திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...
திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியத்திற்காக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பது இதில் மிக முக்கியமான காரணங்களில் ஒன்று. இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு இருக்கும் அதிகபட்ச பாதுகாப்பே ஹெல்மெட்தான்.

ஆனால் பெரும்பாலானவர்கள் அதனை புரிந்து கொள்வதில்லை. சாலை விபத்துக்களின் போது தலையில் பலத்த காயம் ஏற்படுவதை ஹெல்மெட் தடுக்கிறது. இதனால் விபத்தில் சிக்கியவர்கள் உயிரிழப்பதும் தடுக்கப்படும். எனவே டூவீலர்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அமலில் உள்ளது.

இதில், கேரளாவும் ஒன்று. கேரளாவை பொறுத்தவரை இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம். கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல் கேரள மாநிலத்தில் இந்த உத்தரவு மிகவும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கேரள அரசு சார்பில், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

திரையுலக நட்சத்திரங்கள் மூலம் கேரள மாநில அரசு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஹெல்மெட் அணிவதன் அவசியம், ஹெல்மெட் அணியாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு சினிமா பிரபலங்கள் எடுத்துரைத்து வருகின்றனர். இதுதவிர விழிப்புணர்வு பணிகளில் மக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என அரசு கேட்டு கொண்டுள்ளது.

இதனால் ஹெல்மெட் விழிப்புணர்வு பணிகளில் பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். இந்த சூழலில், திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதியினர் ஹெல்மெட் விழிப்புணர்வு பணியில் களமிறங்கியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தங்களுக்கு கிடைத்த மொய் பணத்தில் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வாங்கி தர அவர்கள் முன்வந்துள்ளனர்.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள சிட்டூர் பகுதியை சேர்ந்த தேவதாஸ்-ஸ்ருதி தம்பதிக்கு நேற்று முன் தினம் (டிசம்பர் 13ம் தேதி) திருமணம் நடைபெற்றது. அப்போது மணமக்களுக்கு மொய் பணமாக 25 ஆயிரம் ரூபாய் வசூலானது. இந்த தொகையை உபயோகமான முறையில் செலவிட தேவதாசும், ஸ்ருதியும் முடிவு செய்தனர்.

எனவே இந்த பணத்தின் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வாங்கி கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினால் என்ன? என்ற யோசனை அவர்களுக்கு தோன்றியது. இதன்பின் அவர்கள் உடனே செயலில் இறங்கி விட்டனர். திருமணம் முடிந்த கையோடு அவர்கள் இருவரும் நேராக பாலக்காடு ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்றனர்.

அவர்கள் இருவரும் மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி சென்றது குறிப்பிடத்தக்கது. இதன்பின்பு அங்கிருந்த அதிகாரிகளிடம் அவர்கள் இருவரும் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர். இதனை அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். மேலும் வாகன ஓட்டிகளுக்கு கொடுப்பதற்கு அவர்கள் இருவரையுமே ஹெல்மெட் வாங்கி வரும்படி அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.

இதன்படி பாலக்காடு பகுதியில் நாளை (டிசம்பர் 16ம் தேதி) நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், தேவதாஸ்-ஸ்ருதி தம்பதி, வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்களை வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் மத்தியில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்துவதற்காக புதுமண தம்பதி மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








