போலீஸ் கண்ணில் விரல் விட்டு ஆட்டி வந்த கும்பல் சிக்கியது... எவ்வளவு கார்களை திருடியுள்ளனர் தெரியுமா?
காவல் துறையினரின் கண்ணில் விரல் விட்டு ஆட்டி வந்த வாகன கொள்ளை கும்பல் சிக்கியுள்ளது.

இந்தியாவில் வாகன திருட்டு சம்பவங்கள் மிகவும் அதிகமாக நடைபெற்று வருகின்றன. வாகனங்கள் திருடு போவதை தடுப்பதற்காக, உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு புதுப்புது தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வருகின்றன. எனினும் கை தேர்ந்த கொள்ளையர்கள் வாகனங்களை எளிதாக திருடி சென்று விடுகின்றனர்.

கொள்ளையர்களும் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்தவர்களாக இருப்பதால், ஒரு சில சமயங்களில் திருட்டை தடுப்பது வாகன உரிமையாளர்களுக்கு மிகவும் சவாலான காரியமாக மாறி விடுகிறது. இங்கு ஊரடங்கு மிகவும் தீவிரமாக இருந்த சமயத்தில், வாகன கொள்ளை சம்பவங்கள் ஓரளவிற்கு கட்டுக்குள் இருந்தன. ஆனால் தற்போது மீண்டும் வாகன திருட்டு குற்றச்செயல்கள் தலைதூக்க தொடங்கியுள்ளன.

இதை தடுக்கும் முயற்சிகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் ஆறு பேர் அடங்கிய வாகன கொள்ளை கும்பலை செக்டார் 58 காவல் நிலைய அதிகாரிகள் தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்களிடம் இருந்து 13 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தற்போது வரை சுமார் 100 வாகனங்களை இந்த கும்பல் கொள்ளையடித்துள்ளதாக நொய்டா காவல் துணை ஆணையர் ராஜேஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''இந்த கும்பலை சேர்ந்தவர்கள் டெல்லி தேசிய தலைநகர் பகுதியில் நீண்ட காலமாக வாகன திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை சுமாராக 100 வாகனங்கள் அவர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மின்னணு சாதனங்களை தவறாக பயன்படுத்தி, அவர்கள் வாகனங்களை கொள்ளையடித்துள்ளனர். இப்படி கொள்ளையடிக்கப்பட்ட வாகனங்கள் விற்பனைக்காக காஷ்மீருக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்னும் சந்தேகம் எங்களுக்கு உள்ளது'' என்றார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஆறு பேரில், 2 முக்கியமான நபர்களும் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

அவர்களில் ஒருவர் மீரட் நகரில் இருந்தும், மற்றொருவருர் காஷ்மீரில் இருந்தும் சிக்கியுள்ளனர். வாகனத்தை திருடிய உடன் அதன் பதிவு எண், நம்பர் பிளேட் மற்றும் வண்ணம் ஆகியவற்றை மாற்றி விடுவதை அவர்கள் வாடிக்கையாக செய்து வந்துள்ளனர். காவல் துறையினரிடம் சிக்கி கொள்ளாமல் இருப்பதற்காக அவர்கள் இதனை செய்துள்ளனர்.

இந்த கும்பலை சேர்ந்த மேலும் 2 பேர் தற்போது வெளியில் நடமாடி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த இரண்டு பேரையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விரைவில் அவர்களும் பிடிபடுவார்கள் என காவல் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் டெல்லி தேசிய தலைநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார் உரிமையாளர்கள் கவனமாக இருந்தால் மட்டுமே இதுபோன்ற கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க முடியும். இல்லாவிட்டால் உங்கள் விலை உயர்ந்த வாகனத்தை அவர்களிடம் நீங்கள் பறிகொடுக்கும் சூழல் ஏற்படலாம். கார்கள் திருடு போனால் அவற்றின் இருப்பிடத்தை கண்டறியும் சாதனங்களை பொருத்தி வைப்பது நல்லது. கொள்ளையடிக்கப்பட்ட காரை விரைவாக கண்டுபிடிப்பதற்கு அது உதவும்.

அதேபோல் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கும்போதும் கவனமாக இருப்பது நல்லது. இல்லாவிட்டால் வேறு நபர்களிடம் இருந்து திருடப்பட்ட கார்களை உங்கள் தலையில் கட்டி விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படிப்பட்ட கார்களை நீங்கள் தவறுதலாக வாங்கி விடும் பட்சத்தில், பின்நாட்களில் சிக்கலில் சிக்கி கொள்ளும் சூழலும் ஏற்படலாம்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








