ஊட்டி - குன்னூர் இடையே இயக்கப்பட இருக்கும் ரயில் பஸ்ஸின் சிறப்பம்சங்கள்!
ஊட்டியிலிருந்து குன்னூருக்கு ரயில் பஸ் சேவையை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதென்ன, ரயில் பஸ் என்று கேட்கிறீர்களா? பார்ப்பதற்கு பஸ் போல ஒரே பெட்டியுடன் இந்த வாகனம் தண்டவாளத்தில் பயணிக்கும
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் ஊட்டியில் ரயில் பஸ் சேவை விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஊட்டிக்கு சுற்றுலா செல்பவர்களின் முக்கிய விருப்பங்களில் ஒன்று மலை ரயிலில் பயணிக்க வேண்டும் என்பதே. மேட்டுப்பாளையத்தில் காலை 7 மணிக்கு புறப்பட்டு நண்பகலில் ஊட்டிக்கு சென்றடைகிறது. அதேபோன்று, பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.35 மணிக்கு மேட்டுப்பாளையம் திரும்புகிறது.

ஊட்டிக்கு செல்பவர்கள் இயற்கையை ரசித்துக் கொண்டே இந்த மலை ரயிலில் பயணிப்பதை பெரும் பேறாக கருதுகின்றனர். எனினும், முன்பதிவு வசதி கொண்ட இந்த ரயிலில் பயணிக்க இடம் கிடைப்பது பலருக்கும் குதிரை கொம்பாக உள்ளது. எவ்வளவு முயற்சித்தும் பலருக்கு இது நிறைவேறாக விஷயமாக இருக்கிறது.

அதுபோன்றே, ஊர்ந்து செல்லும் இந்த ரயிலில் பல மணிநேரம் அமர்ந்து செல்வதும் சிலருக்கு கால விரயமாகவும், சலிப்பு தட்டும் விஷயமாகவும் கருதுகின்றனர். இந்த நிலையில், ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மலை ரயிலில் பயணிக்கும் அனுபவத்தை வழங்குவதற்கு சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

அதன்படி, ஊட்டியிலிருந்து குன்னூருக்கு ரயில் பஸ் சேவையை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. அதென்ன, ரயில் பஸ் என்று கேட்கிறீர்களா? பார்ப்பதற்கு பஸ் போல ஒரே பெட்டியுடன் இந்த வாகனம் தண்டவாளத்தில் பயணிக்கும் என்பதால், இதனை ரயில் பஸ் என்று குறிப்பிடுகின்றனர்.

இந்த ரயில் பஸ் பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது. இதற்காக தனியாக எஞ்சின் தேவையில்லை. டிரெயின் - 18 மற்றும் மின்சார ரயில்கள் போலவே, ரயில் பெட்டிக்கு கீழ் பாகத்திலேயே எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். அதேபோன்று, ரயில் பஸ்ஸின் இரு புறத்திலும் ஓட்டுனருக்கான கட்டுப்பாட்டு அறை இருக்கிறது.

எனவே, இதனை இரு திசையிலும் எளிதாக இயக்க முடியும். இந்த ரயில் பஸ்சில் 30 பேர் வரை பயணிக்க முடியும். கடந்த வாரம் ஊட்டி- குன்னூர் இடையே இந்த ரயில் பஸ் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் திருப்திகரமாக அமைந்ததாக சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.

ஏற்றமான பகுதிகள், வளைவுகளில் இந்த ரயில் பஸ் திணறாமல் கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட இருக்கிறது. வடக்கு ரயில்வேயின் கைவசம் இருந்த இந்த ரயில்பஸ் பழமையானதாக இருப்பதால், திருச்சியிலுள்ள பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டு புனரமைப்பு பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்பிறகு, இந்த ரயில் பஸ் ஊட்டி- குன்னூர் இடையே சேவைக்கு அறிமுகம் செய்யப்படும். இந்த ரயில் பஸ் ஊட்டி - குன்னூர் இடையிலான தூரத்தை ஒரு மணிநேரத்தில் கடந்துவிடும். எனவே, அதிகமுறை ஊட்டி - குன்னூர் இடையே இயக்கும் வாய்ப்பு இருப்பதால், சுற்றுலா வருபவர்களுக்கு இந்த ரயில் பஸ்ஸில் பயணிக்க வாய்ப்பு கிடைக்கும்.
வரும் கோடை கால விடுமுறைக்கு முன்னதாக இந்த ரயில் பஸ்சை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துவிடுவதற்கு சேலம் ரயில்வே கோட்டத்தின் கீழ் செயல்படும், நீலகிரி மலை ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது நிச்சயம் சிறந்த சேவையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.


Click it and Unblock the Notifications