டோல்கேட்களில் அதிரடி மாற்றம்... மத்திய அரசு எடுத்த அசத்தலான முடிவு இதுதான்... என்னவென்று தெரியுமா?
மத்திய அரசின் அசத்தலான திட்டத்திற்காக டோல்கேட்களில் அதிரடி மாற்றம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாகனங்களின் விரைவான போக்குவரத்திற்காக நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளை மத்திய அரசு அமைத்துள்ளது. இதன் காரணமாக தொலை தூர பயணங்கள் தற்போது மிகவும் எளிதாகி விட்டன. ஆனால் தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளிகளில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்களில் கட்டணம் செலுத்தி விட்டு செல்ல சில சமயங்கள் நீண்ட நேரம் ஆகிறது.

வாகன ஓட்டிகள் ரொக்கமாக செலுத்துவதால் டோல்கேட்களில் பண பரிமாற்றத்திற்கு சிறிது நேரம் ஆகிறது. எனவே அந்த சமயத்தில் மற்ற வாகனங்களும் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகி, டோல்கேட்களில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடுகிறது. இதனை தவிர்ப்பதற்காக பாஸ்டேக் (FASTag) முறையை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது.

அனேகமாக பாஸ்டேக் சிஸ்டம் எப்படி செயல்படுகிறது? என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இருந்தாலும் ஒரு சின்ன அறிமுகம். ஆர்எஃப்ஐடி (RFID - Radio-frequency Identification) சார்ந்த பாஸ்டேக் கார்டு வாகனத்தின் விண்டுஷீல்டில் ஒட்டப்படும். இதற்கு செல்போன் போல் நீங்கள் முன்னரே ரீசார்ஜ் செய்து வைத்து கொள்ள வேண்டும்.

உங்கள் வாகனம் டோல்கேட்டை கடக்கும்போது அதற்குரிய கட்டணம் இதில் இருந்து கழித்து கொள்ளப்படும். பாஸ்டேக் முறை மூலம் பல்வேறு நன்மைகள் உள்ளன. கட்டணம் செலுத்துவதற்காக நீங்கள் டோல்கேட்டில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. சுங்கசாவடிகளில் பாஸ்டேக் பயனாளர்களுக்கு என தனியாக லேன் வழங்கப்பட்டிருக்கும்.

அந்த லேன் மூலம் நீங்கள் சென்று கொண்டே இருக்கலாம். பாஸ்டேக் இல்லாத மற்ற வாகனங்களை போல் கட்டணம் செலுத்த காத்து கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. அத்துடன் பணத்தை ரொக்கமாக கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமும் கிடையாது. பாஸ்டேக் முறை மூலமாக டோல்கேட்களில் நெரிசல் குறைக்கப்படும்.

எனவே இன்னும் 4 மாதங்களில் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் முறையை மத்திய அரசு கட்டாயம் செய்ய இருப்பதாக கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் தகவல்கள் வெளியாயின. என்எச்ஏஐ எனப்படும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு (NHAI-National Highways Authority of India) மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் கடந்த மாதம் கடிதம் ஒன்றை எழுதியிருந்தது.

இதில், இந்தியாவின் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் உள்ள அனைத்து டோல் லேன்களையும் பாஸ்டேக் லேன்களாக மாற்றம் செய்யும்படி வலியுறுத்திருந்ததாக தகவல்கள் வெளியாயின. இதன்படி தேசிய நெடுஞ்சாலைகளில் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் எலெக்ட்ரானிக் டோல் கலெக்ஸன் கட்டாயமாக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதற்கு ஏற்ற வகையில் தேசிய நெடுஞ்சாலைகளை மாற்றம் செய்யும் பணிகள் தற்போது மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், இந்தியாவின் 75 சதவீத தேசிய நெடுஞ்சாலைகளில், இ-டோலிங் (E-tolling) கட்டமைப்பு வசதியை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஏற்படுத்தி விட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ''சுமார் 75 சதவீத டோல் பிளாசாக்களில் முழுவதும் இயங்க கூடிய கட்டமைப்பு வசதி (இ-டோலிங்கிற்காக) ஏற்கனவே உள்ளது. எஞ்சிய 20-25 சதவீத டோல்கேட்களில் அதனை ஏற்படுத்தும் பணிகளை செய்து வருகிறோம்'' என்றார். இந்த திட்டம் அமலுக்கு வந்தால், டோல்கேட்களில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில சமயங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ததன் மூலம் மிச்சம் பிடிக்கப்பட்ட பெரும்பாலான நேரத்தை டோல்கேட்களில் கட்டணம் செலுத்துவதற்காக காத்திருக்கும் போது வாகன ஓட்டிகள் இழந்து விடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு இந்த திட்டம் பயன் அளிக்க கூடியதாக இருக்கலாம்.

ஆனால் சில சமயங்களில் சுங்க சாவடிகளில் உள்ள பாஸ்டேக் லேன்களிலும் கூட போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே இதனையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








