பெங்களூருவிற்கு வருகிறது "ஊஞ்சல் ரயில்" இனிமே சில்க் போர்டு ரொம்ப ப்ரீயா இருக்கும் போல....
பெங்களூருவில் ஸ்கை பஸ் ரயிலைக் கொண்டு வர ஆய்வு நடந்து வருவதாக மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம்.

இந்தியாவில் இன்று இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்றால் போக்குவரத்து நெருக்கடி தான். குறிப்பாக பெரு நகரங்களில் மிக அதிக அளவில் நெருக்கடி இருக்கிறது. நெருக்கடிகளில் மிக அதிக நெருக்கடி கொண்ட நகரம் என்றால் பெங்களூரு தான். இந்த நகரில் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு செல்ல கிட்டத்தட்ட ஒரு நாளே ஆகிவிடும் என்று சொன்னாலும் மிகையாகாது.

இந்தப் பிரச்சனைக்குக் கட்டாயம் ஒரு தீர்வு காண வேண்டும் என பெங்களூருவில் வசிக்கும் ஒவ்வொரு மக்களும் விரும்புகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பெங்களூருவில் நடந்த மந்தன் என்ற ஒரு கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிதின்கட்கரி கலந்து கொண்டு பேசினார். அதில் பெங்களூருவில் நெருக்கடியைக் குறைப்பது குறித்துப் பேசினார்.

அவர் பேசும் போது "பெங்களூருவில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு ஏற்றபடி சாலையை விரிவாக்கும் சாத்தியம் இல்லை. அப்படிச் செய்தால் பெரும்பகுதியைச் சாலையாக மட்டுமே கட்டமைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அதனால் இருக்கும் சாலைகளிலேயே நவீன தொழினுட்பங்களை மேம்படுத்தி போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்க முடியும்.

இதற்காக 3 அடுக்கு சாலை கட்டமைப்பு குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். அதாவது தற்போது உள்ளச் சாலைகளுக்கு மேலேயே பாலம் அமைத்து அதில் சாலையையும், அதற்கு மேலே மெட்ரோவை இயக்கும் திட்டத்தையும் திட்டமிட்டு வருகிறோம். அதனால் குறைந்த தூரம் பயணிப்பவர்கள் தரை வழி சாலையையும், நடுத்தரத் தூரம் பயணிப்பவர்கள் மேம்பாலச் சாலைகளையும், பயன்படுத்த முடியும்.

இதனால் இருக்கும் சாலையை விரிவுபடுத்தாமலேயே அதிகப் போக்குவரத்து நெருக்கடிகளைக் கையாள முடியும். இது மட்டுமல்ல தற்போது பெங்களூருவில் ஸ்கை பஸ் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான திட்டத்தை ஆய்வு நடத்தி வருகிறோம். ஏற்கனவே மெட்ரோவிற்கு இருக்கும் அடிப்படை கட்டமைப்புகளைப் பயன்படுத்தி அதிலேயே ஸ்கை பஸ்களை கட்டமைக்கும் சாத்திய கூறுகளை ஆய்வு செய்து வருகிறோம்.

இதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தால் இதைக் கட்டமைப்பதில் அரசுக்கு எந்த விதத் தயக்கமும் இல்லை. இங்குத் தேவைகள் இருக்கும் போது அதைச் செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை " எனப் பேசினார்.

மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சொன்ன ஸ்கை பஸ் என்பது கிட்டத்தட்ட மெட்ரோ போலச் செயல்படும். மெட்ரோ ரயில்கள் போலத் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு அதில் பயணிக்கும். ஆனால் ஸ்கை பஸ்கள் என்பது ஒரு பாலத்திற்குக் கீழே டிராக் அமைக்கப்பட்டு அதில் தொங்கிக்கொண்டே பயணிக்கும் வகையில் கட்டமைக்கப்படும்.

இப்படியான ஸ்கை பஸ்கள் இந்தியாவில் இல்லை. ஆனால் வெளிநாட்டில் பல பகுதிகளில் இது சாத்தியமாகியுள்ளது. இதனால் இந்தப் போக்குவரத்து வசதி சாத்தியக்கூறுகள் இருந்தால் இந்தியாவில் உள்ளது. இதே ஸ்கை பஸ் திட்டம் கொங்கன் ரயில்வே பகுதியிலும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் இந்தத் திட்டத்தைச் சாத்தியப்படுத்துவதற்காக நகரங்கள் குறித்து ஆய்வு நடந்து வருகிறது.

தற்போது பெங்களூருவில் இருக்கும் போக்குவரத்து நெருக்கடி அங்கு ஒருநாளாவது சென்று வந்தருக்கு கட்டாயம் புரிந்திருக்கும். குறிப்பாக தமிழகதத்திலிருந்து பெங்களூருவிற்கு செல்லும் பலர் சில்க் போர்டு டிராஃபிக்கில் சிக்கி அல்லல் பட்டிருப்பார்கள். ஒரு வேளை இந்த திட்டம் வந்தாலாவது பெங்களூருவில் போக்குவரத்து நெருக்கடி வெகுவாக குறையும் சில்க் போர்டு சிக்னில் நெருக்கடி குறையும் என எதிர்பார்க்கலாம்


Click it and Unblock the Notifications