சேலத்தில் திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த செயல் இதுதான்... பாராட்டு குவிகிறது...
திருமணம் முடிந்த கையோடு சேலம் புதுமண தம்பதி செய்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள்தான் சாலை விபத்துக்களால் அதிகம் உயிரிழக்கின்றனர். தலையில் ஏற்படும் பலத்த காயமே இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. எனவே டூவீலர்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏறக்குறைய இந்தியாவின் அனைத்து இடங்களிலும் இந்த கட்டாய ஹெல்மெட் உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் டெல்லி, பெங்களூர் போன்ற ஒரு சில நகரங்களில் மட்டுமே இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் இந்த உத்தரவை முறையாக பின்பற்றுகின்றனர்.

அனேக இடங்களில் யாரும் இந்த உத்தரவை ஒரு பொருட்டாகவே மதிப்பது கிடையாது. குறிப்பாக தமிழகத்தில் இந்த நிலைதான் காணப்படுகிறது. தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் விதி முறையாக பின்பற்றப்படாததால், சென்னை ஐகோர்ட் கூட சமீபத்தில் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது.

டூவீலர்களில் பயணம் செய்யும் அனைவரையும் ஹெல்மெட் அணிய வைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி உத்தரவிட வலியுறுத்தி தொடரப்பட்ட பொது நல வழக்கு விசாரணைக்கு வந்தபோது சென்னை உயர் நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்தது.

அத்துடன் தமிழக அரசுக்கு சரமாரியாக பல்வேறு கேள்விகளையும் நீதிபதிகள் எழுப்பினர். எனவே தற்போது இங்கு இது தொடர்பான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஹெல்மெட் அணியாமல் டூவீலர்களில் பயணம் செய்பவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்த பின்பு, இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்பவர்களுக்கு விரட்டி விரட்டி அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் சேலத்தில் நடைபெற்ற சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சேலம் நெத்திமேடு பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், கீர்த்திராஜ்-தனசிரியா ஆகியோரின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த விஷயம்தான் கவனம் ஈர்த்துள்ளது.

இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருமணம் முடிந்த உடன் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை அவர்கள் நடத்தியுள்ளனர்.

திருமணம் நடைபெற்ற நெத்திமேடு பகுதியில் இருந்து சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வீடு வரை அவர்கள் ஹெல்மெட் அணிந்தபடி பேரணி சென்றனர். உறவினர்கள் சிலரும் அவர்களுடன் ஹெல்மெட் அணிந்து கொண்டு பேரணியில் பங்கேற்றனர்.

இந்த சம்பவம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. அத்துடன் போலீசாரும் கூட இதன் காரணமாக ஈர்க்கப்பட்டனர். வழியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் புதுமண தம்பதிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

அத்துடன் அவர்களின் விழிப்புணர்வு முயற்சிக்கு பாராட்டும் தெரிவித்தனர். இந்த சூழலில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களை சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து, அவர்களின் வீட்டிற்கே அபராத ரசீதை அனுப்பும் திட்டத்தை சென்னையில் தீவிரமாக செயல்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications








