முதல் மழைக்கே இப்படியா... புதியதாக போடப்பட்ட ரிஷிகேஷ்- கங்கோத்ரி நெடுஞ்சாலை மழையால் பெருத்த சேதம்!!
ரிஷிகேஷ்-கங்கோத்ரி பகுதியில் சமீபத்தில் புதியதாக கட்டப்பட்ட நெடுஞ்சாலை பலத்த கனமழையின் காரணமாக பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து நமக்கு கிடைத்துள்ள விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

உத்தரகாண்ட் மாநிலம் சம்பா மாவட்டத்தில் சார் தாம் என்கிற திட்டத்தின் கீழ் என்.எச்2 என்ற தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சில பகுதிகள் சமீபத்தில் தான் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.

இந்த நிலையில் இந்த சாலை அங்கு பெய்துவரும் கனமழையின் காரணமாக பல இடங்களில் சேதமடைந்துள்ளதாகவும், இதனால் புதியதாக கட்டப்பட்ட இந்த சாலைக்குள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
மஜ்யுர் என்கிற கிராமத்தில் இந்த புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இவை சேதமடைந்திருப்பது குறித்து மஜ்யுர் கிராமத்தின் முன்னாள் தலைவர் மஹாவீர் நெகி அளித்துள்ள பேட்டியில், எந்தவொரு வானிலையையும் தாங்கக்கூடியதாக சொல்லப்பட்ட சாலை சந்தித்த முதல் மழைக்கே பல இடங்களில் சேதமடைந்துள்ளது.

மஜ்யுர் மற்றும் குல்டி கிராமங்களை சம்பா நகரத்துடன் இணைக்கும் இந்த நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் பல அதிகாரிகள் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகின்றனர் என கூறினார். இதேபோல் குல்டி கிராம பகுதியிலும் புதிய நெடுஞ்சாலை சேதமைடைந்துள்ளது.

இந்த நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளில் ஒரு பகுதியாக 440மீ நீளத்தில் சுரங்க பாதை ஒன்றும் இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சுரங்கத்தை தற்போதைக்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு சுரங்கத்தில் இருந்து வெளியே சாலை பாதிப்படைந்துள்ளது.
சேதமைடைந்த சாலையை மீண்டும் பயன்படுத்த இயலாது. மழை தொடர்ந்து அங்கு பெய்து கொண்டிருப்பதால் நிலைமை இன்னும் மோசமாகும் சூழல் நிலவுகிறது. 440மீ-இல் அமைக்கப்பட்டுள்ள சுரங்கம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

புதிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் அந்த வழியாக செல்ல இருந்த வாகன ஓட்டிகள் வேறு சாலைக்கு திருப்பிவிடப்பட்டு வருகின்றனர். இதனால் ரிஷிகேஷ்- கங்கோத்ரி நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மோசமான தரத்தில் போடப்படும் சாலைகளே இவ்வாறான பிரச்சனைகளுக்கு காரணமாகும். பல வருடங்கள் பயன்படுத்தப்பட்ட சாலையாக இருந்தாலும் பரவாயில்லை, புதியதாக போடப்பட்ட சாலை சில நாட்களிலேயே இவ்வாறு மழையால் சேதமடைந்திருப்பது சம்பா மாவட்ட மக்களை கவலையுற செய்துள்ளது.
இதேபோன்று சமீபத்தில் கூட அருணாச்சல பிரதேசத்தில் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு நெடுஞ்சாலை போக்குவரத்து தடைப்பட்டு போனது. தற்போது ரிஷிகேஷ்-கங்கோத்ரி நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள இந்த சேதங்களினால் சார் தம் யத்ரா திட்டத்தின் மீதே மக்களுக்கு சந்தேகம் எழ ஆரம்பித்துள்ளது.


Click it and Unblock the Notifications








