ரூ55,000 வண்டிக்கு ரூ15.44 லட்சத்திற்கு நம்பர் பிளேட்! இது மட்டுமல்ல இன்னும் எத்தனை இருக்குது தெரியுமா?
இந்தியாவில் வாகனங்களுக்கு பேன்ஸி நம்பர் வாங்குவது என்பது பிரபலமாக மாறி வருகிறது. பலர் தங்கள் வாகனங்களுக்கு பேன்ஸி நம்பர் பிளேட்டை பொருத்த விரும்புகின்றனர். சிலர் வாகனத்தின் விலையை விட பேன்ஸி நம்பரை அதிக விலை கொடுத்து வாங்கும் சம்பவங்கள் கூட நிகழ்ந்துள்ளது. அதுவும் கறிப்பிட்ட ஒரு நகரில் இப்படியாக பல தருணங்கள் ஏற்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டைம்ஸ் ஆப் இந்தியா தளம் வெளியிட்டுள்ள தகவலின் படி கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2025ம் ஆண்டு ஜூலை மாதம் வரை மொத்தம் சண்டிகர் பகுயில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு பேன்ஸி நம்பரை ஏலத்தில் எடுத்தவர்கள் வாகனத்தின் விலையை விட பேன்ஸி நம்பரை அதிக விலை கொடுத்து வாங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு நபர் ஏலம் மூலம் ரூ15.44 லட்சத்திற்கு ஒரு பேன்ஸி நம்பரை ஏலம் எடுத்துள்ளார். இந்த நம்பரை அவர் வெறும் ரூ55,000 மதிப்பிலான தனது ஸ்கூட்டருக்கு பதிவு செய்துள்ளார். இந்த நம்பர் பிளேட்டிற்காக அவர் செலுத்திய தொகை ஸ்கூட்டர் விலையை விட 28 மடங்கு அதிகமாகும்.
இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் ஒருவர் ரூ4.95 லட்சத்திற்கு ஒரு பேன்ஸி நம்பரை பதிவு செய்தார். இந்த நம்பரை வெறும் ரூ59,336 மதிப்பிலான ஒரு டூவீலருக்கு பதிவு செய்துள்ளார். இதுவும் பலரை ஆச்சரியப்படுத்தியது.

கடந்த 2023ம் ஆண்டு ஒருவர் ரூ5.75 லட்சத்திற்கு ஏலத்திற்கு எடுத்த பேன்ஸி நம்பரை வெறும் ரூ64,024 மதிப்பிலான ஒரு வாகனத்திற்கு பதிவு செய்துள்ளளார். இந்த காலகட்டத்தில் ரூ1.28 லட்சத்திற்கும் குறைவான மதிப்பு கொண்ட 9 டூவீலருக்கு ஒன்றை இலக்க பதிவு எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களுக்கு வழங்கப்பட்ட பேன்ஸி நம்பர்கள் குறைந்தபட்சம் ரூ1.70 லட்சம் முதல் ரூ15.44 லட்சம் வரை ஏலம் போயுள்ளது.
அதே போல ரூ9.56 லட்சம் முதல் ரூ13.22 லட்சம் வரை மதிப்பு கொண்ட வாகனங்களுக்கான நம்பர்பிளேட்டுகள் ரூ12.21 லட்சம் முதல் ரூ24.40 லட்சம் வரை ஏலம் போயுள்ளது. அதிக விலை கொடுத்து நம்பர் பிளேட்டை வாங்கும் பலர் குறைந்த விலை கொண்ட வாகனங்களில் அதை பொருத்துகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. முதலில் வாகன நம்பர் பிளேட் பதிவிதற்கான கால அவகாசம் குறைவாக இருப்பது தான் என கூறப்படுகிறது.
ஒருவர் வாகனத்தின் பேன்ஸி நம்பரை ஏலம் மூலம் எடுத்துவிட்டால் அடுத்த 30 நாளுக்குள் அந்த நம்பரை வாகனங்களுக்கு பதிவு செய்ய வேண்டும். இல்லை என்றால் அந்த நம்பர் மீண்டும் ஏலத்திற்கு வந்துவிடும். ஒருவர் தனக்கு ராசியான நம்பர் ஒன்றை ஏலத்தில் எடுக்கிறார் என்றால் அவரால் உரிய காலத்திற்குள் அவர் விரும்பிய காரை வாங்க முடியாத சூழ்நிலை ஏற்படலாம். வாகனத்திற்கான காத்திருப்பு காலம் முதல் பல காரணங்கள் இதில் இருக்கிறது. இருந்தாலும் அந்த நம்பரை விட்டுவிடக்கூடாது என்பதற்காக ஏதாவது உடனடியாக கிடைக்கும் குறைந்த விலை வாகனத்தை வாங்கி அந்த வாகனத்திற்கு தனது ராசியான நம்பரை பதிவு செய்து விடுகிறார். இதனால் தான் இந்த முரண் ஏற்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பேன்ஸி நம்பர் பிளேட் ஏகப்பட்ட லட்சங்களுக்கு ஏலம் போகிறது. இதை ஏலம் விடுவது மூலம் அரசு அதிகம் சம்பாதித்து வருகிறது.தமிழக அரசும் தற்போது ஆன்லைன் மூலம் பேன்ஸி நம்பர் ஏலத்தை நடத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications








