40 லட்ச ரூபாய் லோனில் உள்ள காரை அலேக்காக திருடிய கொள்ளையர்கள்... எப்படினு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க
இன்னும் 40 லட்ச ரூபாய் லோன் கட்ட வேண்டியுள்ள காரை கொள்ளையர்கள் அலேக்காக திருடி சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கார் மற்றும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் கொள்ளையடிக்கப்படும் சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகின்றன. வாகன உரிமையாளர்கள் எவ்வளவுதான் விழிப்புடன் இருந்தாலும், கொள்ளையர்கள் புதுப்புது டெக்னிக்குகளை கையாண்டு கைவரிசை காட்டி விடுகின்றனர். அவர்களை பிடிப்பதில் காவல் துறையினரும் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர்.

வாகன கொள்ளை சம்பவங்களை தடுக்க காவல் துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், உத்தர பிரதேச மாநிலம் நொய்டா நகரில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ லக்ஸரி கார் ஒன்று கொள்ளையர்களால் திருடப்பட்டுள்ளது.

நொய்டா நகரில், பேஸ்-2 காவல் நிலைய எல்லைக்குள் வரும் செக்டார் 90 பகுதியில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. பங்கு தரகராக பணியாற்றி வரும் ரிஷப் அரோரா என்பவரிடம் இருந்து விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ லக்ஸரி காரை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

ரிஷப் அரோரா ஓட்டி வந்தது அவரது உறவினர் ஒருவருக்கு சொந்தமான பிஎம்டபிள்யூ கார் ஆகும். கடந்த ஒரு வார காலமாகதான் ரிஷப் அரோரா அந்த காரை பயன்படுத்தி வந்தார். லோன் மூலமாகதான் இந்த கார் வாங்கப்பட்டுள்ளது. இன்னும் 40 லட்ச ரூபாய் லோன் நிலுவையில் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரவு நேரத்தில், பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு ரிஷப் அரோரா பிஎம்டபிள்யூ காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. வழியில் சிறுநீர் கழிப்பதற்காக அவர் காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அங்கு வந்து காரை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர்.

இது குறித்து காவல் துறையினரிடம் ரிஷப் அரோரா புகார் அளித்துள்ளார். இதில், மோட்டார்சைக்கிளில் வந்த கொள்ளையர்கள், தனது முதுகில் துப்பாக்கி வைத்து மிரட்டி, காரை கொள்ளையடித்து சென்றதாக அவர் கூறியுள்ளார். ஆனால் ரிஷப் அரோரா குடிபோதையில் இருந்ததாக கூறப்படுவதால், இது தொடர்பாக விசாரிக்க வேண்டியுள்ளது என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ''பிஎம்டபிள்யூ கார் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அடையாளர் தெரியாத நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கோணங்களிலும் இந்த வழக்கை நாங்கள் விசாரித்து வருகிறோம். விரைவில் காரை மீட்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

காரின் உரிமையாளருக்கு ஏற்கனவே அறிமுகமான ஒரு சிலர்தான் திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. இந்த கோணத்திலும் விசாரித்து வருகிறோம்'' என்றனர். கார் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக புகார் வந்த உடனேயே மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனிடையே குடிபோதையில் கார் ஓட்டியதற்காக ரிஷப் அரோரா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேட்டதற்கு காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ''குற்றவாளிகளை கைது செய்து, பிஎம்டபிள்யூ காரை மீட்பதற்குதான் அதிக முன்னுரிமை கொடுக்கப்படும். ஏனெனில், நகர சாலைகளில் ஒருவருடைய கார் இவ்வாறு கொள்ளையடிக்கப்படுவது சாதாரண விஷயமல்ல.

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர். இந்தியாவில் இத்தகைய கொள்ளை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது வாகன உரிமையாளர்கள் மத்தியில், அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கொள்ளையர்களின் கைவரிசைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால், எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








