இவங்கலாம் ஒரு பைசா கூட டோல்கேட் கட்டணம் கட்ட வேண்டாம்! ஒரே போடா போட்ட சிஎம்! கொண்டாட்டத்தில் மக்கள்!
இந்தியாவின் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் மக்களுக்கு, டோல்கேட் கட்டணம் (Toll Gate Fees) மிகப்பெரிய சுமையாக இருந்து வருகிறது. அதுவும் அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படாமலேயே, டோல்கேட்களில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர்.
இந்த சூழலில், ஒரு சில வாகனங்களுக்கு மட்டும் குறிப்பிட்ட காலத்திற்கு டோல்கேட் கட்டணம் செலுத்துவதில் இருந்து தற்போது விலக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே அந்த வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பயணம் செய்யலாம். இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

நடப்பு 2025ம் ஆண்டில் ஆஷாட ஏகாதசி (Ashadhi Ekadashi 2025), வரும் ஜூலை மாதம் வருகிறது. ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு மஹாராஷ்டிரா (Maharashtra) மாநிலம் பந்தர்பூரில் (Pandharpur) உள்ள வித்தல் ருக்மணி கோயிலுக்கு (Vitthal Rukmini Temple) பல லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை (Pilgrimage) செல்வது வழக்கம்.
நடப்பு 2025ம் ஆண்டில் மொத்தம் 20 லட்சம் பக்தர்கள் இந்த யாத்திரையில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவர்களின் வசதிக்காக புதிய திட்டம் ஒன்றை மஹாராஷ்டிரா மாநில அரசு தற்போது அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி, இந்த யாத்திரையில் கலந்து கொள்ளும் வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களுக்கு அவர்களின் உள்ளூர் காவல் நிலையங்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், பாஸ்கள் வழங்கப்படும். டோல்கேட்களில் இந்த பாஸ்களை காட்டி, அவர்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் (NHAI - National Highways Authority Of India) நிர்வகிக்கப்படும் டோல்கேட்களில் இந்த பாஸ்கள் செல்லுபடி ஆகும்.
அதேபோல் மஹாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டு கழகத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் டோல்கேட்களையும், இந்த பாஸ்கள் மூலம் பக்தர்கள் இலவசமாக கடக்கலாம். இந்த திட்டம் நேற்று (ஜூன் 18) அமலுக்கு வந்தது. வரும் ஜூலை 10ம் தேதி வரை அமலில் இருக்கும். இந்த கால கட்டத்தில், பாஸ்கள் வைத்துள்ள பக்தர்கள், டோல்கேட்களை இலவசமாக கடந்து கொள்ளலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹாராஷ்டிரா மாநில அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இதன் மூலம் பக்தர்களுக்கு கணிசமான தொகை மிச்சம் ஆகும். மற்ற மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களில் முக்கியமான நிகழ்வுகளின்போது இது போன்ற நடவடிக்கைகளை எடுப்பது குறித்து பரிசீலனை செய்யலாம்.


Click it and Unblock the Notifications








