வாகனங்கள் கொத்து கொத்தாக பறிமுதல் செய்யப்படுவதற்கு காரணம் இதுதான்.. அடுத்தது உங்களுடையதாக இருக்கலாம்
பல்வேறு காரணங்களுக்காக வாகனங்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகள் எதையும் ஒழுங்காக கடைபிடிப்பதே கிடையாது. குடிபோதையில் தாறுமாறாக வாகனங்களை இயக்குவது, செல்போனில் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவது என இந்தியாவில் வாகன ஓட்டிகளின் போக்குவரத்து விதிமுறை மீறல்களை அடுக்கி கொண்டே போகலாம்.

இவ்வாறான போக்குவரத்து விதிமுறை மீறல்கள்தான் இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம். இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்களில், கொத்து கொத்தாக உயிர்கள் பலியாகின்றன. எனவே விபத்து உயிரிழப்புகளை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கான அபராதம் கடுமையாக்கப்பட்டுள்ளது. இவை தவிர வாகனங்களில் பேன்ஸி நம்பர் பிளேட்களையும் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். சட்டத்திற்கு புறம்பாக நடிகர், நடிகைகள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் ஒட்டப்பட்ட நம்பர் பிளேட்களுடன் உலா வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் ஏராளம்.

இத்தகைய வாகனங்களுக்கு எதிராகவும் தற்போது நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் உத்தரபிரதேச மாநிலம் கவுதம புத்தா நகர் மாவட்ட போலீசார், 'ஆபரேஷன் க்ளீன்' என்ற பெயரில், விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு எதிராகவும் மற்றும் ஆவணங்கள் இல்லாத, பேன்ஸி நம்பர் பிளேட் கொண்ட வாகனங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த சூழலில், 'ஆபரேஷன் க்ளீன்' திட்டத்தின் 7வது எடிசனை கவுதம புத்தா நகர் போலீசார் கடந்த வாரம் தொடங்கினர். இதன் கீழ் விதிமீறல்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுப்பதற்காக, கவுதம புத்தா நகர் மாவட்டத்திற்கு உட்பட்ட நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய நகரங்களில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.

இதன்படி கடந்த புதன்கிழமையன்று, சட்டத்திற்கு புறம்பாக இயக்கப்பட்ட 1,174 ஆட்டோ ரிக்ஸாக்கள் மற்றும் டெம்போக்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். அதன்பின் வியாழக்கிழமையன்று 73 சொகுசு பஸ்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பஸ்கள் தேவையான ஆவணங்கள் இல்லாமல் டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்திற்கு இடையே இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமையன்று, அனுமதி பெறாத இடங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்த 2,400 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் அன்றைய தினம் இதே காரணத்திற்காக 200 வாகனங்கள் 'டோ' செய்து எடுத்து செல்லப்பட்டன. போலீசாரின் அதிரடி நடவடிக்கை அதன்பின் வந்த சனிக்கிழமையும் தொடர்ந்தது.

சனிக்கிழமையன்று வெறும் மூன்று மணி நேரத்தில் 474 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பொது இடத்தில் மது அருந்தியது மற்றும் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியது ஆகிய காரணங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன்பின் கடந்த ஞாயிற்று கிழமையன்று, போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

அன்றைய தினம் 1,457 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் 99 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஞாயிற்றுகிழமை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ''ஞாயிற்று கிழமை நடைபெற்ற சோதனையில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். பல்வேறு விதிமுறை மீறல்களுக்காக 1,457 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதில், இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 977. நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 480. கார் ஜன்னல் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியது மற்றும் ஜாதி, மதம், தொழில், அரசியல் கட்சி உடனான தொடர்பு உள்ளிட்டவற்றை குறிக்கும் வாக்கியங்களை எழுதியது உள்ளிட்ட காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டது.

வாகனங்களின் நம்பர் பிளேட்கள் மற்றும் கார்களின் பின் பக்க கண்ணாடிகளில் இவை எழுதப்பட்டிருந்தன. இதுதவிர அன்றைய தினம் 99 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில், இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 91. தேவையான ஆவணங்கள் இல்லாததால் இந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன'' என்றனர்.
போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தற்போது இந்தியா முழுக்க தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய விதிமுறை மீறல்களில் ஈடுபட்டால், நாளை உங்கள் வாகனமும் கூட பறிமுதல் செய்யப்படலாம். எனவே போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் மதித்து நடந்து கொள்வதே நல்லது.


Click it and Unblock the Notifications








