மக்களுடன் மக்களாக பஸ்ஸில் டிக்கெட் எடுத்து பயணித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்... ஏன் தெரியுமா?
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பஸ்ஸில் டிக்கெட் எடுத்து பயணம் செய்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில், மோ பஸ்கள் (Mo Bus) இயக்கப்பட்டு வருகின்றன. புவனேஸ்வர் நகரில், மோ பஸ் சேவையை, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி தொடங்கி வைத்தார். அன்று முதல் மோ பஸ் சேவைக்கு புவனேஸ்வர் நகர மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

புவனேஸ்வர் நகரில் இயக்கப்பட்டு வரும் மோ பஸ்களில், வை-பை மற்றும் சிசிடிவி கேமரா உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன. இதற்கென ஆன்லைன் டிக்கெட்டிங் சிஸ்டமும் உள்ளது. மேலும் ஸ்மார்ட்போன் ஆப்பும் இருக்கிறது. தற்போதைய நிலையில் புவனேஸ்வர் நகரில் மொத்தம் 310 மோ பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மொத்தம் 25 வழித்தடங்களில் இந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த சூழலில் மோ பஸ் சேவை தொடங்கப்பட்டு தற்போது ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மோ பஸ்ஸில் பயணம் செய்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி கடந்த புதன் கிழமை (நவம்பர் 6) நடந்தது. பிஜூ பட்நாயக் ஏர்போர்ட் சதுக்கத்தில் இருந்து ஜெயதேவ் பவன் வரை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பயணம் செய்தார். மாநிலத்தின் முதல்வர் என்றபோதிலும், நவீன் பட்நாயக் இந்த பஸ்ஸில் டிக்கெட் எடுத்துதான் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒடிசாவில் நவீன் பட்நாயக்கிற்கு மக்கள் செல்வாக்கு மிகவும் அதிகம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இந்த சூழலில் அவர் பஸ்ஸில் டிக்கெட் எடுத்து பயணம் செய்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த பயணத்தின்போது அவர் பயணிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பயணிகளுக்கு அவர் ஆட்டோகிராப்பும் வழங்கினார். இந்த பயணத்திற்கு பிறகு, எலெக்ட்ரிக் பஸ்கள் தொடர்பான அறிவிப்பு ஒன்றையும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வெளியிட்டார். சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்பதால், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இதற்காக ஜிஎஸ்டி குறைப்பு, ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் மானியம் என எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு தவிர பல்வேறு மாநில அரசுகளும் கூட எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் பஸ்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இந்த வரிசையில் கூடிய விரைவில் 50 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். முன்னதாக பொதுமக்கள் தங்களின் பயணங்களுக்கு மோ பஸ்களை தேர்வு செய்வதை பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது எனவும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறினார்.

இதனிடையே தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, டெல்லி உள்பட பல்வேறு மாநில அரசுகள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, மாநில அரசுகளின் சார்பிலும் பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








