பெட்ரோல் பங்க் மீது அதிரடி நடவடிக்கை எடுத்ததற்கு காரணம் இதுதான்.. ஆச்சரியப்படுத்தும் அரசு அதிகாரிகள்
பெட்ரோல் பங்க் ஒன்றின் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. எனவே இவை இரண்டையும் குறைக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதி அமலில் உள்ளது.

ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை கடைபிடிக்க தவறுகின்றனர். எனவே அவர்கள் அனைவரையும் ஹெல்மெட் அணிய வைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உத்தரபிரதேச மாநிலம் கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய நகரங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஒரு விதி இதற்கு ஒரு உதாரணம்.

இவ்விரு நகரங்களிலும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும், இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வந்தால் மட்டுமே எரிபொருள் நிரப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவரும் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். இருவரில் ஒருவர் ஹெல்மெட் அணியாவிட்டால் கூட அந்த டூவீலருக்கு எரிபொருள் நிரப்ப கூடாது.

இதனை அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் மிக கடுமையான பின்பற்ற வேண்டும் என அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில் இந்த விதிமுறையை பின்பற்ற தவறிய பெட்ரோல் பங்க் ஒன்று தற்போது அதிரடியாக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''கிரேட்டர் நொய்டாவில் உள்ள அனில் ஆட்டோ சர்வீஸ் ஸ்டேஷன் என்ற பங்க்கில், "No Helmet No Fuel" விதிமுறை பின்பற்றப்படவில்லை என எங்களுக்கு புகார்கள் வந்தன.

இதன் பேரில் அங்கு திடீரென ரகசியமாக சென்று ஆய்வு நடத்தினோம். அப்போது எங்களுக்கு வந்த புகார் உண்மை என தெரியவந்தது. ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கும் அங்கு எரிபொருள் நிரப்பியுள்ளனர். அத்துடன் பெட்ரோல் பங்க் முறையாக பராமரிக்கப்படவில்லை. அங்கு அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்தது. எனவே அந்த பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தோம்'' என்றனர்.

நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய இரண்டு நகரங்களிலும் இந்த விதிமுறை மிக தீவிரமாக பின்பற்றப்படுகிறது. ஆனால் இந்த விதிமுறையை கடுமையாக அமல்படுத்துவதில் ஒரு சில பிரச்னைகள் அவ்வப்போது எழவே செய்கின்றன. இதற்கு முன்பு ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் வந்த சிலர் எரிபொருள் நிரப்பும்படி பங்க் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

எனவே பெட்ரோல் பங்க்குகளை போலீசார் மப்டியில் கண்காணிக்கும் பணியை தொடங்கினர். அத்துடன் ஹெல்மெட் அணியாமல் பெட்ரோல் பங்க்கிற்கு வந்து, எரிபொருள் நிரப்பும்படி, பங்க் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்ட மூன்று பேர் அதிரடியாக கைதும் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது.

கிரேட்டர் நொய்டா நகரில், நடப்பாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை மொத்தம் 481 சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இதில், 220 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுதவிர 393 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். எனவேதான் அங்கு சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் விஷயங்களை மாவட்ட நிர்வாகம் மிக தீவிரமாக எடுத்து வருகிறது.

இதற்கு முன்பாக "No Helmet No Fuel" விதிமுறை இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் பல முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் நாளடைவில் அவற்றை வாகன ஓட்டிகளும் மறந்து விடுவார்கள். பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் மறந்து விடுவார்கள். அதிகாரிகளும்தான். ஆனால் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா நகரங்களில், அதிகாரிகள் இந்த விதிமுறையை மிகவும் உறுதியாக பின்பற்றி வருவது பாராட்டுக்குரியது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








