Toll Fee Hike: நாளை முதல் டோல்கேட் கட்டணம் உயர்வு! அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொடப்போகிறது!
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளின் தேவை மிக அதிகமாக மாறிவிட்டது. இந்த சாலைகள் தான் ஒவ்வொரு முக்கியமான ஊர்களையும் இணைக்கிறது. இந்நிலையில் இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ய சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பிற்காக வரி வசூல் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் மத்திய போக்குவரத்துத் துறை இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்க கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி 5-15 சதவீதம் வரை வரி அதிகரிக்கப்படுகிறது. இந்த நடைமுறை ஏப்1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்தியாவில் மொத்தம் 566 சுங்கச்சாவடிகள் உள்ளது. அதில் சிலவற்றில் மட்டுமே இந்த வரி உயர்வு அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் இந்த வரி உயர்வு அமலுக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் படி தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 1ம் தேதியும் மற்ற சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதம் 1-ம் தேதியும் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படிப்படையில் தான் இந்த வரி உயர்வு அமலுக்கு வருகிறது.
இந்த விலை உயர்வு காரணமாகக் காய்கறிகள், பழங்கள், தானியங்கள், எண்ணெய், பால் உள்ளிட்ட அடிப்படை பொருட்களின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குத் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பலர் இந்த விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இது அமலுக்கு வருவதில் மாற்றம் இல்லை என அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் சென்னை உயர் நீதிமன்றம் 60 கிமீக்குள் இருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்றவேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள 16 சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும் ஆனால் இது இன்னும் அகற்றப்படாமல் இருக்கிறது. இதற்கிடையில் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமலுக்கும் வருகிறது.
சுங்கச்சாவடி விவகாரத்தில் மற்றொரு முக்கிய விஷயமாக மத்திய போக்குவரத்துத் துறை கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் சுங்கச்சாவடி வசூலில் அந்த பகுதியில் சாலை அமைத்ததற்கான கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால் அதில் இனி வசூலிக்கப்படும் கட்டணம் 60 சதவீதமாகக் குறைக்கப்படும் என அறிவித்திருந்தது.

அதன்படி தமிழகத்தில் பரனூர், ஆத்தூர், வானகரம், சூரப்பட்டு, நல்லூர், ஸ்ரீ பெரும்புதூர், சென்னசமுத்திரம், பூதக்குடி, சிட்டம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வரி வசூல் 60 சதவீதமாகக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரி விதிப்பு மாற்றம் வரும் போது இந்த குறைப்பு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
இந்தியாவில் மொத்தம் 29,666 கி.மீ தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 566 சுங்கச்சாவடிகள் உள்ளன. அதில் தமிழ்நாட்டில் மட்டும் தான் இருப்பதிலேயே அதிகமாக 55 சுங்கச்சாவடிகள் இருக்கிறது. தினமும் சுங்கச்சாவடிகள் வழியாக 64.50 லட்சம் வாகனங்கள் கடந்து செல்கிறது. இதன் மூலம் ரூ135 கோடி சுங்கச்சாவடி கட்டணமாகத் தினமும் மத்திய அரசுக்கு வசூலாகிறது.
டிரைவ்ஸ்பார்க் பார்வை என்ன?: இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் மிகவும் முக்கியமானது அதைக் கட்டுமானம் செய்யவும், பராமரிக்கவும் அரசுக்கு அதிகம் செலவாகும். இதனால் சுங்க கட்டணம் தவிர்க்க முடியாதது. ஆனால் தற்போது மத்திய அரச நீண்ட ஆண்டுகளாக அதிகமான சுங்க கட்டணத்தைப் பெற்றுவருகிறது. சுங்க கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications








