இனி பைக்கர்கள் மழையைக் கண்டு பயப்பட வேண்டாம்: ஹெல்மெட்டிற்கும் வந்துவிட்டது வைப்பர்...!
இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்துவதற்கு ஏற்ப, சிறிய அமைப்பிலான, ஹெல்மெட்டில் பொருத்திக் கொள்ளும் வகையில் வைப்பர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவின் பருவ மழைக் காலங்களில் வாகனங்களை இயக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. அதிலும், இருசக்கர வாகனங்களை இயக்குவது மிகப் பெரிய போராட்டம்தான். பாதுகாப்பிற்காக நாம் அணிந்து செல்லும் ஹெல்மெட் மழைக் காலங்களில் நமக்கு தெளிவான பாதையைக் காண்பிப்பதில்லை, இதனால் சில சமயங்களில் விபத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை இருசக்கர வாகன ஓட்டிகள் சந்தித்து வருகின்றனர்.

இருசக்கர வாகன ஓட்டிகளின் இந்த பிரச்னையைத் தீர்க்கும் வகையில், கார்களில் பயன்படுத்தப்படும் வைப்பர்களைப் போன்று, சிறிய அளவிலான வைப்பர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை இருசக்கர வாகன ஓட்டிகள், அவர்களது ஹெல்மெட்டில் பொருத்திக் கொள்ளலாம்.

அவ்வாறு, இதனை மழைக் காலங்களில் ஹெல்மெட்டில் பொருத்திக்கொண்டுச் செல்வதன்மூலம் நாம் தெளிவான பாதையைக் காண முடியும். அதேசமயம், இதனைப் பயன்படுத்துவதனால் பாதுகாப்பான பயணத்தை நம்மால் மேற்கொள்ள முடிகிறது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த சிறிய அளவிலான வைப்பர், ஹெல்மெட்டில் பொருத்தப்படும் கேமிராக்களைப்போன்று, பொருத்தப்படக்கூடிய ஒன்று.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த வைப்பரானது, அனைத்து விதமான ஹெல்மெட்டுகளிலும் பொருத்திக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த வைப்பரானது, மாடுலர், டுயூவல் ஸ்போர்ட், முழு முகம் மற்றும் திறந்த முகம் உள்ளிட்ட பல்வேறு விதமான ஹெல்மட்களில் பயன்படுத்தும் வகையில் உள்ளது.

இதன் அமைப்பு, வாகன ஓட்டி அதிவேகத்தில் சென்றாலும் காற்றில் அடித்துச் சென்றுவிடாதவாறு, இருக்க பற்றிக்கொள்ளும் வகையில், கிளிப் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வைப்பரைப் பொருத்திக்கொண்டு மணிக்கு 130 கிமீ வேகத்தில் பயணித்து சோதனைச் செய்யப்பட்டது. இந்த சோதனையில், வைப்பர் சிறு துளிக்கூட அசையாமல் அப்படியே இருந்துள்ளது. அவ்வாறு, இது இருக்கப் பற்றிக்கொள்ளும் வகையில் இதில் ஸ்பிரிங்க் வடிவமைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக்கால் உருவம் பெற்றுள்ள இந்த வைப்பரில் எலக்ட்ரிக் மோட்டார் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு சக்தி அளிக்கும் விதமாக பேட்டரியும் இணைக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழையாக சார்ஜ் செய்தால் தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு இயங்கும். அதுவே, தேவைக்கேற்ப ஆன்-ஆஃப் செய்து பயன்படுத்தினால் 12 மணி நேரம் வரை நீடிக்கும். மேலும், இந்த பேட்டரிகளை கழட்டி மாட்டிக் கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இத்துடன், இந்த வைப்பரை ப்ளூ-டூத் மூலம் கட்டுபடுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வைப்பரை ஆப் மற்றும் ஆன் செய்வதுடன், வைப்பரின் ஸ்பீடினையும் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். அவ்வாறு, வைப்பரின் இயக்கத்தை 1,3 அல்லது 6 விநாடிகளுக்கு ஒரு முறை இயங்கும் வகையில் கட்டுபடுத்திக்கொள்ளலாம்.
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனளிக்கும் விதமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சிறிய ரக வைப்பர், தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதன் உற்பத்தி மிக விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது. ஆகையால், கூடிய விரைவில் இது வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








