அதிகாரிகளின் அதிரடியால் அலறும் வாகன ஓட்டிகள்... ஒரே நாளில் வசூலான அபராத தொகை எவ்வளவு தெரியுமா?
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம், போலீசார் மற்றும் ஆர்டிஓ அதிகாரிகள் அதிரடி காட்டி வருகின்றனர்.

இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.

ஆனால் பல்வேறு மாநில அரசுகளே புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்தன. ஒரு சில மாநில அரசுகள் அபராத தொகையை குறைத்தன. இன்னும் சில மாநிலங்களோ புதிய மோட்டார் வாகன சட்டத்தை நிறுத்தி வைத்தன. இதில், ஒடிசாவும் ஒன்று. ஒடிசா மாநில அரசு தொடர்ச்சியாக இரண்டு கட்டங்களாக 6 மாதங்களுக்கு இந்த விதிமுறைகளில் இருந்து தளர்வு வழங்கியது.

இந்த சூழலில், கடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஒடிசா மாநிலத்திலும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த முதல் நாளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து, 1.06 கோடி ரூபாயை ஒடிசா மாநில அரசு அபராதமாக வசூலித்துள்ளது.

ஒடிசா மாநில ஆர்டிஓ அதிகாரிகள் மற்றும் போலீசாரால் இந்த அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தில் ட்ரிபிள் ரைடு சென்றதற்காக 126 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டியதற்காக 49 பேரிடம் இருந்து அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

தவறான பாதையில் பயணம் செய்ததற்காக 10 பேரும், ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டியதற்காக 1,831 பேரும், சீட் பெல்ட் அணியாத காரணத்திற்காக 349 பேரும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 24 பேரும், ஓவர் ஸ்பீடு குற்றத்திற்காக 277 பேரும் தண்டிக்கப்பட்டுள்ளனர் என அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மொத்தமாக 1.06 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், ஆர்டிஓ அதிகாரிகள் 1,785 பேரிடம் இருந்து 88 லட்ச ரூபாயை வசூலித்துள்ளனர். அதே சமயத்தில் காவல் துறை தரப்பில், 2,112 பேருக்கு 18 லட்ச ரூபாய் மதிப்பில் சலான்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அபராத தொகைகளை குறைக்க வேண்டும் என எதிர்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏ சுரேஷ் ரௌத்ரி கூறுகையில், ''அபராத தொகைகளை அரசு 15 நாட்களுக்குள் குறைக்காவிட்டால், மிகப்பெரிய போராட்டத்திற்கு நாங்கள் அழைப்பு விடுப்போம்'' என்றார். சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதே சமயத்தில் உரிய இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

அதேபோன்று ஆம்புலன்ஸ் போன்ற அவசர கால வாகனங்களுக்கு வழி விடாதவர்களுக்கு போலீசார் மற்றும் ஆர்டிஓ அதிகாரிகளால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க முடியும். பெர்மிட் இல்லாத வாகனங்களுக்கான அபராத தொகையும் 10 ஆயிரம் ரூபாய்தான். அதே சமயம் பதிவு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications