இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் நடைபெறும் சிறப்பு நிகழ்வு... சிறப்பு தகவல்!
இந்தியாவிலேயே முதல் முறையாக நமது சென்னையில் சிறப்பு நிகழ்வு ஒன்று வரும் ஆகஸ்டம் மாதம் நடைபெற இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இரவு நேர ரேசிங் நடைபெற இருக்கின்றது. இந்த நிகழ்வானது, இருங்கோட்டை பகுதியில் உள்ள மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில் அரங்கேற இருக்கின்றது.

சென்னையில் ரேசிங் டிராக் இருக்கிறதா என்று தானே கேட்கிறீர்கள்... ஆம்... இருக்கின்றது. இந்த ரேசிங் டிராக் கடந்த 1980ம் ஆண்டிற்கு பின் கட்டத் தொடங்கப்பட்டது. பின்னர், அதன் பணிகள் 1990ம் ஆண்டு நிறைவடைந்தநிலையில், அப்போது தான் முதல் முறையாக அது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

அதேசமயம், இந்தியாவிலேயே நிரந்தர ரேசிங் டிராக்காக அது உருவாக்கப்பட்டது.
இந்த மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில், இருவிதமான ரேஸ் டிராக்குகள் இருக்கின்றன. அதில் பிரதான ரேஸ் டிராக், 3.717 கிமீ பரப்பளவில் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில், 12 வளைவுகள் மற்றும் மூன்று நேர் வழி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, கிளப் ரேஸ் டிராக் 2.067 கிமீ நீளம் கொண்டதாக இருக்கின்றது. இந்த இரு டிராக்குகளுமே 36 அடி அகலம் கொண்டவையாக இருக்கின்றது. அதேசமயம், அவற்றின் ஆரம்பிக்கும் இடம் 39 அடியாக இருக்கின்றது. மேலும், அது கடிகார திசையில் இயங்கு பாதைகளைக் கொண்டுள்ளது.

ஆகஸ்ட் 7 ஆம் தேதி டெஸ்ட் ரேஸ் திட்டம்:
ரேஸ் டிராக் புணரமைப்பு குறித்து மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட் கிளப்பின் துணை தலைவர் விக்கி சந்ததோக் கூறுகையில்,
"மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கினை சிங்கப்பூர் ரேஸ் டிராக்கைப் போல் உருவாக்க திட்டமிடப்பட்டது. அதற்கான மின் விளக்கு அமைப்பிற்கு மட்டுமே ரூ. 16 கோடி செலவாகும் என கூறப்பட்டது. ஆகையால், இதில் மாற்று திட்டம் வகுக்கப்பட்டு, லி மேன்ஸ் போன்று மின் விளக்கு வசதியினை, ரேஸ் டிராக்கிற்கு வழங்க முடிவு செய்யப்பட்டது" என்றார்.

மேலும் பேசிய அவர், "அதிகாரிகள் மற்றும் மார்ஷல்கள் ரேஸ் டிராக்கில் நடைபெறும் சம்பவங்களை துள்ளியமாக காண்டறியும் வகையிலான மின் விளக்குகள் டிராக்கில் பொருத்தப்பட உள்ளன. இத்துடன் ரேஸர்களின் பாதுகாப்பிற்கு உறுதியளிக்கும் வகையிலான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்ள இருக்கின்றோம்" என்றார்.

இதைத்தொடர்ந்து, மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி சோதனையோட்டம் செய்யப்பட உள்ளது. இந்த சோதனையோட்டம் அன்றைய தினம் மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறும் என கூறப்படுகின்றது. மேலும், இதன் பின்னர் நடைபெறும் பந்தயங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க இரவு நேரங்களில் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அவ்வாறு, இரவு நேரங்களில் நடைபெறும் போட்டியின்போது, ரேஸர்களுக்கு அதிக பாதுகாப்பினை வழங்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. அத்துடன், போதுமான மின் விளக்குகள் இல்லையெனில் அதை அதிகரிக்கவும் உடனடி முயற்சிகள் எடுக்கப்படும் என விக்கி சந்தோக் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








