என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்! பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கு பாஜக அமைச்சரின் அருமையான திட்டம்
பெட்ரோல் விலை உயர்வு பிரச்னையை களையவும், நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அருமையான திட்டத்தை முன்வைத்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையை சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட நாடுகள்தான் பூர்த்தி செய்து வருகின்றன. கச்சா எண்ணெய் வளம் இல்லாத காரணத்தால், மேற்கண்ட நாடுகளில் இருந்து செய்யப்படும் இறக்குமதியைதான் இந்தியா பெரும்பாலும் நம்பியுள்ளது. அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதம் இறக்குமதியின் மூலம்தான் பூர்த்தி செய்யப்படுகிறது.

ஆனால் கச்சா எண்ணெய் இறக்குமதி இந்தியாவின் பொருளாதாரத்தையே ஆட்டி படைக்கிறது. ஆம், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா பல லட்சம் கோடிகளை செலவிட்டு வருகிறது. அத்துடன் கச்சா எண்ணெய்யில் உற்பத்தி செய்யப்படும் பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்கள் சுற்றுச்சூழலுக்கு எதிரிகளாக திகழ்ந்து வருகின்றன.

இதனால் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. அத்துடன் மாற்று எரிபொருட்கள் மூலம் இயங்கும் வாகனங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில், குறிப்பிடத்தகுந்த ஒரு மாற்று எரிபொருள் எத்தனால்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத அதே சமயம் குறைவான செலவில் வாகனங்களை இயக்க உதவும் எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவதில், கரும்பு உற்பத்தியில் தலைசிறந்து விளங்கும் பிரேசில் உலகிற்கே முன்னோடி. ஒரு காலத்தில் வீழ்ச்சியடைந்து கிடந்த பிரேசிலின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தியதில் எத்தனாலுக்கும் முக்கிய பங்குள்ளது.

இந்த வகையில் கரும்பு உற்பத்தி சிறப்பாக உள்ள ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் ஏனோ எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவதில் இந்தியா பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தது. எனினும் தற்போது எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவதற்கான நேரம் வந்து விட்டது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவதன் அவசியத்தை மிக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்.

இந்த சூழலில் தலைநகர் டெல்லியில் நேற்று (ஜூலை 12) அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியாவின் எத்தனால் பொருளாதாரத்தை 2 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக நாட்டில் எத்தனால் பம்ப்களை அமைக்க அனுமதிக்கும்படி பெட்ரோலிய அமைச்சகத்தை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்தும் என்றார்.

இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியாவில் கரும்பு விவசாயிகளுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும், வேளாண்மை துறையில் வேலை வாய்ப்புகள் பெருகும் எனவும் அவர் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''இந்தியாவில் எத்தனால் பம்ப்களை அனுமதிக்கும்படி பெட்ரோலிய துறை அமைச்சகத்தை வலியுறுத்தி வருகிறோம்.

இந்தியாவில் அதிகப்படியான எத்தனாலை உருவாக்குவதற்கான சாத்தியம் உள்ளது'' என்றார். கடந்த 2018-19ம் நிதியாண்டில் இந்தியாவின் எத்தனால் பொருளாதாரம் 11 ஆயிரம் கோடி ரூபாய். இது 2019-20ம் நிதியாண்டில் 20 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் கட்கரி கூறினார். அத்துடன் இந்த துறையின் பொருளாதாரம் 2 லட்சம் கோடியாக உயர வேண்டும் என்ற இலக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் தொகை குறையும் எனவும், அத்துடன் இது நாட்டின் ஜிடிபி-யில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் எனவும் அவர் கூறினார். இந்தியாவின் முதல் எத்தனால் பைக்கான டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி எஃப்ஐ இ100 (TVS Apache RTR 200 4V FI E100) நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் நிதின் கட்கரி கலந்து கொண்டு, பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிதின் கட்கரி தொடர்ந்து கூறுகையில், ''100 சதவீதம் பயோ-எத்தனாலில் இயங்கும் வாகனங்களை உருவாக்கும்படி கடந்த 12 ஆண்டுகளாக வாகன உற்பத்தி நிறுவனங்களை வலியுறுத்தி வருகிறேன். கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக நாம் 7 லட்சம் கோடி ரூபாய்களுக்கும் மேல் செலவு செய்து வருகிறோம். அதே நேரத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு என்ற பிரச்னையையும் நாம் எதிர்கொண்டு வருகிறோம்.

சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னை தொடர்பாக மக்களை, குறிப்பாக டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை நாம் சமாதானப்படுத்த முடியாது. சுற்றுச்சூழல் பாதிப்பு பிரச்னையை நாம் திறம்பட எதிர்கொள்ள வேண்டிய நேரமிது'' என்றார். எத்தனால் உற்பத்தி செய்ய தேவையான தொழில்நுட்பங்கள் தற்போது போதுமான அளவிற்கு நம்மிடம் இருப்பதாகவும், இதனை சுற்றுச்சூழல் பிரச்னையை எதிர்கொள்ள பயன்படுத்த வேண்டும் எனவும் நிதின் கட்கரி தெரிவித்தார்.

குறிப்பாக பெட்ரோலுக்குதான் எத்தனால் மிகச்சிறந்த மாற்று எரிபொருள். தற்போதைய நிலையில் பெட்ரோல் விலை உயர்வு பிரச்னை வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை கொடுத்து வருகிறது. ஆனால் பெட்ரோலுடன் ஒப்பிடுகையில் எத்தனால் மூலம் வாகனங்களை இயக்க ஆகும் செலவு குறைவுதான். எனவே எத்தனால் பயன்பாடு அதிகரித்தால், பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கும் தீர்வு காணலாம்.


Click it and Unblock the Notifications








