எலக்ட்ரிக் வாகனத்தை குறைந்த வட்டி லோனில் வாங்கலாம்னு இருந்தோமே!! ஆனால் அமைச்சர் சொன்ன ஒரே பதில்...
எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க நம் மத்திய அரசு கடந்த சில வருடங்களாகவே தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் கொண்டுவரப்பட்ட ஃபேம்-2 திட்டத்தின்படி எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோருக்கு குறிப்பிட்ட தொகை மானியமாக மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
அதாவது இந்த மானியம் கழிக்கப்பட்டே வாங்கும்போது எலக்ட்ரிக் வாகனங்களின் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, மாநில அரசாங்கங்கள் சார்பிலும் மானியங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த மானியங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுப்படுகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2023-24ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சில அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தன.

குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளின் உற்பத்தி மூலப் பொருட்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை குறிப்பிட்ட சதவீதம் குறைத்து கொள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இவை யாவும் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவை குறைத்து அவற்றின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற மத்திய அரசு நோக்கத்தின் வெளிப்பாடுகளாகும்.
இந்த வகையில், எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்காக கடன் கேட்போருக்கு குறைந்த வட்டியில் கடனுதவி அளிக்க வங்கிகளிடம் விரைவில் மத்திய கோரிக்கை வைக்கும் என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவியது. ஆனால் இவ்வாறான எந்த திட்டமும் தற்போதைக்கு மத்திய அரசிடம் இல்லை என மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்ற கூட்டத்தில் ஆணித்தனமாக தெரிவித்துள்ளார்.
எலக்ட்ரிக் வாகனங்களில் உள்ள பிரச்சனைகளுள் ஒன்று அவற்றின் அதிகப்படியான விலை ஆகும். சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகள் மானியங்களை கழித்த பின்பும் லட்சங்களை தாண்டி உள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கே இப்படியென்றால், எலக்ட்ரிக் கார்களுக்கு சொல்லவே வேண்டாம். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் காரான டாடா நெக்ஸான் இவி மத்திய அரசின் ஃபேம்-2 மானியங்களை கழித்த பின்னரும் ரூ.10 லட்சத்திற்கு மேல் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையினை கொண்டுள்ளது.
இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலையே, இன்ஸ்சூரன்ஸ், ஆர்டிஓ கட்டணங்கள் எல்லாம் சேர்த்தால் ஆன்-ரோடு விலை ரூ.12 லட்சத்தை தாண்டிவிடும். இவ்வளவு தொகையில் எல்லாராலும் எலக்ட்ரிக் காரை வாங்கவிட முடியாது. ஆதலால் குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி மேலும் பலரை எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க வைக்க உந்துதலாக இருக்கும். ஆனால் அத்தகைய திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இயக்கம் ஆனது எதிர்காலத்தில் எலக்ட்ரிக்கை சார்ந்தே இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மற்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளை போல் இல்லாமல் இந்தியாவை பொறுத்தவரையில், எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை தற்போதுதான் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டில் மொத்தமாக 10 லட்சத்திற்கும் அதிகமான எலக்ட்ரிக் வாகனங்கள் ஆர்டிஓ-வில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆனால் இதில் பெரும்பாலானவை எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களே ஆகும். எலக்ட்ரிக் கார்கள் இப்போதும் மாதத்திற்கு ஆயிரம் என்ற அளவிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் எலக்ட்ரிக் கார்களின் அதிகப்படியான விலையே ஆகும். இதனை சமாளிக்கும் பொருட்டு குறைந்த வட்டியில் கடனுதவியை வழங்க வங்கிகளை மத்திய அரசு கேட்டு கொள்ளும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் தற்போதைக்கு எந்த திட்டமும் இல்லை என பதில் வந்துள்ளது. இப்போது இல்லையென்றால், எப்போதும் இருக்காது என்றே தோன்றுகிறது.


Click it and Unblock the Notifications








