ஹோட்டல், மால்களில் டூவீலர்களை பார்க்கிங் செய்ய அதிரடி தடை? அதிகாரிகளின் யோசனைக்கு காரணம் இதுதான்
ஹோட்டல், ஷாப்பிங் மால்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பார்க்கிங் மையங்களில், டூவீலர்களை பார்க்கிங் செய்ய அதிரடியாக தடை விதிக்கப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனாலும் பெரும்பாலானோர் இதை கடைபிடிப்பதில்லை. இந்த சூழலில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் அனைவரையும் ஹெல்மெட் அணிய வைக்க வேண்டும் என்பதற்காக, உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் அதிரடி நடவடிக்கை ஒன்று அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி ஹெல்மெட் அணியாமல் டூவீலர்களில் வரும் நபர்களுக்கு அங்குள்ள பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் நிரப்பப்படாது. ஆனால் இதனையும் பின்பற்ற மறுக்கும் ஒரு சிலர், பெட்ரோல் பங்க் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

எனவே ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கும், ஒரு சில பெட்ரோல் பங்க் ஊழியர்கள் எரிபொருள் நிரப்பி விடுகின்றனர். அச்சமே இதற்கு காரணமாக உள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் நொய்டா அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.

எனவே ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு எரிபொருள் நிரப்ப கூடாது என்ற விதியை சிறப்பாக அமல்படுத்தும் நோக்கில், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தை அதிகாரிகள் நடத்தினர்.

கடந்த செவ்வாய்கிழமையன்று இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது இந்த விதியை தீவிரமாக அமல்படுத்துவது தொடர்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தரப்பில் இருந்து அதிகாரிகளுக்கு அதிரடியான பரிந்துரை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தரப்பில் கூறுகையில், ''ஹெல்மெட் அணியாமல் வரும் நபர்களின் இரு சக்கர வாகனங்களை பார்க்கிங் செய்ய ஹோட்டல்கள் மற்றும் மால்கள் உள்ளிட்ட இடங்களிலும் தடை விதிக்க வேண்டும் என நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்.

அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட பார்க்கிங் மையங்களிலும் அவர்களின் வாகனங்களை பார்க்கிங் செய்ய தடை விதிக்க வேண்டும். தற்போது பெட்ரோல் பங்க்குகளில் மக்கள் தகராறு செய்கின்றனர். ஆனால் மற்ற இடங்களிலும் இந்த விதி கட்டாயமாக்கப்பட்டு விட்டால், அவர்களுக்கு வேறு வழியே இல்லை.

கட்டாயமாக ஹெல்மெட் அணிந்துதான் ஆக வேண்டும்'' என்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் பரிசீலனை செய்யும் பட்சத்தில், வெகு விரைவில் ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட இடங்களில், ஹெல்மெட் அணியாதவர்களின் டூவீலர்களை பார்க்கிங் செய்ய தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் பி.என்.சிங் கூறுகையில், ''பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு தொடர்பான கவலைகள் உள்ளன. ஆனால் அவர்கள் உடனடியாக போலீஸை அணுகலாம்'' என்றார்.

இதனிடையே பெட்ரோல் பங்க் ஊழியர்களுடன் தகராறு செய்பவர்களை பிடிப்பதற்காக, பதற்றமான பெட்ரோல் பங்க்குகளில் போலீசார் மப்டியில் நிறுத்தப்படுவார்கள் என நொய்டா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








