கள் மட்டும் 1 லட்சம் பேர். இதனாலேயே சைக்கிள் பார்க்கிங் பகுதிக்காகவே ரூ.533 கோடியை நெதர்லாந்து அரசு செலவழிக்க முன்வந்துள்ளது. இந்த பார்க்கிங் பகுதியில் சைக்கிளை நிறுத்துவதற்கு முதல் 24 மணிநேரங்களுக்கு இலவசம். அடுத்த நாட்களில் இருந்து 1.46 டாலர்கள் (ரூ.120) தினசரி கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளன. 1.46 டாலர்கள் நெதர்லாந்து மக்களை பொறுத்தவரையில் குறைவு என்பதால், இந்த பார்க்கிங் பகுதியை பலரும் பயன்படுத்த துவங்குவர் என நெதர்லாந்து அரசு நம்பிக்கையாக உள்ளது.
Image Courtesy: Mark Wagenbuur/Twitter


Click it and Unblock the Notifications








