இவரே இப்படி செய்யலாமா... இரயிலில் ஃபுட்போர்டு அடித்து சென்ற பிரபல நடிகர்... இரயில்வே நிர்வாகத்தின் கண்டன பதில்
2020இல் துவங்கிய கொரோனா காலக்கட்டத்தில் பலர் பிரபலமாகினர். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், வில்லன் நடிகராக நம் முன் அறிமுகமான பாலிவுட் நடிகர் சோனு சூட். கொரோனா காலத்திற்கு முன்பே பல ஏழை, எளியருக்கும், உதவி தேவைப்படுவோருக்கும் உதவிகளை செய்துவந்தாலும், கொரோனா கால சமயத்தில் இன்னும் நாடு முழுவதும் அறியப்பட துவங்கினார்.
ஆனால் கடந்த டிசம்பர் மாதத்தில், சோனு சூட் தனது சமூக வலைத்தள பக்கம் ஒன்றில் வெளியிட்ட வீடியோ ஆனது பலரை முகம் சுளிக்க வைத்தது. ஏனெனில் இந்த வீடியோவில், அதிவேகமாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றில் சோனு சூட் கதவிற்கு அருகே அமர்ந்துவாறு, ஃபுட்போர்டு அடித்து கொண்டு பயணிப்பதுபோல் காட்டப்பட்டு இருந்தது. ரயிலின் பெட்டி ஒன்றில் பயணிகள் நுழைய/வெளியேற இருக்கும் வாயிற்கதவிற்கு அருகே பயணிகள் ஏற, இறங்க பயன்படுத்தும் கம்பியை பிடித்தவாறு அங்கேயே அமர்ந்து கொண்டு சோனு சூட் பயணம் செய்துள்ளார்.

22 வினாடிகள் ஓடக்கூடியதாக இருக்கும் இந்த வீடியோவை தற்போது வரையில் மட்டுமே 13 லட்சத்திற்கும் அதிகமானார் பார்த்துள்ளனர். இது சட்டத்திற்கு புறம்பான செயல் என்பதால், நடிகர் சோனு சூட்டின் இந்த டுவிட்டர் வீடியோ பதிவிற்கு பலரும் தங்களது ஆதங்கங்களையும், "உங்களிடம் இருந்து இப்படியொரு பதிவை எதிர்பார்க்கவில்லை" என தங்களது வருத்தங்களையும் தெரிவித்து இருந்தனர். அதேபோல், மும்பை ஜிஆர்பி போலீஸாரும் கூட சோனு சூட்டின் பதிவில் தங்களது கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.
ஆனால் வடக்கு இரயில்வே துறை இந்த பதிவிற்கு சற்று தாமதமாக கடந்த ஜனவரி 4ஆம் தேதியில் தான் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தது. நடிகர் சோனு சூட்டை டேக் செய்து டுவிட்டரில் வடக்கு இரயில்வே நிர்வாகம், "நாட்டிலும், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நீங்கள் ஒரு முன்மாதிரி. ரயில் படிகளில் பயணம் செய்வது ஆபத்தானது, இந்த வகையான வீடியோ உங்கள் ரசிகர்களுக்கு தவறான செய்தியை அனுப்பலாம்.
தயவுசெய்து இதை செய்யாதீர்கள்! சுமூகமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை அனுபவிக்கவும்." என தனது கண்டனத்தை பதிவு செய்து உள்ளது. இதற்கு அடுத்த ஜனவரி 5ஆம் தேதியே சோனு சூட் பதிலளித்து உள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறியதாவது, "மன்னிக்கவும், அங்கேயே அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தேன். இன்னும் ரயிலின் கதவுகளின் அருகே அமர்ந்து பயணிக்கும் அந்த லட்சக்கணக்கான ஏழைகள் எப்படி உணருவார்கள் என்று.
இந்த செய்திக்கும், நாட்டின் ரயில்வே அமைப்பை மேம்படுத்தியதற்கும் நன்றி." என்றார். ஏற்கனவே கூறியதுபோல், கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்து சோனு சூட் எதை செய்தாலும் அது செய்தியாக மாறிவிடுகிறது. தற்போதும்கூட சோனு சூட் தனது தொண்டு நிறுவனம் மூலம் உதவி கேட்டு வருபவர்களுக்கு பல்வேறு நல உதவிகளை செய்து வருகிறார். அத்தோடு பாலிவுட் துறையில் நடிக்க வருபவர்களுக்காக உதவுவதற்கு மும்பையில் தனி மையம் ஒன்றையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், சொகுசு கார்களை வாங்கி குவிப்பதையும் சோனு சூட் வழக்கமாக கொண்டுள்ளார். இந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு கூட சோனு சூட்டின் கேரேஜில் புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் இணைக்கப்பட்டு இருந்தது. சோனு சூட் வாங்கியிருப்பது பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் 740 எல்ஐ எம் ஸ்போர்ட் வேரியண்ட்டாகும். வெள்ளை நிறத்தில் இந்த நடிகர் வாங்கியுள்ள இந்த பிஎம்டபிள்யூ காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ரூ.1.44 கோடி ஆகும்.
பிஎம்டபிள்யூவின் புதிய லக்சரி செடான் காரான 7 சீரிஸ் இந்திய சந்தையில் லாங்-வீல்பேஸ் வெர்சனில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. இருப்பினும் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி ஹைப்ரீட் தேர்விலும் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் சோனு சூட் வாங்கியிருப்பது 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்-லைன் 6-சிலிண்டர் என்ஜினை கொண்ட பெட்ரோல் வேரியண்ட் ஆகும். இந்த 2023ஆம் வருடத்தில் இந்த லக்சரி செடான் 7ஆம் தலைமுறைக்கு அப்டேட் செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications