வாகன ஓட்டிகளை ஹெல்மெட் அணிய வைக்க அதிரடி... வேற லெவல் திட்டத்துடன் களமிறங்கிய போலீஸ்... என்னனு தெரியுமா?
வாகன ஓட்டிகளை ஹெல்மெட் அணிய வைப்பதற்காக காவல் துறையினர் அதிரடி திட்டம் ஒன்றை வகுத்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் இனி இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால், அவர்களின் வாகனங்களுக்கு பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் நிரப்பப்படாது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதியில் இருந்து இந்த அதிரடி உத்தரவு அமலுக்கு வருகிறது. நாசிக் காவல் துறை இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என காவல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன்படி ஹெல்மெட் அணியாமல் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்க கூடாது. இங்கே மற்றொரு முக்கியமான விஷயத்தையும் கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டியுள்ளது.

ஏதேனும் அவசர சூழ்நிலை என்றால், ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் பெட்ரோல் வழங்கலாம். ஆனால் அப்படி வழங்கும்பட்சத்தில், காவல் துறை தரப்பில் வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். தினசரி அடிப்படையில் இந்த விண்ணப்பத்தை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இதன்பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஏன் அந்த இரு சக்கர வாகன ஓட்டி ஹெல்மெட் அணியவில்லை? என்பது குறித்து விசாரணை நடத்துவார்கள். இதில் அனுமதிக்கப்பட்ட சிறப்பு காரணங்கள் தவிர, வேறு ஏதேனும் தேவையற்ற காரணங்களுக்காக ஹெல்மெட் அணியாமல் இருந்தது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யும்படி ஆர்டிஓ அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்படும்.

ஆனால் இந்த உத்தரவு காரணமாக இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் இடையே தகராறு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே தொடக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு பெட்ரோல் பங்க்குகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பிறகு பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் தொடர்ந்து ஈடுபடுவதா? அல்லது பாதுகாப்பை வாபஸ் பெற்று கொள்வதா? என்பது சூழ்நிலையை பொறுத்து முடிவு செய்யப்படும். இந்த நடவடிக்கை மிகவும் அவசியமான ஒன்று என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியாவில் ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் வழங்கப்படாது என அறிவிக்கப்படுவது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பாகவும் பல்வேறு நகரங்களில் இந்த உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் நாளடைவில் அந்த உத்தரவை யாரும் பின்பற்றாமல் நீர்த்து போய் உள்ளது. எனினும் நாசிக் காவல் துறையினர் இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்துவார்கள் என தெரிகிறது.

ஏனெனில் அதற்கு ஏற்ப காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை சாலை விபத்துக்களால் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றும் பட்சத்தில், இந்த எண்ணிக்கையை வெகுவாக குறைக்கலாம்.


Click it and Unblock the Notifications








