நீரவ் மோடி கார்கள் விற்பனை... எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்
நீரவ் மோடியின் கார்கள் ஆன்லைன் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13,570 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, வைர வியாபாரியான நீரவ் மோடி மற்றும் அவரது நெருங்கிய உறவினர் மெகுல் ஷோக்ஸி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அவர்கள் இருவரும் இந்தியாவில் இல்லை. இருந்தபோதும் அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலம் விடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன்படி நீரவ் மோடி மற்றும் மெகுல் ஷோக்ஸி ஆகியோருக்கு சொந்தமான கார்களை, அமலாக்க துறை சமீபத்தில் ஆன்லைன் மூலம் ஏலம் விட்டது. முன்னதாக இந்த கார்கள் அனைத்தையும் பல்வேறு இடங்களில் இருந்து அமலாக்க துறை பறிமுதல் செய்திருந்தது. அத்துடன் அவற்றை ஏலம் விடுவதற்கான அனுமதியை நீதிமன்றத்திடம் இருந்தும் பெற்றிருந்தது.

முதலில் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே ஆன்லைன் மூலம் ஏலம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றதால், ஏலம் சுமார் 90 நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டது. அதாவது மாலை 5.30 மணி வரை ஏலம் நடைபெற்றது. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், போர்ஷே பனமெரா, மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்-கிளாஸ் உள்பட மொத்தம் 12 கார்கள் ஏலம் விடப்பட்டன.

கார்களின் எந்த கண்டிஷனில் உள்ளது மற்றும் எவ்வளவு கிலோ மீட்டர்கள் ஓடியுள்ளது ஆகியவற்றை பொறுத்து அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதற்கேற்க கார்களை சோதனை செய்து பார்க்க, ஏலம் கேட்பவர்களை அமலாக்க துறை அனுமதித்திருந்தது. ஆனால் டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

இதன் பின்புதான் ஏலம் நடத்தப்பட்டது. இதில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட கார் என்ற பெருமையை ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் பெறுகிறது. இந்த கார் 1.33 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. ஆனால் அமலாக்க துறை நிர்ணயம் செய்திருந்த அடிப்படை விலையை காட்டிலும் இது வெறும் 10 ரூபாய் மட்டுமே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இது 2010 மாடல் கார் ஆகும். இது 24,439 கிலோ மீட்டர்கள் ஓடியுள்ளது. அத்துடன் பேன்ஸி பதிவு எண்ணையும் பெற்றுள்ளது.

இதில், அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இரண்டாவது கார் என்ற பெருமையை போர்ஷே பனமெரா பெற்றுள்ளது. பிரீமியம் நம்பருடன் கூடிய இந்த கார் 54 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த 54 லட்ச ரூபாய் என்பதுதான் இந்த காருக்கு அமலாக்க துறை நிர்ணயம் செய்திருந்த அடிப்படை விலை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்350 காரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவியது. இந்த காருக்கு வெறும் 37.8 லட்ச ரூபாய் மட்டுமே அடிப்படை விலையாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் 53.76 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. அதாவது அடிப்படை விலையை காட்டிலும் சுமார் 16 லட்ச ரூபாய் அதிக விலைக்கு இந்த கார் வாங்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மெகுல் ஷோக்ஸிக்கு சொந்தமான பிஎம்டபிள்யூ கார் ஒன்றுக்கு 9.8 லட்ச ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த கார் 11.75 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. அதே சமயம் 10.5 லட்ச ரூபாய் என்ற அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா கார் ஒன்று 18.06 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. இதுதவிர இரண்டு ஹோண்டா ப்ரியோ ஹேட்ச்பேக் ரக கார்களும் ஏலம் விடப்பட்டன. அவை ஒவ்வொன்றும் தலா 2.7 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டன.

இதில், ஒட்டு மொத்தமாக 3.28 கோடி ரூபாய்க்கு கார்கள் ஏலம் எடுக்கப்பட்டன. ஆனால் 2011 டொயோட்டா கரொல்லா அல்டிஸ் 1.8ஜி காரை மட்டும் யாரும் ஏலம் கோரவில்லை. இந்த காருக்கு 3.25 லட்ச ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஆவணங்கள் தொடர்பான பேப்பர் ஒர்க் முடிவடைந்த உடன் கார்கள் அனைத்தும், ஏலத்தில் வெற்றி பெற்றவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. இதற்கு 2-3 வாரங்கள் ஆகும்.

முன்னதாக நீரவ் மோடியின் பெயிண்டிங்குகள் சமீபத்தில் ஏலம் விடப்பட்டன. அவை 54 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நீரவ் மோடியின் கார்கள் பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கார்களை ஏலம் விட்டதன் மூலம் அடிப்படை தொகையை காட்டிலும் 28 லட்ச ரூபாய் மட்டுமே அமலாக்க துறைக்கு கூடுதலாக கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








