இனி ஹெல்மெட் போடாவிட்டால் பெட்ரோல் பங்க்கிற்குள் நுழையவே முடியாது.. வரும் 1ம் தேதி முதல் புது அதிரடி
ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க்கிற்குள் நுழையவே முடியாத வகையில், வரும் 1ம் தேதி முதல் புதிய திட்டம் அமலாகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மோட்டார் வாகன சட்டம் 1988ன் செக்ஸன் 129ன் படி, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தை இயக்குவது சட்ட விரோதம் ஆகும். அத்தகைய வாகன ஓட்டிகளை ஐபிசி (IPC - Indian Penal Code) செக்ஸன் 188ன் கீழ் 6 மாதங்கள் வரை சிறையில் அடைக்க முடியும்.

ஆனால் நம்மில் பெரும்பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியும் வழக்கத்தை கடைபிடிப்பது இல்லை. இதன் காரணமாக சாலை விபத்துக்களில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்த வண்ணமே உள்ளது.

சாலை விபத்துக்களில் அதிகம் பாதிக்கப்படுவது இரு சக்கர வாகன ஓட்டிகள்தான். ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தை இயக்குவதே இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. எனவே இரு சக்கர வாகன ஓட்டிகளை ஹெல்மெட் அணிய வைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ஹெல்மெட் அணிந்து வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே எரிபொருள் நிரப்ப வேண்டும் என பெட்ரோல் பங்க் நிர்வாகங்களுக்கு அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே ஹெல்மெட் அணியாவிட்டால் எரிபொருள் நிரப்ப முடியாது.

இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது பின்னால் அமர்ந்து வருபவரும் (Pillion Rider) ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். பில்லியன் ரைடர் ஹெல்மெட் அணியாவிட்டாலும் கூட அந்த இரு சக்கர வாகனத்திற்கு எரிபொருள் வழங்கப்படாது.

சாலை பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலத்தின் இரண்டு முக்கிய நகரங்களான நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய இரண்டு நகரங்களிலும்தான் தற்போது இந்த உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த இரண்டு நகரங்களிலும் வரும் ஜூன் 1ம் தேதி முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு நேற்றுதான் (மே 14) வெளியிடப்பட்டது. இதுதொடர்பான பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இதன்பின் பேசிய மாவட்ட மாஜிஸ்திரேட் ப்ரஜேஸ் நரைன் சிங், இந்த உத்தரவை முதற்கட்டமாக நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய இரண்டு நகரங்களிலும் கட்டாயமாக அமல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''ஹெல்மெட் அணியாமல் பெட்ரோல் பங்க்குகளுக்கு வருபவர்களிடம், ஹெல்மெட் அணிந்து வந்தால் மட்டுமே எரிபொருள் நிரப்பப்படும் என பெட்ரோல் பங்க் ஊழியர்கள் கட்டாயமாக சொல்ல வேண்டும்'' என்றார்.

நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய நகரங்களை தொடர்ந்து கவுதம புத்தா நகர் மாவட்டத்தின் ஊரகப்பகுதிகளிலும் இந்த திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவது குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளின் டிரைவிங் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹெல்மெட் அணியாமல் வந்து, பெட்ரோல் பங்க் ஊழியர்களுடன் தகராறு செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''ஹெல்மெட் அணியாமல் பெட்ரோல் பங்க்குகளுக்கு வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பற்றிய தகவல் மற்றும் வாகன எண்கள் சிசிடிவி கேமரா மூலமாக ட்ரேஸ் செய்யப்படும். அதன் பின் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் அவர்களின் டிரைவிங் லைசென்சும் ரத்து செய்யப்படும். ஒருவேளை பெட்ரோல் பங்க் ஊழியர்களுடன் யாரேனும் தவறாக நடந்து கொண்டால், Criminal Procedure Code (CrPC) செக்ஸன் 151ன் கீழ் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்'' என கூறப்பட்டுள்ளது.

ஆக மொத்தத்தில் ஹெல்மெட் அணியாமல் பெட்ரோல் பங்க்கிற்குள் சென்று விட்டால், சிசிடிவி கேமரா மூலமாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. அதே சமயம் பெட்ரோல் பங்க் ஊழியர்களுடன் தகராறு செய்தால் சிறை கம்பிகளை எண்ண வேண்டியதுதான்.

இதுதொடர்பாக வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் பெட்ரோல் பங்க் நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் நல்ல தரமான சிசிடிவி கேமராக்களை பெட்ரோல் பங்க் வளாகத்தில் பொருத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








