இந்தியாவின் முக்கிய விவிஐபி பயன்படுத்திய கார் ஏலத்தில் புறக்கணிப்பு.. காரணம் என்ன..?
இந்தியாவின் முக்கிய பிரமுகர் ஒருவர் பயன்படுத்திய காரை ஏலத்தில் யாரும் எடுக்காதது ஆச்சரியம் அளித்துள்ளது. இது குறித்து விரிவாக காணலாம்.
கேரளாவின் நீண்ட கால முதல்வர் பயன்படுத்திய கார் ஒன்று ஏலத்தில் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் ஆலுவா நகரில் உள்ள சுற்றுலா பயண மாளிகைக்கு செல்பவர்கள் அந்த பழமையான மெர்சிடிஸ் ஈ-கிளாஸ் பென்ஸ் காரை பார்க்கத்தவற மாட்டார்கள்.

கேரளாவின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நபர் உட்பட கேரள மாநிலத்தின் முக்கிய விவிஐபிக்கள், அம்மாநிலத்திற்கு விஜயம் செய்யும் விஐபிக்கள் பலரும் உபயோகித்த கார் அது.

அவ்வளவு முக்கியத்துவம் கொண்ட சரித்திரத்தின் அடையாளமாக விளங்கும் ஒரு காரை குறைந்தபட்ச ஏலத்தொகையான 2 லட்ச ரூபாய்க்கு கூட யாரும் வாங்க முன்வரவில்லை என்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது.
அந்தக்காரின் வரலாற்று பின்னணியை பார்த்துவிடலாம்.

கேரள மாநிலத்தில் மூன்று முறை முதல்வராக பதவி வகித்தவர் என்ற பெருமை பெற்றவர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ‘ஈ.கே.நாயனார்' அவர்கள்.

கேரளாவின் முதல்வராக மூன்று முறையும், கேரள மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இரண்டு முறையும் அக்கட்சியின் மதிப்புமிக்க பொலிட் பீரோ உறுப்பினராகவும் பதவி வகித்த ஈ.கே.நாயனார் முதல்வராக பதவியில் இருந்த போது இந்த மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கினார்.

ஈ.கே.நாயனார் காலம் காலமாக தனது உபயோகத்திற்காக அம்பாஸிடர் காரையே பயன்படுத்தி வந்தார், ஆயினும் அவர் மூன்றாவது முறையாக முதல்வர் பதவியில் இருந்த போது அவருக்கு இதய நோய் ஏற்பட்டதையடுத்து 1998 மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் ஈ-கிளாஸ் காரை அலுவலக உபயோகத்திற்காக வாங்கினார்.

எளிமைக்கு பெயர் போன கேரள மாநிலத்தில் முதல்வர் சொகுசுக் காரை வாங்கியது அந்த நேரத்தில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. எனினும் அந்தக் காரை மூன்று ஆண்டுகள் அவர் பயன்படுத்தினார்.

பின்னர், 2001 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது, இதன் பிறகு நாயனார் பயன்படுத்திய பென்ஸ் கார் விவிஐபி பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

2006 ஆம் ஆண்டு வரையிலும் கவர்னர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட கேரளாவிற்கு வருகை புரியும் விவிஐபிக்கள் பயன்படுத்த இந்த கார் பயன்படுத்தப்பட்டது. முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு சென்று அவர்களை ஏற்றிவர இந்தக் கார் பயன்படுத்தப்பட்டது.

2007ஆம் ஆண்டில் இந்தக் கார் ஆலுவா சுற்றுலா பயணிகள் மாளிகைக்கு எடுத்துச் செல்லப்பட்டது, கொச்சிக்கு வருகை புரியும் முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டிற்காக பின்னர் இக்கார் பயன்படுத்தப்பட்டது.

2012ஆம் ஆண்டில் இந்தக் கார் பெரியளவில் பழுதடைந்தது, இதனை பழுதுநீக்க 5 லட்ச ரூபாய் செலவாகும் என்பதால் பழுது நீக்காமலே கேரஜில் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்தக்காரை பழுதுநீக்குவதற்கு பதிலாக ஏலத்தில் விற்பனை செய்ய சுற்றுலா நிர்வாகம் முடிவு செய்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் குறைந்தபட்சமாக ரூ.2 லட்சம் நிர்னயிக்கப்பட்டு ஏலத்திற்கு விடப்பட்டது.

எனினும் சரித்திரம் முக்கியத்துவம் கொண்ட இக்காரை ஏலத்தில் யாரும் எடுக்க முன்வரவில்லை. இது குறித்து அதிகாரிகள் கூறும்போது இக்காரை பழுதுநீக்க அதிகம் செலவாகும் என்பதால் ஏலத்தில் எடுக்க யாரும் முன்வரவில்லை என்று கருதுவதாகவும்.

மூன்று முறை முதல்வராக இருந்தவரும், கேரள மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாநில தலைவராகவும் பதவி வகித்த ஈ.கே.நாயனார் பயன்படுத்திய கார் என்பதால் நிச்சயம் அடுத்த முறை இந்தக் கார் ஏலத்தில் எடுக்கப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

கேரளாவின் முன்னாள் முதல்வராக பதவி வகித்த காலம் சென்ற ஈ.கே நாயனார் இந்தியாவின் முக்கிய விவிஐபிக்களுள் ஒருவராகவும் திகழ்ந்தவர் ஆவார். அவர் மட்டுமல்லாது பல முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்திய இந்தக் கார் ஏலத்தில் எடுக்கப்படாதது மிகுந்த ஆச்சரியத்தை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications








