பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலை பிரச்சனை... கிராம மக்கள் மீது பழியை சுமத்தும் நெடுஞ்சாலை துறை!!
பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட பெங்களூர் - மைசூர் நெடுஞ்சாலையில் சமீபத்தில் பெய்த மழைநீர் தேங்கியது இணையத்தில் வைரலான நிலையில், தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் (NHAI) இதற்கு தனது கருத்தை தெரிவித்துள்ளது. அதனை பற்றி முழுமையாக இனி தொடர்ந்து பார்க்கலாம்.
நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்வதில் நமது மத்திய அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதன்படி பெங்களூர்- மைசூரு இடையே ரூ.8,480 கோடி செலவில் உருவாக்கப்பட்ட விரைவுச்சாலையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் 12ஆம் தேதி திறந்து வைத்தார். பயண தூரத்தை 118கிமீ தொலைவாக குறைப்பது மட்டுமின்றி, பயண நேரத்தையும் இந்த விரைவுச்சாலை 75 நிமிடங்களாக்கி உள்ளது.

1.30 மணிநேரத்திற்குள் பெங்களூர் - மைசூர் சாலை வழி பயணம் என்பது பொது மக்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை பெற்றது. இதனால் விரைவுச்சாலை துவங்கப்பட்ட சில நாட்களிலேயே வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. ஆனால் இந்த சந்தோஷம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. ஏனெனில், பெங்களூர் - மைசூருக்கு இடையே அமைந்துள்ள ராமநகரா மாவட்டத்தில் சமீபத்தில் கனமழை பெய்தது.
இந்த மழைநீர் ராமநகரா மாவட்டம் வழியாக செல்லும் பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலையின் பல்வேறு பகுதிகளில் தேங்கியது. குறிப்பாக, சாலையின் தாழ்வான பகுதிகளில் குளம் போல் மழைநீர் தேங்கின. இது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு பெரும் அசவுகரியமாக அமைத்தது. சில வாகனங்கள் மழைநீர் உள்ளே புகுந்ததால் ஆஃப் ஆகின. இதன் விளைவாக போக்குவரத்து நெரிசல் உருவானது மட்டுமின்றி, சில விபத்துகளும் அரங்கேறின.

இவற்றை தங்களது மொபைல் போனில் காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்ட வாகன ஓட்டிகள் இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தங்களது விளக்கங்களை அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இந்த நிலையில் இதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் தனது விளக்கத்தை டுவிட்டர் வாயிலாக அளித்துள்ளது. NHAI-இன் இதுகுறித்த டுவிட்டர் பதிவில், "பெங்களூர்- மைசூர் விரைவுச்சாலையில் ஏற்பட்டுள்ள மழைநீர் வடிகால் பிரச்சனையை கண்டறிந்து உடனடியாக அளவிடும் நடவடிக்கையில் NHAI இறங்கியுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த குறிப்பிட்ட பகுதி (ராமநகரா) வழக்கத்தை காட்டிலும் அதிக மழை பொழிவை பெற்றுள்ளது. விலங்குகள் சாலையை கடப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள அண்டர் பாஸ்களில் கிராமவாசிகள் மழைநீர் வடிந்து செல்லும் பகுதியை அடைத்து வைத்துள்ளதால் தான் மழைநீர் சாலையிலேயே தேங்கியுள்ளதாக கூறும் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம், குறிப்பாக மடாபுரா என்ற கிராமவாசிகளை குற்றஞ்சாட்டுகிறது.
NHAI has taken immediate measures to address water drainage issue on the Bengaluru - Mysuru Expressway.#NHAI #Drainage pic.twitter.com/U1uSRD5HwR
— NHAI (@NHAI_Official) March 18, 2023
நெடுஞ்சாலையில் மழைநீர் வடியும் பகுதியை மறித்தவாறு மடாபுரா கிராம மக்கள் தங்களுக்கு என்றே தனியாக பாதையை உருவாக்கி அதன் வழியாக நெடுஞ்சாலை உடன் இணைவதாக NHAI குற்றஞ்சாட்டி உள்ளது. இதற்காக அந்த கிராம மக்களால் உருவாக்கப்பட்ட தடுப்புகள் அகற்றப்பட்டு, அந்த பகுதிகளில் மழைநீர் செல்வதற்கான குழாய்களை பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தனது டுவிட்டர் பதிவுகளில் NHAI தெரிவித்துள்ளது.
மொத்தம் 10 பாதைகளாக உருவாக்கப்பட்டுள்ள புதிய பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலை ஆனது மொத்தம் 4 இரயில் மேம்பாலங்கள், 9 பெரிய பாலங்கள், 40 சிறிய பாலங்கள் மற்றும் 89 அண்டர் & ஓவர் பாஸ்களை கொண்டுள்ளது. வாகனங்கள் அதிகப்பட்சமாக மணிக்கு 110 முதல் 120கிமீ வேகத்திற்கு இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விரைவுச்சாலையில் வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படும் டாப்-ஸ்பீடு 120kmph ஆகும்.


Click it and Unblock the Notifications