நாடு முழுக்க அமலுக்கு வந்தாச்சு... ஃபாஸ்டேக்கில் பெரிய தொல்லை இனி இல்லை! நீண்ட கால புகாருக்கு தீர்வு!
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு சுங்கச்சாவடி (Tollgate) வாயிலான பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) ஒரு குறிப்பிடத்தக்க சீர்திருத்தத்தை அறிவித்துள்ளது. பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த சீர்திருத்தத்தின்படி, தனிப்பட்ட வாகனங்களுக்கு (கார், ஜீப், வேன்) 'ஃபாஸ்டேக்' (FASTag) பெறுவதற்கு 'உங்கள் வாகனத்தை அறிந்து கொள்ளுங்கள்' (KYV) என்ற கட்டாயத் தேவை நீக்கப்பட்டுள்ளது.
இது லட்சக்கணக்கான வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவுகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, ஃபாஸ்டேக் KYV சரிபார்ப்பில் ஏற்பட்ட பிழைகள் அல்லது தாமதங்கள் காரணமாக, பல ஃபாஸ்டேக் கணக்குகள் செயலிழக்கப்பட்டன அல்லது சுங்கச்சாவடிகளில் அனுமதி மறுக்கப்பட்டன. இது வாகன ஓட்டிகளுக்கு தேவையற்ற தாமதங்களையும், சிரமங்களையும் ஏற்படுத்தியது. KYV என்பது வாகனத்தின் பதிவு எண், சேசிஸ் (Chassis) விவரங்கள் மற்றும் உரிமையாளர் தகவலுடன் இணைக்கப்பட்ட ஒரு சரிபார்ப்பு செயல்முறையாகும்.

இந்த சரிபார்ப்பு ஆனது ஃபாஸ்டேக்கை தவறாக பயன்படுத்துவது, போலி ஃபாஸ்டேக்குகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் தவறான வாகனங்களுக்கு ஃபாஸ்டேக்கை பயன்படுத்துவதை குறைக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், வாகனத்தை பற்றிய விபரங்களில் இருந்த பிழைகள் மற்றும் டீலர்ஷிப் (Dealership) பதிவின்போது செய்யப்பட்ட தகவல்கள் பொருந்தாதன்மை போன்ற காரணங்களால், போதுமான இருப்பு இருந்தும் ஃபாஸ்டேக் முடக்கப்படும் நிலை ஏற்பட்டது.
இது சுங்கச்சாவடிகளில் நெரிசலையும், பயணிகளுக்கு கூடுதல் தலைவலியையும் கொண்டு வந்தது. திருத்தப்பட்ட விதிகளின்படி, தனிப்பட்ட வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் பயன்படுத்த இனி KYV கட்டாயமில்லை. இதன் பொருள், கார் உரிமையாளர்கள் தங்கள் ஃபாஸ்டேக்கை செயலில் வைத்திருக்க KYV விவரங்களை பூர்த்தி செய்யவோ அல்லது புதுப்பிக்கவோ தேவையில்லை.

இந்த மாற்றம் தனிப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்; டாக்சி உள்ளிட்ட கமர்ஷியல் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் வணிக வாகனங்கள் தொடர்ந்து KYV விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும். NHAI இந்த முடிவை, சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதில் உள்ள சிக்கல்களைக் குறைக்கவும், குறிப்பாக அடிக்கடி நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கவும் எடுத்ததாகத் தெரிவித்துள்ளது.
புதிய கட்டாயமில்லா முறை ஆனது வங்கிகள் இப்போது வாகன விவரங்களை ஃபாஸ்டேக் செயல்படுத்தும்போதே சரிபார்க்கும் முழுப் பொறுப்பை ஏற்கும் என்று கூறுகிறது. இது, ஃபாஸ்டேக் வழங்கப்பட்ட பிறகு மேற்கொள்ளப்பட்ட கூடுதல் KYV சரிபார்ப்பின் தேவையை நீக்குகிறது. இதனால் வாகன உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட தேவையற்ற தாமதங்கள் மற்றும் சிரமங்கள் தவிர்க்கப்படும்.
இந்த சலுகை, இனி பெறப்படும் புதிய ஃபாஸ்டேக்குகளுக்கு மட்டுமல்ல. ஏற்கனவே உள்ள கார்களுக்கான ஃபாஸ்டேக்குகளுக்கும் KYV வழக்கமான தேவையாக இருக்காது. ஃபாஸ்டேக் நடைமுறை பயன்பாட்டில் இத்தகைய தளர்வு கொண்டுவரப்பட்ட போதிலும், தவறான ஃபாஸ்டேக் வெளியீடு அல்லது தவறான பயன்பாடு போன்ற புகார்கள் எழும்பும் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மட்டும் சரிப்பார்ப்பு கட்டாயப்படுத்தப்படும்.

இதுபோன்ற புகார்கள் இல்லாத நிலையில், வாகன ஓட்டிகள் மீண்டும் KYV செய்யத் தேவையில்லை. இதனால் தேவையற்ற நடைமுறை சுமைகள் குறையும். பல வருடங்களாக வாகன ஓட்டிகளிடம் இருந்து வந்த கருத்துக்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வங்கிகள் இப்போது வாகன சரிபார்ப்புக்கு நேரடியாக பொறுப்பேற்பதால், ஃபாஸ்டேக் சூழல் அமைப்பு மேலும் நம்பகமானதாகவும், திறமையானதாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
KYV கட்டாயமில்லாமல் இருந்தாலும், ஓட்டுநர்கள் தங்கள் ஃபாஸ்டேக் கணக்கில் போதுமான இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், அதை வாகனத்தின் பதிவு எண்ணுடன் சரியாக இணைக்க வேண்டும். ஒரு தனியார் ஃபாஸ்டேக்கை வணிக வாகனத்தில் பயன்படுத்துவது போன்ற தவறான பயன்பாடுகள் அதிக அபராதங்களுக்கு உள்ளாக்கும். இருப்பினும், இந்த புதிய மாற்றம் தனிப்பட்ட கார் உரிமையாளர்களுக்கு சுங்கக் கட்டணம் செலுத்துவதை மிகவும் எளிதாக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வங்கிகளின் சரிபார்ப்பு பொறுப்பு மாற்றம், ஃபாஸ்டேக் விநியோகத்தை வேகமானதாகவும், திறமையானதாகவும் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நட்பானதாகவும் மாற்றும். சரியான வாகன ஆவணங்களைக் கொண்டிருந்த போதிலும், ஃபாஸ்டேக் செயல்படுத்தப்பட்ட பிறகு KYV தேவைகள் காரணமாக ஏற்பட்ட சிரமங்களையும், தாமதங்களையும் எதிர்கொண்ட லட்சக்கணக்கான சாதாரண சாலைப் பயணிகளுக்கு இந்த சீர்திருத்தம் குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கும்.


Click it and Unblock the Notifications









