புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் நடந்த நல்ல காரியம்... நம்பவே முடியல...
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் நல்ல காரியம் ஒன்று நடந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில், புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டபோது மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக 35 பேர் காவல் துறையினரிடம் சிக்கியுள்ளனர். கடந்த சில ஆண்டு கால அளவில், புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது குடிபோதையில் வாகன ஓட்டியதாக சிக்கியவர்களின் எண்ணிக்கையில் இதுவே குறைந்தபட்சமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது மும்பையில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக 677 பேர் சிக்கியிருந்தனர். அவர்கள் அனைவரின் ஓட்டுனர் உரிமங்களும் நீதிமன்றத்தால் ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டது எனவும் காவல் துறையினர் கூறியுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இம்முறை குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், ''இந்த முறை குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வெறும் 35 பேர் மட்டுமே சிக்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக சிக்கியவர்களின் எண்ணிக்கையில் இதுவே குறைந்தபட்சமாக இருக்கும்'' என்றனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மும்பையில் தற்போது இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை தேவையில்லாமல் வீடுகளில் இருந்து வெளியே வருவதற்கு பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த இரவு நேர ஊரடங்கு வரும் ஜனவரி 5ம் தேதி வரை அமலில் இருக்கும்.

இரவு நேர ஊரடங்கு காரணமாக விரைவாக வீடு திரும்பவும், வீடுகளுக்கு உள்ளேயே இருக்கவும்தான் பொதுமக்கள் விரும்புகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சிக்கியவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதற்கு இதுவே முக்கியமான காரணமாக இருக்கும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், ''இரவு நேர ஊரடங்கு காரணமாக மும்பை நகர வீதிகளில் கூட்டம் பெரிதாக இல்லை. அத்துடன் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாங்கள் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அதை மீறி மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சிக்கியவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு இவையும் ஒரு காரணமாக இருக்கலாம்'' என்றனர். இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்து வருவதற்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுவது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

குறிப்பாக புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது வயது வித்தியாசம் இன்றி குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர். எனவே அன்றைய தினம் அதிகப்படியான விபத்துக்கள் நடக்கும். ஆனால் இம்முறை நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்தன.

நேற்று இரவு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வாகன போக்குவரத்து பெரிதாக இன்றி சாலைகள் வெறிச்சோடிதான் காணப்பட்டன. தமிழகமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக இங்கும் முன்புபோல் அல்லாமல் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்தன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications