வாகன உரிமையாளர்களை மிரள விடும் புதிய சட்டம்! இனி இது இல்லேனா தலைகீழா நின்னாலும் பெட்ரோல், டீசல் போட முடியாது!
இந்தியாவிற்கு தற்போது மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்றாக மாறி கொண்டிருப்பது காற்று மாசுபாடு (Air Pollution) ஆகும். இந்தியா மட்டுமின்றி, நம்முடைய அண்டை நாடுகளான பாகிஸ்தான் (Pakistan) மற்றும் வங்கதேசம் (Bangladesh) ஆகியவையும் மிக கடுமையான காற்று மாசுபாடு பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றன. ஒட்டுமொத்தத்தில் இந்த பிராந்தியமே காற்று மாசுபாடு பிரச்னையில் சிக்கி கொண்டுள்ளது. இதற்கு அப்படியே மாறாக ஐஸ்லாந்து (Iceland), நியூசிலாந்து (New Zealand) மற்றும் ஃபின்லாந்து (Finland) ஆகிய நாடுகளில் காற்றின் தரம் சிறப்பாக இருக்கிறது.
இதற்கு இந்த நாடுகளின் அரசுகள் வகுத்துள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு கொள்கைகள் மிகவும் முக்கியமான காரணமாக உள்ளன. ஆனால் நம்முடைய பிராந்தியத்தில், தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களால் காற்று மிக கடுமையாக மாசடைகிறது. இந்தியாவில் சுமார் 15 கோடி மக்கள் மிகவும் அபாயகரமான காற்றை சுவாசித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அதாவது இந்த 15 கோடி மக்கள், உலக சுகாதார நிறுவனம் (World Health Organization - WHO) பாதுகாப்பானது என்று நிர்ணயம் செய்துள்ள அளவை காட்டிலும், 10 மடங்கு மோசமான காற்றை சுவாசித்து கொண்டுள்ளனர். இது சுமார் 10 ஆண்டுகளுக்கு முந்தைய தரவு ஆகும். எனவே இந்தியாவில் தற்போது மோசமான காற்றை சுவாசிப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இருப்பினும் இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள், பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மஹாராஷ்டிரா (Maharashtra) மாநில அரசு தற்போது அதிரடியான திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. இந்த புதிய திட்டம் அமலுக்கு வந்தால், அம்மாநிலத்தில் காற்று மாசுபாடு பிரச்னை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, இந்தியாவின் காற்று மாசுபாடு பிரச்னைக்கு, பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலமாக இயங்கும் வாகனங்கள் மிகவும் முக்கியமான காரணங்கள் ஆகும். இந்த வாகனங்கள் மூலமாக ஏற்படும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையிலான புதிய திட்டத்தைதான் மஹாராஷ்டிரா மாநில அரசு வகுத்துள்ளது.
இந்த புதிய திட்டத்தின்படி, மஹாராஷ்டிரா மாநிலத்தில் இனி மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் (Pollution Under Control Certificate - PUCC) இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்கள் விற்பனை செய்யப்படாது. பெட்ரோல் பங்க் நிர்வாகங்களுடன் இணைந்து, இந்த திட்டத்தை அமல்படுத்த மஹாராஷ்டிரா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்த புதிய திட்டத்தின்படி, இனி க்யூஆர் கோடுகள் (QR Codes) உடன் கூடிய மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வினியோகம் செய்யப்படும். இந்த சான்றிதழ்களில் உள்ள க்யூஆர் கோடுகள், பெட்ரோல் பங்க்குகளில் ஸ்கேன் செய்யப்படும். இதன் மூலம் அந்த சான்றிதழ்கள் உண்மையானதா? என்பது கண்டறியப்படும். அத்துடன் அவை காலாவதியாகி விட்டதா? என்ற விபரங்களும் உடனடியாக தெரிந்து விடும்.
மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ்கள் உண்மையானதாக இருக்க வேண்டும். அத்துடன் அவை காலாவதியும் ஆகி இருக்க கூடாது. அப்படி இருந்தால் மட்டுமே அந்த வாகனத்திற்கு எரிபொருள் விற்பனை செய்யப்படும். இல்லாவிட்டால் எரிபொருள் விற்பனை செய்யப்படாது. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த திட்டம் அமலுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தொழில்நுட்பத்தின் உதவியுடன் காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்த மஹாராஷ்டிரா அரசு முயல்வது பாராட்டுக்குரியது. உண்மையில் தற்போது நிறைய பேர் போலியான மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ்களை வைத்துள்ளனர். க்யூஆர் கோடு தொழில்நுட்பம் மூலம் அதனையும் கட்டுப்படுத்த மஹாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.
ஆனால் இந்த திட்டம் அமலுக்கு வரும்போது, வாகன உரிமையாளர்கள் அனைவரும் போதுமான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மஹாராஷ்டிரா மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசின் இதுபோன்ற திட்டங்களுக்கு வாகன உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே, காற்று மாசுபாடு பிரச்னையை நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு கட்டுப்படுத்த முடியும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.


Click it and Unblock the Notifications








