இனி பழைய வண்டிகளுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது... அரசின் திடீர் உத்தரவால் பொதுமக்கள் அதிர்ச்சி...
இந்தியாவில் காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னை நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டே செல்கிறது. இதற்கு பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலம் இயங்கும் பழைய வாகனங்கள்தான் மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுகின்றன. எனவே பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக வரும் நவம்பர் 1ம் தேதியில் (November 1) இருந்து, பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு, எரிபொருள் விற்பனை செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தலைநகர் பிராந்தியத்தின் (NCR - National Capital Region), 3 மாவட்டங்களில்தான் இந்த உத்தரவு அமலுக்கு வரவுள்ளது.

தேசிய தலைநகர் பிராந்தியம் என்பது, டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பல்வேறு மாவட்டங்களை உள்ளடக்கியது ஆகும். இந்த தேசிய தலைநகர் பிராந்திய பகுதியில், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 14 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த 14 மாவட்டங்களில், குருகிராம், ஃபரிதாபாத், சோனிபட் ஆகிய 3 மாவட்டங்களில்தான், வரும் நவம்பர் 1ம் தேதியில் இருந்து, பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தலைநகர் பிராந்தியத்தின் கீழ் வரும் எஞ்சிய மாவட்டங்களில், இந்த உத்தரவு, வரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.

தேசிய தலைநகர் பிராந்தியத்தை பொறுத்தவரையில், 10 ஆண்டுகள் ஆன டீசல் வாகனங்களும், 15 ஆண்டுகள் ஆன பெட்ரோல் வாகனங்களும், பழைய வாகனங்களாக கருதப்படுகின்றன. இந்த வாகனங்களுக்கு எல்லாம், தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளில், எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் நிரப்புவதில் சிக்கல்கள் ஏற்படவுள்ளன.
இந்த புதிய விதிமுறையை அமல்படுத்துவதற்கு ஏதுவாக, குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் சோனிபட் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளும், வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள், ஏஎன்பிஆர் கேமராக்களை (ANPR Camera - Automatic Number Plate Recognition Camera) பொருத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் பங்க்குகள், வரும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள், ஏஎன்பிஆர் கேமராக்களை பொருத்த வேண்டும். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி அங்கெல்லாம் வரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து, பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படாது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த அதிரடி நடவடிக்கையை அமலுக்கு கொண்டு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய வாகனங்களை விட பழைய வாகனங்கள் சுற்றுச்சூழலை மிக கடுமையாக மாசுபடுத்துகின்றன என்பது உண்மைதான். எனவே இது போன்ற நடவடிக்கைகள் அவசியமான ஒன்றாகவே கருதப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








