டைட்டானிக் கப்பலை நோக்கி மீண்டும் பயணம்? இரத்த வாசனை கூட இன்னும் போயிருக்காது - ஓசன்கேட்டின் அதிரடி முடிவு!!
உடைந்த நிலையில் கடலுக்கு அடியில் கிடக்கும் டைட்டானிக் கப்பலை பார்க்க போன 5 தொழிலதிபர்கள் உயிரிழந்த சம்பவத்தால் எழுந்த சர்ச்சைகள் இன்னும் முழுவதுமாக கூட அடங்காத நிலையில், 2024ஆம் ஆண்டில் மீண்டும் டைட்டானிக் கப்பலிடம் கொண்டு செல்வதாக ஓசன்கேட் நிறுவனம் சமீபத்தில் மீண்டும் ஓர் அதிர்ச்சிக்கர விளம்பரத்தை வெளியிட்டது. இந்த நிலையில் இந்த விளம்பர அறிவிப்பில் புதியதொரு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடலில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக உடைந்த, சிதலடைந்த நிலையில் கிடக்கும் டைட்டானிக் கப்பலை இந்த 100 வருடங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டுள்ளனர். டைடானிக் திரைப்படத்தை எடுத்த ஜேம்ஸ் கேமரூன் பல ஆயிரம் அடி ஆழத்தில் கிடக்கும் டைட்டானிக் கப்பலை 30-40 முறை பார்வையிட்டுள்ளார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

ஆதலால், மூழ்கிய டைட்டானிக் கப்பலை சென்று பார்வையிடுவது ஒன்றும் சவாலான காரியம் அல்ல. மனிதன் இதனை காட்டிலும் அசாத்தியமான காரியத்தை எல்லாம் தினந்தோறும் செய்து வருகிறான். ஆனால், ஓசன்கேட் என்ற நிறுவனத்தின் நீர்மூழ்கி கப்பலில் கோடிக்கணக்கில் கட்டணத்தை செலுத்தி பார்வையிட சென்ற 5 தொழிலதிபர்கள் இறந்த செய்தி உலக மக்கள் அனைவரையும் ஆதிர்ச்சியடைய செய்தது.
ஏனெனில் கோடிக்கணக்கில் செலவு செய்து 5 தொழிலதிபர்கள் செல்கிறார்கள் என்றால், அந்த நீர்மூழ்கி கப்பலில் சோதனைகள் மற்றும் பழுது பார்ப்புகள் எந்த அளவிற்கு இருந்திருக்கும் என்பதை நான் கூற வேண்டியது இல்லை. இருப்பினும், அந்த நீர்மூழ்கி கப்பலால் இயற்கையை சமாளிக்க முடியவில்லை. இந்த விஷயம் உலகளவில் ட்ரெண்ட் ஆனதற்கு மற்றொரு காரணம் டைட்டன் என்ற இந்த நீர்மூழ்கி கப்பலின் பெயர் ஆகும். 'டைட்டானிக்கை சந்திக்க சென்ற டைட்டன் நசுங்கியது' என பல செய்திகளில் இது தலைப்பாகியது.

பெரும் செல்வாக்கிற்கு சொந்தக்காரர்கள் உயிரிழந்துள்ளதால், இந்த விஷயத்தில் அமெரிக்க அரசாங்கத்திற்கும், ஓசன்கேட் நிறுவனத்திற்கும் பெரிய அழுத்தம் உருவாகும் எனவும், ஓசன்கேட் நிறுவனம் இழுத்து மூடவும் வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டது. ஆனால் இவ்வளவு அமளிதுமளிக்கு இடையே தனது 2024ஆம் ஆண்டிற்கான டைட்டானிக் நோக்கிய பயணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது ஓசன்கேட் நிறுவனம்.
ஓசன்கேட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியானது மட்டுமின்றி, மற்ற இணையத்தள பக்கங்களில் 2024 ஓசன்கேட் பயணம் குறித்த விளம்பரங்கள் இடம்பெற ஆரம்பித்தன. 2024 ஜூன் 12ஆம் தேதியில் இருந்து 20ஆம் தேதி வரையில் ஒரு பயணமும், 21ஆம் தேதியில் இருந்து 29ஆம் தேதி வரையில் ஒரு நீர்மூழ்கி கப்பல் பயணமும் மேற்கொள்ளப்படும் என ஓசன்கேட் சார்பில் அறிவிக்கப்பட்டது.

5 பணக்காரர்கள் இறந்த இடத்தில் இன்னும் இரத்த வாசனை கூட போகாத நிலையில், இப்படிப்பட்ட விளம்பரத்தையும், அறிவிப்புகளையும் பார்த்த நெட்டிசன்கள் ஓசன்கேட் நிறுவனத்தை கடிந்து கொள்ள ஆரம்பித்தனர். அதன் எதிரொலியாக, 2024ஆம் ஆண்டிற்கான டைட்டானிக் கப்பலை நோக்கிய பயணித்தை பற்றிய விளம்பரங்களை தற்காலிகமாக ஓசன்கேட் நிறுவனம் நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக, ஓசன்கேட் வெப்சைட்டிலும் இந்த பயணத்திற்கான அறிவிப்புகள் நீக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஓசன்கேட் நிறுவனம் வழக்கமாக ஜூன் மாதத்தில்தான் டைட்டானிக் கப்பலை நோக்கிய தனது நீர்மூழ்கி கப்பல் பயணத்தை மேற்கொள்வது வழக்கம். ஏனெனில், கோடைக்காலம் என்பதால் இந்த மாதமே அட்லாண்டிக் பெருங்கடலின் இருள் & குளிர்ச்சி குறைந்து, மிகுந்த ஆழத்திற்குள் செல்ல ஏற்ற மாதம் ஆகும். ஒரு வருடத்திற்கான பயணங்கள் முடிந்த கையோடு அடுத்த ஆண்டிற்கான பயணம் குறித்த அறிவிப்புகளையும், விளம்பரங்களையும் ஓசன்கேட் வெளியிடுவது வழக்கம்.


Click it and Unblock the Notifications









