பெட்ரோல் பங்க்குகளை மூட போகும் முதல் நாடு அநேகமா இதுதான்! அமெரிக்கா, சீனானு எதிர்பார்த்தோம்!!
பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) வாகனங்களில் இருந்து உலகம் மெல்ல மெல்ல மாற்று எரிபொருள் வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசலுக்கு பதிலாக ஹைப்ரீட் (Hybrid), சிஎன்ஜி (CNG), ஹைட்ரஜன் (Hydrogen) என சில மாற்று எரிபொருள்கள் புழக்கத்திற்கு வந்தாலும், உலகின் எதிர்கால போக்குவரத்து எலக்ட்ரிக் (Electric)-ஐ சார்ந்துதான் இருக்கும் என கூறப்படுகிறது. உலகமே எனும்போது அதில் நமது இந்தியா மட்டும் என்ன விதிவிலக்கா... இதனை புரிந்துக்கொண்ட நம் மத்திய அரசு எலக்ட்ரிக் வாகனங்கள் விஷயத்தில் கடந்த சில மாதங்களாகவே முனைப்பு காட்டி வருகிறது.
இந்தியா உள்பட உலக நாடுகளின் அரசாங்கங்கள் எலக்ட்ரிக்கை கொண்டுவர துடிப்பதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது. அதுதான் அந்நிய கச்சா எண்ணெய் இறக்குமதி ஆகும். இருப்பினும், மற்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு இன்னமும் ஆரம்ப கட்ட நிலையில்தான் உள்ளது என சொல்ல வேண்டும்.

ஆனால், ஒரு சில வெளிநாடுகள் ஏற்கனவே முழுவதுமாக எலக்ட்ரிக்கிற்கு தயாராகிவிட்டன. அத்தகைய நாடுகளுள் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், நார்வே (Norway)-ஐ சொல்லலாம். பனி சூழ்ந்த வடக்கு ஐரோப்பிய நாடான நார்வேயில் கடந்த 2024ஆம் ஆண்டில் மக்களால் வாங்கப்பட்ட புதிய கார்களில் சுமார் 88.9% கார்கள் எலக்ட்ரிக் கார்கள் ஆகும்.
அதாவது, நார்வேயில் கார் வாங்கும் 10இல் 9 பேர் தேர்வு செய்வது எலக்ட்ரிக் காரை ஆகும். நம் இந்தியாவில் 10இல் ஒருவர் மட்டுமே எலக்ட்ரிக் காரை தேர்வு செய்கிறார். அதுவும், டெல்லி, பெங்களூர் போன்ற முக்கியமான மாநகரங்களில் மட்டும்தான். அப்படியென்றால், எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் நார்வே எந்த அளவிற்கு முன்னேறியுள்ளது என்பதை காணலாம்.
நார்வேயில் 2023ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட மொத்த கார்களில் எலக்ட்ரிக் கார்களின் சதவீதம் ஆனது 82.4 ஆக இருந்தது. இந்த புள்ளி விபரங்கள் அனைத்தையும் நார்வேயன் சாலை அமைப்பு (Norwegian Road Federation) வெளியிட்டுள்ளது. இந்த நாட்டில் எலக்ட்ரிக் கார்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த 2025ஆம் ஆண்டிலும் புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், நார்வே அரசாங்கம் நிர்ணயித்துள்ள இலக்குடன் ஒப்பிடுகையில் அந்த நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு கொஞ்சம் மெதுவாகவே அதிகரித்து வருகிறது. 88.9% என்பது குறைவா? என நீங்கள் கேட்பது புரிகிறது. நார்வே அரசாங்கம் 2025ஆம் ஆண்டு முடிவதற்கு உள்ளாக சாலையில் இயங்கும் அனைத்து கார்களையும் எலக்ட்ரிக் ஆக மாற்ற வேண்டும் என சில வருடங்களுக்கு முன்பே இலக்கை நிர்ணயித்துக் கொண்டுள்ளது.
நார்வேயில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக டெஸ்லா, ஃபோக்ஸ்வேகன் மற்றும் டொயோட்டா விளங்குகின்றன. அதேபோல், சீன எலக்ட்ரிக் கார் நிறுவனங்களும் மொத்த விற்பனையில் கிட்டத்தட்ட 10 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. எலக்ட்ரிக் கார்கள் பயன்பாடு அங்கு அதிகரித்து இருப்பதற்கு காரணம், பெட்ரோல், டீசல் கார்களுக்கு விதிக்கப்படும் அதிகப்படியான வரிகள் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகளவில் எலக்ட்ரிக் கார்களுக்கு வேகமாக மாறிவரும் நாடாக நார்வே விளங்குகிறது. இத்தனைக்கும் அதிகளவில் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நாடுகளுள் ஒன்றாக நார்வே விளங்குகிறது. அப்படியிருந்தும் இந்த நாட்டில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு அதிகமான வரி விதிக்கப்படுகின்றன. அதாவது, கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதன் மூலம் இலாபம் பார்த்து, அந்த பணத்தில் நாட்டின் இவி சார்ஜிங் வசதிகளை நார்வே மேம்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications








