கதை முடிந்தது... இந்த ஊர்களில் புதிய டீசல் வாகனங்களை பதிவு செய்ய தடை... துணை முதல்வர் அதிரடி...
2 முக்கிய நகரங்களில், புதிய டீசல் வாகனங்களை பதிவு செய்ய தடை விதித்திருப்பதாக துணை முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை மிகவும் அதிகமாக இருப்பதற்கு பெட்ரோல், டீசல் வாகனங்கள் ஒரு காரணமாக உள்ளன. குறிப்பாக பழைய டீசல் வாகனங்களால், சுற்றுச்சூழல் மிக கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் பணிகளை உலக நாடுகள் செய்து வருகின்றன.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு படிப்படியாக விடை கொடுத்து விட்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத மின்சார வாகனங்களுக்கு முழுமையாக மாறி விட வேண்டும் என்பதே உலகின் பல்வேறு நாடுகளின் திட்டமாக உள்ளது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் டெல்லி உள்பட பல்வேறு முக்கியமான நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையில் சிக்கி தவித்து வருகின்றன.

இதன் காரணமாகவும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவும், மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த வரிசையில் பீகார் மாநில அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை ஒன்று தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதன்படி பீகார் மாநிலம் கயா மற்றும் முசாபர்பூர் ஆகிய இரு நகரங்களிலும் புதிய டீசல் வாகனங்களை பதிவு செய்வதற்கு அம்மாநில அரசு தற்போது தடை விதித்துள்ளது. இந்த இரண்டு நகரங்களிலும் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்து கொண்டே செல்வதால், அதனை கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசில் துணை முதல்வராக இருக்கும் சுஷில் குமார் மோடி இந்த தகவலை நேற்று (செப்டம்பர் 23) தெரிவித்தார். இந்த இரண்டு நகரங்களிலும் இனிமேல் புதிய மின்சார வாகனங்கள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படும் எனவும் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.

அப்படியானால் புதிய பெட்ரோல் வாகனங்களின் நிலை என்ன? என்பது குறித்த தெளிவான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதுகுறித்து ஈடி ஆட்டோ தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் டெல்லி ஐஐடி உடன் இணைந்து பீகார் மாநில தலைநகரான பாட்னாவில் காற்று மாசுபாட்டின் ஹாட்-ஸ்பாட்களை அம்மாநில அரசு கண்டறியும் எனவும் சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வரும் காலங்களில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு, குறிப்பாக பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இதுபோன்ற நெருக்கடிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக தென்படுகின்றன. ஏனெனில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மனதில் வைத்து கொண்டு, பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு படிப்படியாக முடிவு கட்டும் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள தொடங்கியுள்ளன.

இதன் காரணமாக மின்சார வாகனங்கள் விஸ்வரூப வளர்ச்சியை சந்திக்கும் என்பது உறுதி. தற்போதைய நிலையில் மின்சார வாகனங்கள் மக்களை அதிகம் சென்றடைய வேண்டும் என்பதற்காக மத்திய அரசும், டெல்லி, குஜராத் போன்ற பல்வேறு மாநில அரசுகளும் மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்குவது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








