தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளை எல்லாம் அகற்றிவிட்டு தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் அடிப்படையிலான பயணிக்கும் தூரத்திற்கு மட்டுமே சுங்க கட்டணங்களை நேரடியாக வங்கி கணக்கில் இருந்து வசூல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை என்பது மிக முக்கியமான வழி பாதையாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான சரக்கு போக்குவரத்து என்பது இந்த தேசிய நெடுஞ்சாலை மூலமாக தான் நடக்கிறது. இதனால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்கள் மிக வேகமாக நகர்ந்து வருகின்றன. இதனால் இந்தியாவிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை இந்தியாவின் முதுகெலும்பு என்றே சொல்லலாம்.

இவ்வளவு முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளில் அதை முறையாக பராமரிக்க வேண்டி மத்திய அரசு ஆங்காங்கே சுங்கச்சாவடிகளை நிறுவி அதன் மூலம் சுங்க கட்டணங்களை வசூல் செய்து வருகிறது. அப்பகுதி வழியாக பயணிக்கும் வாகனங்கள் எல்லாம் ஃபாஸ்ட் டேக் முறையில் தற்போது சுங்க கட்டணங்களை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்த ஃபாஸ்ட் டேக் முறையில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சுங்கச்சாவடிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் நேரடியாக பண பரிவர்த்தனையை செய்யப்பட்டு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த பண வசூல் முறையில் அதிக காலதாமதம் ஏற்படுவதால் ஃபாஸ்ட் டேக் கார்டு முறையை அறிமுகப்படுத்தி அதை மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதனால் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் காத்திருக்க வேண்டிய நேரம் குறையும் என எதிர்பார்த்தது.

ஆனால் ஃபாஸ்ட் டேக் கார்டுகள் சுங்கச்சாவடியில் வாகனங்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்க பெரிய அளவில் உதவவில்லை. வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வை கொண்டு வருவதற்காக ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் முறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
இதுகுறித்து மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஏஎன்ஐ ஊடகத்திடம் பேசும் போது விரைவில் இந்தியாவில் ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல்கேட் இல்லாத சுங்க கட்டண வசூல் முறை அமலுக்கு வரும் என தெரிவித்தார். இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய தேவை இல்லை. மக்களின் நேரமும் பணமும் மிச்சமாகும் என அவர் பேட்டி அளித்துள்ளார்.

தற்போது உள்ள சுங்கச்சாவடி கட்டண முறையில் ஒரு சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்யும் போது அடுத்த சுங்கச்சாவடி வரை பயணம் செய்வதற்கான கட்டணமாக இருக்கிறது. இதனால் முழு சாலையையும் பயன்படுத்தாமல் பாதிவரை மட்டும் பயன்படுத்துபவர்களும் முழுமையான கட்டணத்தை செலுத்தி தான் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. புதிய முறை அமலுக்கு வந்தால் தேசிய நெடுஞ்சாலையில் எவ்வளவு தூரம் பயணித்துள்ளோமோ அவ்வளவு தூரத்திற்கு மட்டும் சுங்க கட்டணத்தை செலுத்தினால் போதும்.
இது கூட பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக இருந்து வரும் நிலையில், தற்போது தேர்தல் காரணமாக இந்த பணிகள் எல்லாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தேர்தல் முடிந்த பின்பு வரிசையாக ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலை நேரடியாக வாகனங்களின் நம்பர் பிளேட்டை கண்காணிக்கும் கேமராக்கள் பொருத்தப்பட்டு இந்த திட்டம் சோதனை முறையில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
இந்த சோதனை முயற்சி வெற்றி அடையும் பட்சத்தில் தொடர்ந்து இந்தியா முழுவதும் இதே முறை அமலுக்கு வந்து இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் எல்லாம் நீக்கப்பட்டு நேரடியாக ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் முறை நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்களின் நேரம் மிச்சம் ஆகுவது மட்டுமல்லாமல் பணமும் மிச்சமாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சுங்கச்சாவடி கட்டணம் என்பது அதிகமாக இருப்பதாக கூறி பல அரசியல் கட்சிகள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சுங்க கட்டணத்தை முழுமையாக ரத்து செய்வோம் என வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றன. இந்நிலையில் சுங்க கட்டணத்தை வசூலிக்க புதிய நடைமுறையை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









