டோல்கேட்டில் இனி பிரச்னையே இல்லை... பாஸ்டேக் பயன்படுத்துபவர்களுக்கு நல்ல செய்தி... என்னனு தெரியுமா?
பாஸ்டேக் பயன்படுத்துபவர்களுக்கு நல்ல செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பாஸ்டேக் வாலெட்டில் குறைந்தபட்ச இருப்பு தொகையை (Minimum Amount) பராமரிக்க வேண்டிய அவசியத்தை நீக்குவதற்கு முடிவு செய்துள்ளதாக, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இன்று (பிப்ரவரி 10) அதிரடியாக அறிவித்துள்ளது. டோல்கேட்களில் வாகனங்களின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''வாகனங்களின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதற்காகவும், சுங்க சாவடிகளில் தவிர்க்க கூடிய தாமதங்களை குறைப்பதற்காகவும், பயணிகள் செக்மெண்ட் வாகனங்களுக்கு (கார், ஜீப், வேன்), பாதுகாப்பு வைப்பு தொகையுடன் பயனர்கள் கூடுதலாக செலுத்திய குறைந்தபட்ச இருப்பு தொகையை பாஸ்டேக் கணக்கு/வாலெட்டில் பராமரிக்க வேண்டும் என்ற கட்டாயத்தை நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு வைப்பு தொகையுடன், பாஸ்டேக் கணக்கு/வாலெட்டில் கூடுதலாக குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிப்பதை பாஸ்டேக் வழங்கும் வங்கிகள் கட்டாயமாக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு வைப்பு தொகையுடன் குறிப்பிட்ட தொகையை குறைந்தபட்ச இருப்பு தொகையாக பராமரிப்பதை வங்கிகள் கட்டாயமாக வைத்திருந்தன.

இதன் காரணமாக பாஸ்டேக் கணக்கு/வாலெட்டில் போதுமான தொகை இருக்கும் சூழல்களிலும், பெரும்பாலான பயனர்களுக்கு சுங்க சாவடியை கடக்க அனுமதி மறுக்கப்படுகிறது. இது தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்துகிறது. எனவே தற்போது குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்க வேண்டும் என்ற கட்டாயத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பாஸ்டேக் கணக்கு/வாலெட்டின் பேலன்ஸ் நெகட்டிவ்வாக இல்லாதபட்சத்தில் தற்போது பயனர்கள் சுங்க சாவடியை கடந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதாவது கணக்கில் பணம் குறைவாக இருந்தாலும் கூட பயனர்கள் சுங்க சாவடியை கடந்து செல்ல முடியும். ஒருவேளை சுங்க சாவடியை கடந்த பிறகு கணக்கில் இருப்பு தொகை நெகட்டிவ்விற்கு சென்று விட்டால், பாதுகாப்பு வைப்பு தொகையில் இருந்து, சுங்க சாவடிக்கான கட்டணத்தை வங்கிகளால் எடுத்து கொள்ள முடியும்.

ஆனால் பாஸ்டேக் பயனர் அடுத்த முறை ரீசார்ஜ் செய்யும்போது, பாதுகாப்பு வைப்பு தொகை மீண்டும் நிரப்பப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கைகளின் மூலம் சுங்க சாவடிகளில் வாகனங்களின் தடையற்ற இயக்கம் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் வாகன ஓட்டிகளின் நேரமும் சேமிக்கப்படும்.

இந்தியாவில் தற்போது பாஸ்டேக் மூலமாக மட்டுமல்லாது, ரொக்கமாகவும் சுங்க சாவடி கட்டணம் ஏற்கப்பட்டு வருகிறது. ஆனால் வரும் பிப்ரவரி 15ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் செய்யப்படுகிறது. முன்னதாக கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் வாகன உரிமையாளர்கள் பலர் பாஸ்டேக்கிற்கு மாறாத காரணத்தால், கூடுதலாக 45 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்த கால அவகாசம் வரும் பிப்ரவரி 15ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அன்றைய தினத்தில் இருந்து சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம்.


Click it and Unblock the Notifications








