சுங்கசாவடிகளில் மஞ்சள் நிற கோடு வரைய ஆணையம் உத்தரவு... இதை தாண்டி நின்னா கட்டணம் கட்ட தேவையில்லை.. முழு விபரம்
டோல்பூத்தின் இரு பக்கங்களிலும் மஞ்சள் நிற கோடு வரைய இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் டோல்பிளாசா ஒப்பந்ததார்களுக்கு ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த கோடு எத்தனை மீட்டர் இடைவெளியில் வரையப்பட இருக்கின்றது என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களுக்கு ஓர் அறிவிப்பாணையை அனுப்பி வைத்துள்ளது. அதில், தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளின் இரு வழி பாதைகளிலும் மஞ்சள் நிற கோடுகளை வரைய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த கோட்டைத் தாண்டி நிற்கும் வாகனங்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற உத்தரவையும் அது கூறியிருக்கின்றது. சுமார் 100 மீட்டர் இடைவெளியில் மஞ்சள் நிற கோடுகள் வரைய வேண்டும் என்ற வழிகாட்டுதல்களையும் நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "100 மீட்டர்களைத் தாண்டி வாகனங்கள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அந்த வாகனங்கள் கட்டணம் இன்றி செல்ல அனுமதிக்கப்படும். ஆனால், 100 மீட்டருக்குள் நிற்கும் வாகனங்கள் கட்டாயம் கட்டணம் செலுத்த வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி, ஒரு வாகனத்திற்கு 10 விநாடிகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரையைும் ஆணையம் ஒப்பந்ததாரர்களுக்கு கூறியுள்ளது. குறிப்பாக, அலுவல் நேரங்களில் அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் வாகனங்கள் தொடர்ந்து நகர்ந்துக் கொண்டே இருப்பதை உறுதிப்படுத்தவும் அது கூறியுள்ளது.

சுங்கச்சாவடிகளுக்கான கட்டணங்கள் ஃபாஸ்டேக் எனப்படும் டிஜிட்டல் பரிவார்த்தனை வாயிலாக வசூலிக்கப்பட்டு வருகின்றது. இந்த நடைமுறை கடந்த 2021 பிப்ரவரி முதல் நாடு முழுவதும் கட்டாயமாக்கப்பட்டு, சுமார் 96 சதவீதம் வாகனங்கள் இவ்வழியிலேயே கட்டணத்தைச் செலுத்த தொடங்கியிருக்கின்றன.

நாட்டின் குறிப்பிட்ட சில சுங்கச்சாவடிகளில் 99 சதவீதம் ஃபாஸ்டேக் வாயிலாகவே கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் டோல்கேட்டுகளே இல்லாத நாடாக இந்தியாவை மாற்றும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதாவது, தற்போது இருக்கும் டோல்கேட்டுகள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக நவீன கருவிகள், தானாகவே கட்டணத்தை வசூலிக்கக் கூடிய கருவிகளை நிறுவி அதன் வாயிலாக கட்டணத்தை வசூலிக்க அரசு திட்டமிட்டிருக்கின்றது. இந்த கருவிகள் வாகனத்தை நிற்க அனுமதிக்காது.

வாகனம் சென்றுக் கொண்டிருக்கையிலேயே சுங்கத்திற்கான கட்டணத்தை டிஜிட்டல் பண பரிவார்த்தனை வாயிலாக அது எடுத்துக் கொள்ளும். இந்த மாதிரியான கருவிகளையே நாட்டில் இன்னும் ஒரு சில ஆண்டுகளிலேயே பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருப்பதாக அண்மையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்திருந்து.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே டோல்பூத்துகளின் இரு முனைகளிலும் மஞ்சள் நிற கோடுகளை வரைய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது நீண்ட நேரம் காத்திருக்கும் வாகன உரிமையாளர்களை இலவசமாக டோல்பூத்தைக் கடக்க உதவும்.


Click it and Unblock the Notifications








