இது இந்தியா தானா? வட இந்திய சுற்றுலா பயணிக்கு பயங்கர ஆச்சிரியம் - வைரலாகும் வீடியோ
தனி மனித ஒழுக்கத்தை பிரதிபலிக்கும் இடம் சாலை என்றால் அதில் மாற்று கருத்து இல்லை. எல்லாரும் சாலை விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே அது எல்லாருக்கும் பயனளிக்கும். ஆனால், நம் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் சாலை விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவது இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. நம்ம நாட்டு மக்களுக்கு எல்லாவற்றிற்கும் அவசரம். இலவச பொருட்கள் எல்லாருக்கும் தர போகிறார்கள் என்றாலும், எங்கே நமக்கு கிடைக்காமல் போய்விட போகிறது என எண்ணி கூட்டம் நெரிசல் உடன் அந்த பொருட்களை வாங்குவதே நம் மக்களுக்கு பழக்கம்.
அதேபோல் சாலையிலும் வாகனங்களில் ஒன்றன்பின் ஒன்றாக செல்லாமல், நாம் விரைவாக சென்றால் மட்டும் போதும்... மற்றவர்கள் கதி என்ன ஆனால் நமக்கென்ன என நினைப்பவர்களே அதிகமாக உள்ளனர். இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நாம் மட்டுமே புத்திசாலி, மற்றவர்கள் ஏமாளி என்றே நிறைய பேர் செயல்படுகின்றனர்.

மக்களின் இந்த மன நிலைக்கு முக்கிய காரணம், ஒழுக்கத்தை கற்று கொடுக்கும் கல்வி அறிவு இல்லாமையே ஆகும். ஒரு சில படித்தவர்கள் கூட சட்ட விதிமுறைகளை பின்பற்றுவது இல்லை என்பதும் உண்மைதான். ஆனால், மற்றவர்களினால் தான் அவர்களும் அவ்வாறு செயல்படுகின்றனர். கல்வியறிவு ஒரு சமூகத்தை எந்த அளவிற்கு மாற்றும் என்பதற்கு உதாரணமாக ஒரு வீடியோ கேரளாவில் இருந்து வெளியாகி உள்ளது.
கேரளா (Kerala), இந்தியாவிலேயே அதிக கல்வி பெற்ற மக்களை கொண்ட மாநிலம் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். இதனாலேயே அந்த மாநிலத்தில் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து விதிமுறைகள் வாகன ஓட்டிகளால் முறையாக பின்பற்றப்படுகின்றன. அதனை வெளிக்காட்டும் வீடியோ தான் தற்போது வெளியாகி உள்ளது.

வட இந்தியாவை சேர்ந்த ஒருவர் கேரளாவுக்கு சென்றுள்ளார். காரில் சென்ற அவர், இரயில் வழித்தடத்தில் இரயில் கடப்பதற்காக காத்துக் கொண்டிருந்த சமயத்தில் மற்ற வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்கும் அழகை பார்த்து மெய்சிலிர்த்து போய் உள்ளார். உடனே அதனை தனது மொபைல் போனில் காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட, அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதுகுறித்த அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், "கேரள சாலைகளில் 15 நாட்களை கழித்தேன். சரியானதாக இல்லாவிட்டாலும் இதை நான் சொல்ல வேண்டும், மக்கள் இங்கு வாகனம் ஓட்டும் விதத்தில் ஒரு குறிப்பிடத்தக்க ஒழுங்கு உணர்வு உள்ளது. ஓட்டுநர்கள் பாதைகளை மதிக்கிறார்கள், மேலும் ஒரு சொல்லப்படாத ஒருங்கிணைப்பு செயல்படுகிறது.
ஒருமுறை, நான் ஒரு பேருந்தை கடந்து செல்ல அனுமதித்தேன், அதன் ஓட்டுநர் நன்றி தெரிவிக்கும் விதமாக ஹார்னை அடித்தார் - ஒரு சிறிய ஆனால் வெளிப்படையான சைகை. சாலைகளில் விலங்குகள் அலைந்து திரிவதை நீங்கள் காண முடியாது. இது இந்தியாவின் பல பகுதிகளில் அரிதானது. நிச்சயமாக பொறுப்பற்ற முறையில் சிலர் வாகனம் ஓட்டிய சம்பவங்களும் இருந்தன. ஆனால், அவை வழக்கமானதாக இல்லாததால் தனித்து தெரிந்தன" என குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேரள மக்களின் சாலை போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்கும் விதமே மிகவும் அழகானது. அதனை இந்த நபர் இன்னும் அழகூட்டி தெரிவித்துள்ளார். வட இந்தியாவை சேர்ந்தவர் இந்த அளவிற்கு புரிந்துணர்வுடன் பேசியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவும் சாலை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றும் விஷயத்தில் கேரளாவை போல் மாறினால் நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








