யாரும் எதிர்பார்க்காத திடீர் மாற்றம்... இன்னும் ஒரே ஒரு நாள்தான்! துணிச்சலான முடிவை எடுத்த மோடி அரசு
யாரும் எதிர்பார்க்காத திடீர் மாற்றமாக, மத்திய அரசு துணிச்சலான முடிவை எடுத்துள்ளது.

உலக மக்களை கோவிட்-19 வைரஸ் தற்போது படாதபாடு படுத்தி வருகிறது. கோவிட்-19 வைரஸை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது? என்பது தெரியாமல், வளர்ச்சியடைந்த நாடுகளே திணறி வருகின்றன. சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக கருதப்படும் கோவிட்-19 வைரஸ் தற்போது உலகையே முடக்கி போட்டுள்ளது.

சீனாவை தொடர்ந்து அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை கோவிட்-19 வைரஸ் மிக கடுமையாக தாக்கியுள்ளது. மேற்கண்ட நாடுகள் தவிர உலகின் மற்ற நாடுகளும் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் தற்போது கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவுகிறது.

இதை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தற்போது ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தியது. ஏப்ரல் 14ம் தேதி வரை இந்த ஊரடங்கு நீடிக்கும் என அப்போது அறிவிக்கப்பட்டது.

எனினும் ஏப்ரல் 14ம் தேதி ஊரடங்கு தளர்த்தி கொள்ளப்படவில்லை. கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்ததால், வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், அதிர்ச்சிகரமான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி வரும் ஏப்ரல் 20ம் தேதி (திங்கள்) முதல், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்களில் சுங்க கட்டணம் வசூலிப்பதை, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) மீண்டும் தொடங்கவுள்ளது. போக்குவரத்து சங்கங்கள் தரப்பில் இருந்து, இந்த அறிவிப்பிற்கு மிக கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதன்படி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்களில் சுங்க கட்டணம் வசூலிக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே தற்போதைய நிலையில், சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. வாகனங்கள் இலவசமாகதான் சென்று வருகின்றன.

ஊரடங்கு காரணமாக, வாகன போக்குவரத்து இன்றி தற்போது சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அப்படிப்பட்ட சூழலில்தான், டோல் கட்டணம் தற்காலிமாக ரத்து செய்யப்பட்டது. அவசர கால சேவைகளை எளிதாக்கும் வகையில்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மற்ற வாகனங்களின் போக்குவரத்து தற்போது முடங்கியிருந்தாலும், லாரிகள் இயங்கி கொண்டுதான் உள்ளன.

அவை அத்தியாவசிய பொருட்களை ஏற்றி சென்று வருகின்றன. லாரிகள் தவிர அத்தியாவசிய பொருட்களை சுமந்து செல்லும் மற்ற வாகனங்களும் மற்றும் அவசர கால சேவையில் உள்ள வாகனங்களும் இயங்கி கொண்டுதான் உள்ளன. டோல்கேட் கட்டணம் தற்காலிக ரத்து என்ற அறிவிப்பால், இத்தகைய வாகனங்களுக்கு பலன் கிடைத்து வந்தது.

ஆனால் டோல்கேட் கட்டண வசூல் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு அந்த வாகனங்களின் உரிமையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவர்களுடன் சேர்த்து பொது மக்களும் கவலையடைந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக சமையலுக்கு பயன்படும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகமாக இருப்பதாக தற்போதே ஆங்காங்கு புகார்கள் உள்ளன.

இப்படிப்பட்ட சூழலில், டோல்கேட் கட்டணத்தை மீண்டும் வசூலிக்க தொடங்கினால், லாரிகள் ஏற்றி வரும் அத்தியாவசிய பொருட்களின் விலையில் அது எதிரொலிக்கலாம் என்ற அச்சம் பொதுமக்களிடம் நிலவி வருகிறது. டோல் கட்டணம் தற்காலிக ரத்து என்ற முடிவில் திடீர் மாற்றமாக மீண்டும் கட்டண வசூல் தொடக்கம் என்ற அறிவிப்பால் அவர்கள் கவலையடைந்துள்ளனர்.

இதனால் டோல் கட்டண வசூலை மீண்டும் தொடங்கும் முடிவை தள்ளி வைக்க வேண்டும் என போக்குவரத்து சங்கங்களும், மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். குறைந்தபட்சம் இந்த இக்கட்டான நேரத்திலாவது தள்ளி வைக்கலாம் என்பது அவர்களின் கோரிக்கை. ஆனால் போக்குவரத்து சங்கங்களின் கடும் எதிர்ப்பை மீறி துணிச்சலாக முடிவு எடுத்துள்ள மத்திய அரசு, இதில் இருந்து பின்வாங்குமா? என்பது சந்தேகமே.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








