ஹெல்மெட் மட்டுமல்ல...இந்த சர்டிபிகேட்டும் கட்டாயம்... வரப்போகும் அதிரடி மாற்றங்கள் பற்றி தெரியுமா?
டூவீலர் விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க ஹெல்மெட் கட்டாயம் என்ற உத்தரவு பல்வேறு இடங்களில் அமலில் இருந்து வருகிறது. இனி ஹெல்மெட் மட்டும் கட்டாயம் அல்ல.
டூவீலர் விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க ஹெல்மெட் கட்டாயம் என்ற உத்தரவு பல்வேறு இடங்களில் அமலில் இருந்து வருகிறது. இனி ஹெல்மெட் மட்டும் கட்டாயம் அல்ல. மற்றொரு சர்டிபிகேட்டும் கட்டாயம் என்ற நிலை வந்துள்ளது. அது என்ன? என்பதை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

5 லட்சம் விபத்துக்கள்
இந்தியாவில் நாளுக்கு நாள் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. நமது நாட்டில் ஒரு ஆண்டுக்கு ஏறத்தாழ 5 லட்சம் விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதில், சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

டூவீலர் ஓட்டிகள்தான் அதிகம்
விபத்துக்களில் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் டூவீலர் ஓட்டிகளாகவே இருக்கின்றனர். எனவே டூவீலர் விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஹெல்மெட் கட்டாயம்
டூவீலர் விபத்துக்களை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளில் முதன்மையானதாக இருப்பது ஹெல்மெட் கட்டாயம் என்ற உத்தரவுதான். ஹெல்மெட் அணியாமல் வரும் டூவீலர் ஓட்டிகளிடம் ஸ்பாட் ஃபைன் வசூலிக்கப்படுகிறது.

க்ளாஸ் எடுக்கும் போலீஸ்
ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் ஸ்பாட் ஃபைன் வசூலிப்பதுடன் போலீசார் நின்று விடுவதில்லை. ஹெல்மெட் அணியாதவர்களை அழைத்து சென்று, அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நீண்ட நெடிய நேரம் விழிப்புணர்வு வகுப்புகளை எடுக்கின்றனர். அதன்பின்பே அவர்களை அனுப்பி வைக்கின்றனர்.

புதிய பரிந்துரைகள்
இதனிடையே சாலை விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பது தொடர்பான ஆய்வுகளை நடத்துவதற்காக போக்குவரத்து துறையின் இணை செயலாளர் அபே டாம்லே தலைமையிலான கமிட்டி ஒன்றை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அமைத்திருந்தது. இந்த கமிட்டி தற்போது பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

பிஐஎஸ் கட்டாயம்
டூவீலர் ஹெல்மெட்களுக்கு பிஐஎஸ் சர்டிபிகேட் பெறுவதை கட்டாயமாக்குவது என்பது அந்த பரிந்துரைகளில் முக்கியமானது. அதாவது டூவீலர் ஹெல்மெட்கள் பிஐஎஸ் சர்டிபிகேட் பெற்றதாக இருக்க வேண்டும் என்பதுதான் அந்த பரிந்துரை.

எடையும் குறைகிறது
அதுமட்டுமின்றி தற்போது உள்ள ஹெல்மெட்களை விட சுமார் 300 கிராம் எடை குறைவாக புதிய ஹெல்மெட்களை தயாரிக்க வேண்டும் என்றும் அந்த கமிட்டி தனது பரிந்துரைகளில் தெரிவித்துள்ளது.

கடும் நடவடிக்கைகள்
இந்த பரிந்துரைகள் அமலுக்கு வந்தபின், கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பிஐஎஸ் சர்டிபிகேட் இல்லாத போலி ஹெல்மெட் அணிபவர்கள் மீது நடவடிக்கைகள் பாயும்.

பிஐஎஸ்
ஒகே பாஸ்., அது என்ன பிஐஎஸ் என்கிறீர்களா? ப்ரூ ஆப் இந்தியன் ஸ்டேண்டர்ட்ஸ் என்பதன் சுருக்கமே பிஐஎஸ். அதாவது இந்திய தர நிர்ணய ஆணையம். இந்திய நுகர்வு பொருட்களின் தர நிர்ணயம், தரச்சான்றிதழ் வழங்குவது மற்றும் தர மதிப்புகளை ஒழுங்குபடுத்துவது இந்த அமைப்பின் முக்கிய பணிகளாகும்.

ஹெல்மெட் உற்பத்தியாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
கட்டாய பிஐஎஸ் சர்டிபிகேஷனின் கீழ் ஹெல்மெட்களை கொண்டு வரும் மத்திய அரசின் முடிவை, ஹெல்மெட் உற்பத்தியாளர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். முழுமையான பாதுகாப்புடன் ஹெல்மெட் அணிவதை இது ஊக்குவிக்கும் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உலா வரும் போலி ஹெல்மெட்கள்
இந்தியாவில் தற்போது போலியான ஹெல்மெட்கள் பலவும் உலா வந்து கொண்டிருக்கின்றன. அந்த போலியான ஹெல்மெட்களை அணிவதால், எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை. இதை எல்லாம் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசின் உத்தரவு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தரமான ஹெல்மெட்டே உயிர் காக்கும்
டூவீலர் ஓட்டிகள் தரமான ஹெல்மெட்களை அணிந்திருக்கும்போது, விபத்துக்கள் நிகழ்ந்தாலும் கூட, உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் 42 சதவீதம் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவேதான் தரமான ஹெல்மெட்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

சமரசம் வேண்டாம்
விலையில் சமரசம் செய்து கொள்ளாமல் தரமான ஹெல்மெட்டை மக்கள் வாங்கும்போது, விபத்துக்களில் சிக்கி கொண்டாலும் கூட, உயிர் பிழைக்கும் வாய்ப்புகளை அதிகரித்து கொள்ளலாம்.

சச்சின் கோரிக்கை ஏற்பு...!
கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் கூட, போலி ஹெல்மெட் விற்பனையை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த சில வாரங்களுக்கு முன்தான், மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரிக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications