ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் உங்களால் பெருமை - மத்திய அமைச்சரை இந்த விஷயத்தில் அடிச்சிக்க முடியாது!!
மார்க்கெட்டுக்கு எத்தனை புது, புது கார்கள் வந்தாலும், அவை எந்த அளவிற்கு பாதுகாப்பானவை என்பதுதான் முக்கியமாகும். ஏனெனில், கார் வாங்கும்போது மைலேஜுக்கு அடுத்து மக்கள் உன்னிப்பாக கவனிப்பது காரில் இடம்பெற்றுள்ள பாதுகாப்பு அம்சங்களை ஆகும். கார்களின் பாதுகாப்பு தரத்தை சோதனை செய்வதற்கு பல்வேறு கிராஷ் டெஸ்ட் அமைப்புகள் உள்ளன. க்ளோபல் என்சிஏபி, ஆசியன் என்சிஏபி என்பன அவற்றுள் சில ஆகும். இதற்கிடையில், கடந்த ஆண்டு இறுதியில் இந்தியா தனக்கென பிரத்யேகமான பாரத் என்சிஏபி -ஐ அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களின் பாதுகாப்பு தரத்தை மக்கள் தெரிந்துக் கொள்வதற்கு பாரத் என்சிஏபி முடிவுகள் மிக முக்கியமானதாக இருக்கும்.
டாடா மோட்டார்ஸின் பிரபலமான பஞ்ச் இவி மற்றும் நெக்ஸான் இவி எலக்ட்ரிக் கார்கள் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் சமீபத்தில் உட்படுத்தப்பட்டன. இந்தியாவில் மக்கள் பலரால் வாங்கப்படும் கார்களாக டாடா பஞ்ச் மற்றும் நெக்ஸான் உள்ளதால், இவற்றின் எலக்ட்ரிக் வெர்சன்களின் பாரத் என்சிஏபி முடிவுகள் எவ்வாறானதாக இருக்க போகிறது? என்கிற ஆவல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை தாண்டி பொதுமக்கள் இடையேயும் உருவானது.

இந்த நிலையில், டாடா பஞ்ச் இவி மற்றும் நெக்ஸான் இவி கார்களின் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் முடிவுகள் சில தினங்களுக்கு முன் வெளியாகின. எதிர்பார்த்ததை போன்று டாடா பஞ்ச் இவி மற்றும் நெக்ஸான் இவி இந்த கிராஷ் டெஸ்ட்டில் முழு 5 நட்சத்திரங்களை பெற்று அசத்தியுள்ளன. இந்த வகையில், பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திரங்களை பெற்ற முதல் எலக்ட்ரிக் கார்கள் பஞ்ச் இவி மற்றும் நெக்ஸான் இவி ஆகும்.
இந்த நிலையில், மத்திய சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் பஞ்ச் இவி மற்றும் நெக்ஸான் இவி கார்களில் முழு 5 நட்சத்திரங்களை பெற்றதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் எதிர்கால போக்குவரத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் தனது எக்ஸ் தள பதிவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரது எக்ஸ் பதிவில், "ஒரு வலுவான பாரத் என்சிஏபி மதிப்பீடானது, பாதுகாப்பான வாகனங்களை தேர்ந்தெடுப்பதில் நுகர்வோருக்கு விலைமதிப்பற்ற கருவியாக செயல்படும். மேலும் இது வாகனத்தில் பயணிப்போருக்கு வழங்கப்படும் உயர்ந்த அளவிலான பாதுகாப்பிற்கு சான்றாக உள்ளது" என அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதில் சிலர் அமைச்சரை போன்று தரமான எலக்ட்ரிக் கார்களை உருவாக்கியதற்காக டாடா மோட்டார்ஸை பாராட்டினாலும், சிலர் டாடா மோட்டார்ஸின் கஸ்டமர் சர்வீஸை விமர்ச்சித்துள்ளனர். அவற்றிற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பதிலை கமெண்ட் வாயிலாக தெரிவித்துள்ளது.

பாரத் என்சிஏபி-இல் கார்கள் முன்பக்க மோதல், சைடு மோதல் மற்றும் சைடு இம்பேக்ட் மோதல் உள்ளிட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்த கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் இருந்து விண்ணப்பம் 70-ஏ -ஐ சம்பந்தப்பட்ட கார் நிறுவனம் பெற்று சமர்பிக்க வேண்டும். இந்த கிராஷ் டெஸ்ட்டில் நெக்ஸான் இவி எலக்ட்ரிக் கார் பெரியவர்கள் பாதுகாப்பில் 32க்கு 29.86 மதிப்பெண்களை பெற்றுள்ளது.
சிறியவர்களின் பாதுகாப்பில் இந்த எலக்ட்ரிக் காருக்கு 49க்கு 44.95 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. பாரத் என்சிஏபி-இல் நெக்ஸான் இவி கார் 64kmph வேகத்தில் முன்பக்கமாக மோதி சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மறுப்பக்கம், டாடா பஞ்ச் இவி எலக்ட்ரிக் கார் பெரியவர்கள் பாதுகாப்பில் 32க்கு 31.46 மதிப்பெண்களையும், சிறியவர்கள் பாதுகாப்பில் 49க்கு 45 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்திய சாலை போக்குவரத்தின் தரத்தை வெளிநாடுகளுக்கு இணையாக மாற்றுவதில் உறுதியாக உள்ளார். ஆதலால், அவரிடம் இருந்து இவ்வாறான ஒரு பாராட்டு வந்திருப்பதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் ஆரம்பத்தில் எலக்ட்ரிக் கார்கள் எதுவும் உட்படுத்தப்படவில்லை. ஆனால், உட்படுத்தப்பட்ட முதல் எலக்ட்ரிக் கார்களான டாடா பஞ்ச் இவி மற்றும் நெக்ஸான் இவி 5க்கு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளதால், இனி வருங்காலங்களில் மேலும் புது எலக்ட்ரிக் கார்கள் உட்படுத்தப்படும்.


Click it and Unblock the Notifications









