"25 ஆயிரம் ரூபா அபராதம் கட்ட தயாருனா இத செய்யுங்க"... கடுமையான விதிகளை அறிவித்த குறிப்பிட்ட நகர்புற போலீஸ்!
இந்த தப்ப மட்டும் செஞ்சுடாதீங்க மிக அதிகபட்ச அபராதம் வசூலிக்கப்படும் என குறிப்பிட்ட நகர்புற காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கொரோனா வைரஸைக் காட்டிலும் கொடியதாக வாகன விபத்துகள் காட்சியளிக்கின்றன. இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்துக் கொண்டே வருகின்றது. இதனை குறைக்கும் பொருட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் ஓர் புதிய விதி அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தவிர்க்கும் விதமாக அந்த புதிய விதி உருவாக்கப்பட்டிருக்கின்றது. நாட்டில் அரங்கேறும் பெரும்பாலான விபத்துகளில் கணிசமான விபத்துகள் சிறுவர்கள் வாகனம் இயக்குவதால் அரங்கேறுவதாக கடந்த காலங்களில் நிகழ்ந்த விபத்து சம்பவங்கள் நமக்கு கூறுகின்றன.

அதிலும், சமீப காலமாக சிறுவர்கள் வாகனம் இயக்குவதால் அரங்கேறும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனைக் குறைக்கும் பொருட்டே நொய்டா போலீஸ் புதிய உத்தரவை வெளியிட்டிருக்கின்றது. வாகனத்தை இயக்க அனுமதிக்கும் சிறுவர்களின் பெற்றோர்களை எச்சரிக்கும் வகையிலேயே அப்புதிய விதிகள் அமைந்துள்ளன.

சிறுவர்களை வாகனம் இயக்க அனுமதிக்கும் பெற்றோர்களுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என கடுமையான எச்சரிக்கையை நொய்டா காவல்துறை விடுத்துள்ளது. சிறுவர்களுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாகனத்தை ஓட்ட அனுமதிக்கக் கூடாது என்பதற்காகவே இந்த உச்சபட்ச அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக நொய்டா காவல்துறை காரணம் தெரிவித்துள்ளது.

இதுவரை நொய்டா காவல்துறை 10 ஆயிரத்திற்கு அதிகமான வாகனங்களை பறிமுதல் செய்திருக்கின்றது. அனைத்தும் பள்ளி மாணவர்களிடம் இருந்து காவல்துறை பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது, கோவிட்-19 வைரஸ் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரி மீண்டும் செயல்பட தொடங்கியிருக்கின்றன. இந்த நிலையில், சிறுவர்கள் பலர் எந்தவொரு தயக்கமுமின்றி இருசக்கர வாகனங்களை இயக்கும் நிலை நகரத்தில் தென்படுவதாக காவல்துறை வருத்தம் தெரிவித்திருக்கின்றது.

இதனைத் தவிர்க்கும் பொருட்டே நொய்டா போலீஸார் சிறுவர்கள் வாகனம் இயக்குகின்ற விஷயத்தில் அதிரடி காட்டத் தொடங்கியிருக்கின்றனர். நொய்டா காவல்துறையின் இந்த அறிவிப்பிற்கு சமூக நல ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. இந்த அதிரடி நடவடிக்கையால் விபத்துகளின் எண்ணிக்கை நகரத்தில் கணிசமாகக் குறையும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிறுவர்கள் சிலர் துடிப்புடன் வாகனத்தை இயக்கும் நிலை தென்படுகின்றது. அதிக வேகத்தில் அவர்கள் வாகனத்தை இயக்கி பிறருக்கு ஆபத்தையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர். இதனை முழுமையாக தவிர்க்கும் பொருட்டே நொய்டா காவல்துறை புதிய விதியை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இதை மீறுபவர்கள் ரூ. 25 ஆயிரம் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க தயாராக இருங்கள் என தெரிவித்துள்ளது. மேலும், இந்த விஷயத்தில் எந்த கரிசனமும் காண்பிக்கப்படாது என மிகவும் அழுத்தமாக தெரிவித்திருக்கின்றனர்.

சமீபத்தில்கூட ஓர் புதிய விதியை மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இருசக்கர வாகனத்தில் குழந்தைகள் பயணிக்குமானால் அதிகபட்சம் மணிக்கு 40 கிமீ வேகத்தில் மட்டுமே வாகனத்தை இயக்க வேண்டும். அத்துடன், சிறுவர்களுக்கும் தலைக் கவசம் அணிக்க வேண்டும் என்ற புதிய விதிகள் அறிவிக்கப்பட்டன. இதை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும், இவ்விதியை மீறும் வாகன ஓட்டிகளுக்கு 3 மாதங்கள் லைசென்ஸ் ரத்து போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய விதி வரும் 2023ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, சிறுவர்களுக்கான ஹெல்மெட்டை தயாரிக்கும்படி ஹெல்மெட் உற்பத்தி நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டிருக்கின்றது. லேசான எடை உள்ளிட்ட சிறப்புகளுடன் அவை உருவாக்க வேண்டும் என சில வழிமுறைகளையும் அரசு அறிவித்திருக்கின்றது.

இதுமட்டுமில்லைங்க, நாட்டில் பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு அண்மையில் கார்களின் பின் பக்க இருக்கையின் நடுப் பகுதியில் அமர்பவர்களுக்கும் Y வடிவ சீட் பெல்டை கட்டாயமாக்குவதற்கான முயற்சியிலும் அரசு களமிறங்கியிருக்கின்றது. பொதுவாகன வாகன உற்பத்தியாளர்கள் காரின் முன் மற்றும் பின் பக்க ஜன்னல் இருக்கைகளுக்கு மட்டுமே ஒய் வடிவ சீட் பெல்டை வழங்குகின்றனர். ஆகையால், பின்னிருக்கையின் நடு பகுதியில் அமர்பவர்களுக்கு போதியளவு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகின்றது. இதனைக் களையும் பொருட்டே அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications