போக்குவரத்து விதிகளை மீறும் காவலர்கள் குறித்து தகவல் தருவோர்க்கு ரூ.1000 பரிசு - அதிரடி திட்டம் அமல்
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் காவலர்கள் குறித்து தகவல் தரும் பொதுமக்களுக்கு 1,000 ரூபாய் சன்மானம் அளிக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
விதிமீறல் என்பது பொதுமக்களுக்கு மட்டுமல்ல காவல்துறையினருக்கும் பொருந்தும் என்பதனை மெய்ப்பிக்கும் விதமாக புதிய திட்டம் ஒன்று நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

சாலைகளில் வாகனத்தில் செல்லும் போது கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

உதாரணமாக ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு சான்று, இருசக்கரங்களில் என்றால் ஹெல்மெட் அணிவது, கார்களில் என்றால் சீட் பெல்ட் போடுதல் உள்ளிட்ட விதிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டியவையாகும்.

இது மட்டுமல்லாமல் சாலையில் வாகனம் ஓட்டும்போது கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகளும் நடைமுறையில் உள்ளது.

ஆனால், இந்த விதிமுறைகளை ஒழுக்கமாக கடைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.

போக்குவரத்து விதிமுறைகள் மீறப்படுவதால், சாலையில் செல்லும் அப்பாவி மக்கள் கூட விபத்துக்களில் சிக்கும் அவலநிலை ஏற்பட்டு விடுகிறது.

எனவேதான் விதிமுறைகளை மீறுவோருக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் உள்ளிட்டவைகளை விதிக்கின்றனர்.

போக்குவரத்து விதிமுறைகள் பொதுமக்களுக்கு மட்டுமல்ல காவல்துறையினருக்கும் பொதுவானதே.

விதிகளை அமல்படுத்தும் காவல்துறையினரே விதிமுறைகளை மீறும்போது அது மோசமான முன்னுதாரணமாக அமைந்துவிடுகிறது. காவல்துறையினர் விதிமீறலில் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது.

முதலில் இது களையப்பட வேண்டும் அப்போது தான் பொதுமக்களும் ஒழுக்கத்தை பேணுவர் என்ற கோரிக்கையை பலராலும் முன்வைக்கப்படுகிறது.

இதனை தற்போது பஞ்சாப் மாநில காவல்துறையினர் சவாலாக எடுத்து புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதன்படி போக்குவரத்து விதிமுறைகளை மீறும் காவல்துறையினர் குறித்து தகவல் தருவோர்க்கு 1,000 ரூபாய் ரொக்கப்பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதுமைத் திட்டம் நாட்டிலேயே முதல் முறையாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ரோஹ்தக் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிகளை காவலர்கள் முதலில் ஒழுக்கமாக கடைப்பிடித்தால் தான் பொதுமக்களுக்கு அவர்கள் முன்னுதாரானமாக விளங்க முடியும் என்ற வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ரோஹ்தக் மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் பங்கஞ் நைன் இந்த புதுமை திட்டத்தை நாட்டிலேயே முதல் முறையாக அமல்படுத்தியுள்ளார்.

போக்குவரத்து விதிகளை மீறும் காவல்துறையினர் பற்றிய படங்கள் மற்றும் வீடியோக்களை வாட்ஸ் அப்-பில் அனுப்பும் பொதுமக்களுக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பிரத்யேக வாட்ஸ் அப் எண் (9996464100) ஒன்றையும் காவல்துறை கண்காணிப்பாளர் பங்கஞ் அறிவித்துள்ளார்.

கடந்த வாரம் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்று கிடைத்து வருகிறது.

புகார் அனுப்ப அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ் அப் எண்ணில் விதிமீறலில் ஈடுபடும் காவலர்கள் குறித்த தகவல்கள் குவிந்து வருவதாக தெரியவந்துள்ளது.

விதிமீறலில் ஈடுபடும் காவலர்கள் குறித்து ஒரு நாளைக்கு சராசரியாக 50 புகார்கள் குவிவதாக கூறுகின்றனர் அதிகாரிகள்.

பொதுமக்கள் அனுப்பும் தகவல்கள் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு விதிமீறலில் ஈடுபட்ட காவலர்களிடத்தில் அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கும் ரூ.1000 சன்மானம் கிடைப்பதால் காவல்துறையினரும் தற்போது ஒழுக்கமாக செயல்படத்துவங்கியுள்ளனர்.

விதி என்பது பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் மட்டுமல்ல அனைவருக்கும் பொதுவானது என்ற அடிப்படையில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யம் அளிக்கும் வகையில் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்கள் குறித்து ரோஹத் மாவட்ட காவல்துறையினருக்கு தகவல்கள் வந்து குவிகிறதாம்.

அந்த தகவல்களை அந்தந்த மாவட்ட காவல்துறையினருக்கு அனுப்பி வைக்கப்படுகிறதாம்.

ஒரு மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டம் அடுத்த மாவட்ட காவல்துறையினரையும் ஒழுக்கமாக செயல்படச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலும் இதைப் போன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டால் விதிமீறல் அற்ற ஒழுக்கமான சமுதாயம் உருவாகும் என்பது நிச்சயம்.


Click it and Unblock the Notifications








